பொன்னாங்கண்ணி – ஏழைகளின் தங்கபஸ்பம்

கீரை என்றதும் அதில் நிரம்பியிருக்கும் சத்துகளே நம்முடைய நினைவிற்கு வரும்.

அப்படிப்பட்ட கீரைகளின் தலைவன் பொன்னாங்கண்ணி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

இக்கீரையை உண்டு வர அது நம்முடைய மேனியைப் பொன்னைப் போன்று மின்னச் செய்யும்.

ஆதலால்தான் பொன் போல் மின்னுவதைக் காண்பாய் நீ (பொன்+ஆம்+காண்+நீ) என்னும் பொருள்படும்படி ‘பொன்னாங்கண்ணி’ என்று அழைக்கப்படுகிறது.

இக்கீரையின் கிளையை வைத்தால்கூட எளிதில் வளரும் வளரியல்பைக் கொண்டும் மேனிக்கு அழகையும் தந்து விலைமலிவாகவும் கிடைப்பதால் இது ஏழைகளின் தங்கபஸ்பம் என்றழைக்கப்படுகிறது.

இக்கீரை உணவாகவும் மட்டுமல்லாமல் பலவித நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது.

இக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்றவைகள் காணப்படுகின்றன.

இக்கீரை ‘அமரந்தேசியே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் ‘அல்டர்நேந்திரா சிசிலிஸ்’ என்பதாகும். இக்கீரை சீதை, கொடுப்பை, சீதேவி என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கீரை வளமான பகுதிகளிலும் நீர்வளம் நிறைந்த இடத்திலும் செழித்து வளரும்.

இது இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரேசில், அமெரிக்கா, அர்ஜென்டினா, எகிப்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டிற்காகவும் வர்த்தக நோக்கிலும் வளர்க்கப்படுகிறது.

பொன்னாங்கண்ணிக் கீரை நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி என இருவகைகளில் காணப்படுகிறது. இதில் நாட்டுப் பொன்னாங்கண்ணி பச்சைநிற இலைகளையும், சீமைப் பொன்னாங்கண்ணி சிவப்புநிற இலைகளையும் கொண்டிருக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை பற்றிய பதார்த்த குணப்பாடல்

காசநோய், இருமல், கண்நோய்கள், வெப்பநோய்கள், வாதநோய், தொற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு பொன்னாங்கண்ணி கொடியில் உள்ள கீரையை உண்ண சுகம் கிடைக்கும் என்பதே இதன் பொருளாகும்.

மருத்துவ பயன்கள்

பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலில்கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்பார்கள்.

இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கண்ணாடி அணிய வேண்டிய தேவையே இருக்காது.

தைலமாக

இக்கீரையைத் தைலமாகத் தயாரித்தும் பயன்படுத்தலாம். அதாவது கீரையின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகுபதம் வரும் வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.

அந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண் புகைச்சல், உடல் சூடு ஆகிய பிரச்சனைகள் சரியாகும். புத்துணர்வும் கிடைக்கும். கண் பார்வையும் தெளிவாகும்.

இக்கீரையை பருப்புடன் சமைத்து வெறும் சாதத்தில் பிசைந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடலுக்கு ஆரோக்கியமும் முகப்பொலிவும் கிடைக்கும்.

உடல் எடையை சீராக வைக்க

உடல் எடையை சீராக வைக்க இக்கீரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொன்னாங்கண்ணிக் கீரையுடன் உப்பும் மிளகும் சேர்த்து சாப்பிட உடல்எடை குறையும்.

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் துவரம் பருப்பு, நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல்எடை கூடும். இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல்வலிமை பெறும். எலும்புகள் உறுதியாகும்.

கண்பார்வை

பொன்னாங்கண்ணிக் கீரையில் விட்டமின் ஏ மிகுதியாக உள்ளதால் தொடர்ந்து சாப்பிட்டுவர கண்பார்வை தெளிவாகும்.

கண் சிவத்தல், கண் அயற்சி ஆகியவற்றையும் இக்கீரைப் பொரியல் சரி செய்கிறது.

இக்கீரையை தொடர்ந்து உண்டுவர உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவதோடு தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு வாய்துர்நாற்றத்தையும் போக்குகிறது.

சத்துக்கள் நிறைந்த மூலிகையான பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து உடல்நலமும், உடல் பொலிவும் பெறுவோம்.

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.