மசாலா சப்பாத்தி பயண நேரங்களில் எடுத்துச் செல்லப்படும் உணவுகளில் ஒன்று.
இதனைத் தயார் செய்ய மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், இதற்குத் தொட்டுக் கொள்ள சைடிஷ் ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
சுவையான இந்த உணவு ஆரோக்கியமானதும் கூட. இதனைத் தயார் செய்ய காய்ந்த வெந்தயக் கீரையான கஸ்தூரி மேத்தியோ அல்லது பசுமையான வெந்தயக் கீரையோ பயன்படுத்தப்படுகிறது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 200 கிராம்
ஓமம் – 2 ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன்
புதினா இலை – 3/4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி – 3/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
கடலை எண்ணெய் – சப்பாத்தி சுட தேவையான அளவு
மசாலா சப்பாத்தி செய்முறை
கோதுமை மாவினை வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் கல், தூசி நீக்கிய ஓமத்தைச் சேர்க்கவும்.
அதில் கரம் மசாலா பொடி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அதில் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் கஸ்தூரி மேத்தி மற்றும் நெய் சேர்க்கவும்.
எல்லாப் பொருட்களையும் கோதுமை மாவுடன் நன்கு ஒருசேரக் கலந்து கொள்ளவும்.
அதனுடன் தேவையான தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் சற்று தளர்வாகப் பிசையவும்.
திரட்டிய மாவின் மேல்பகுதி காயாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
ஈரத்துணியால் மாவினை போர்த்தி அரைமணி நேரம் வைத்திருக்கவும்.
பின்னர் மாவினை சிறிது உருண்டைகளாக்கவும்.
சிறிய உருண்டையின் மீது கோதுமை மாவினைத் தூவி மெல்லிய சப்பாத்திகளாக விரிக்கவும்.
சப்பாத்திக் கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் அதில் விரித்த சப்பாத்தியைச் சேர்த்து எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
அடுப்பின் தீயைக் குறைக்கமால் சப்பாத்தியை வேக வைத்து எடுக்கவும். அப்போதுதான் சப்பாத்தி வெந்து மிருதுவாக இருக்கும்.
இவ்வாறு எல்லாவற்றையும் சப்பாத்திகளாகச் சுட்டு எடுக்கவும். சுவையான மசாலா சப்பாத்தி தயார். இதனுடன் புளிக்காத கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு
பசுமையான வெந்தையக் கீரையைப் பயன்படுத்துவதாக இருந்தால், கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி மாவில் சேர்த்து சப்பாத்தியாகத் திரட்டவும்.
குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் கடலை எண்ணெய்க்குப் பதில் நெய்யைப் பயன்படுத்தி மசாலா சப்பாத்தி தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் தயிரில் ஓமப்பொடி தூவி சப்பாத்தியுடன் உண்ணலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!