பணக்காரர் ஒருவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.
இந்தப் பிரச்சினையப் போக்க வெளியூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். நண்பர் ஒரு வித்தியாசமான யோசனை சொன்னார்.
பணக்காரரை மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார் பணக்காரர்.
பிறகு 6 மாதம் கழித்து இருவரும் சந்தித்தனர்.பேனா மறதியை பற்றி விசாரித்தார் நண்பர்.
தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார் பணக்காரர்.
இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே.
நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம்.
உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.
நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.
பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அநாவசிய செலவுகள் செய்ய மாட்டோம்.
உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.
வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.
வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.
மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை என்பதை உணர்வோம்.
செய்வதை மதிப்புடன் செய்வோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!