மயில் பாட்டு – கவிதை

வண்ணம் கொண்ட கண்மணிகள்
வடிவில் பதித்த பொற்சிலைதான்
கண்கள் வியக்க உயிர்பெற்றே
கவின்சேர் தோகை மயிலாச்சோ

கொத்தாய் மலர்கள் குவிந்தோங்கும்
கொண்டை அசைக்கும் மயிலம்மா
முத்துத் தோகை விரித்தாடி
உயர்வாய் நடனம் புரிந்தாயே

சோலை வண்டு பண்ணமைக்கச்
சுவையாய்க் குயில்கள் பாட்டிசைக்க
நீல வண்ணப் பட்டுடுத்தி
நெஞ்சம் இனிக்க ஆடுகின்றாய்

வானில் மிதக்கும் கருமுகிலின்
வனப்பில் மயங்கி மகிழ்வுடனே
கானில் நின்று நீயாடும்
காட்சி கண்டு வியந்தேனே

இமயவரம்பன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.