பொட்டல் வெளியும் பொன்னாகும்

காத்திரு

பொட்டல் வெளியில் பொசுக்கென

பொன்னான வான்துளி பொங்கி

பொலபொலவென வளமாக விழ

பொன்வண்டு ஒன்று வலமாக

பூக்களைத் தேடி அலைய

புண்ணான மனம் காத்திருக்க

 

புலம்பெயர்ந்த புள் கீழே

பூவிதையை ஈரமண்ணில் தூவ

புதைந்த விதை விளைய

பொறுமையாக எட்டி எகிறிய

புதிய செடி ஒன்று

பகல்கால நிலவு போல

புல்லிலா மண்ணில் மன்றாட

பூமியின் மணம் மணக்க

புன்னகையோடு பூ ஒன்று

புதிதாய் கனிவாய் பூக்க

 

பூவை நாடிய வண்டு

பூந்தேனைக் கண்டு உண்டு

பூரித்தது மகிழ்வாக இதமாக!

பொட்டல் வெளியும் பொன்னாகும்

பொன்வண்டாய் காத்திருந்தால்…

 

கி.அன்புமொழி

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.