“நண்பர்களே! நான் ஒரு சமயம் எனது குழந்தைகளுக்கு நெல் மணிகளை உணவாக்கி வைத்திருந்தேன்.
ஆளுக்கு 3 நெல் மணிகளைக் கொடுக்க நினைத்தேன். ஆறு நெல் மணிகள் மிச்சமாயின.
சரி என்று ஆளுக்கு நான்கு நெல்மணிகளைக் கொடுக்க நினைத்தேன். அப்போது 1 நெல் மணி மிஞ்சியது.
ஆளுக்கு 5 மணிகளைத் தர நினைத்தால் 4 மணிகள் குறைவாக இருந்தன.
என்ன செய்வது என விழித்த பின் நான் 1 நெல் மணியைத் தின்றுவிட்டு மீதம் இருந்தவற்றை ஆளுக்கு நான்காகப் பிரித்துக் கொடுத்தேன்.
என்றால் என் குழந்தைகள் எத்தனை பேர்? நெல்மணிகள் எத்தனை? இது தான் எனது புதிர்?” என்ற கோழி கோமளா கூறிவிட்டு யார் பதில் கூறப் போகிறார்களோ என்று ஆவலுடன் எதிர்பார்த்தது.
ஆனால் வெளிநாட்டுப் பறவைகளோ வழக்கம்போல விழித்தன.
“ஏய் நம்மவர்களில் தெரிந்தவர்கள் யாராவது இருந்தாலும் பதில் கூறலாம்” என்று கழுகு அறிவித்தது. அதன் பின் சிறிது நேரம் மௌனமே நிலவியது.
“எங்கே அந்தச் சின்னான்” என்று கூறிவிட்டுச் சின்னானைக் குறுமணி தேடியது.
பொந்தினுள் அடைந்து கிடந்த ஆந்தை அருக்காணி ஒரு விடையைக் கூறிவிட்டு “என்ன கோமளா சரிதானா?” என்று கேட்டது.
“யாரு அருக்காணி அக்காவா? நீங்க சொன்னா சரியாகத்தானே இருக்கும்” என்று பதில் கூறிய கோழி கோமளா தனது புதிருக்கு விடை கிடைத்த திருப்தியில் மெதுவாக நகர்ந்து தன் வீட்டை நோக்கி விரைவாகச் சென்றது.
“ஒன்பதாவது புதிரை கோழி கோமளா கூறியது. அது தனது குழந்தைகளுக்கு நெல் மணிகளைப் பகிர்ந்த கதையைப் புதிராகக் கேட்டது. அதற்கு விடையை ஆந்தை அருக்காணி கூறியது.
அந்த விடை என்ன என்பதை அருக்காணியே கூறலாமல்லவா” என்றது வெளவால் வாணி.
“சரி நானே விடையைக் கூறுகிறேன்” என்று அருக்காணி விடையைக் கூற ஆரம்பித்தது.
கோமளாவின் புதிரின்படி
ஆளுக்கு 3 வீதம் 6 மீதம் என்றும்,
ஆளுக்கு 4 வீதம் 1 மீதம் என்றும்,
ஆளுக்கு 5 வீதம் 4 குறைவாக இருந்தன என்றும், வந்தால் 1 நெல்லைத் தின்றுவிட்டு ஆளுக்கு நான்காகப் பகிர்ந்து கொடுத்ததாகக் கூறியது.
5 பேர் என்றால் 4X5 = 20 என்றும் அது ஒன்றைத் தின்றதல்லவா ஆக 21 நெல் மணிகளை 5 பேருக்குப் பங்கிட்டு மேற்கண்டவாறு பகிர்ந்திருக்கும் என நினைத்து நான் பதில் சொன்னேன். அது சரியான விடைதான் எனக் கோமளாவும் ஒத்துக் கொண்டது” என்ற ஆந்தை அருக்காணி கூறியது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)