பொழுது – கவிதை

பொழுது

கழுகு நோக்க

நொறுங்கி நெளியும்

சதையற்ற விலாக்கூடு

அசைந்துகொண்டிருந்தது பசியால்

குழந்தை…

வெடிக்காத வெடியென்று நம்பி

கைப் பற்றியச் சிறுவனை பார்த்த

பார்வையில் தெரித்த கணம்

வெடித்து விடுகிறது

மனசு…

சிவப்பு சிக்னல் பார்த்ததும்

அப்பாடா

என்றாகிப் போனதில்

அதிர்ந்தது

பச்சை சிக்னல் போட்டதும்

குறுக்கே

தள்ளாடி விழும் குடிகாரனை

தடுக்க முடியாத போது…

விரட்டும்

துப்பாக்கியுடன் ஓடுபவன் முன்

மூர்ச்சையான

சிறுவன் முகத்தில் நீர்த் தெளிக்க

மலர்ந்து கொள்கிறது

பார்த்துக் கசிந்த கண்கள்…

முரடர்கள் சூழ

ஒருத்தியின் உடலைக் கிழித்து வாழையென

பிழிந்து வழிந்த உயிர்ச் சப்தம்

நிஜமான செய்தியாக

திரைப்படமென அறிந்து

உயிர்ப்பித்துக் கொண்ட நான்

நிலைக்கு வந்து விழிநீர் விஞ்சும்

வியர்வைத் துடைக்க…

இப்படி

ஏதேனும் முரண்களின்

கொடூர இம்சைகள் நிகழ்ந்து விடுவதில்

நிம்மதியாகக் கழிந்து விடவில்லை

பொழுது….

கா.அமீர்ஜான்

கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.