முடக்கத்தான் கீரை சூப் கை, கால், உடல் வலிகளைப் போக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுக்கும்.
உடலில் உண்டாகும்முடங்கங்களை (வலிகளை) போக்குவதால் இக்கீரை முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டு தற்போது முடக்கத்தான் என்று மருவியுள்ளது.
முடக்கத்தான் கீரையைக் கொண்டு சூப், தோசை, சட்னி, துவையல் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.
இந்த பதிவில் சுவையான எளிய வகையில் முடக்கத்தான் சூப் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கொடி – 1½ அடி நீளம்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
சீரகம் – 2¼ ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 2 பல் (நடுத்தர அளவு)
உப்பு – தேவையான அளவு
மிளகு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
தண்ணீர் – 8 டம்ளர்
முடக்கத்தான் கீரை சூப் செய்முறை
முதலில் முடக்கத்தான் கொடியில் உள்ள இலைகளை தனியே ஆய்ந்து கொள்ளவும்.
இலைகள் இல்லா முடக்கத்தான் கொடியை, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கீரை மற்றும் தண்டுகளை அலசிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து நேராக வெட்டிக் கொள்ளவும்.
வெள்ளை பூண்டினைத் தோலுரித்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
கொத்த மல்லி இலையை அலசி சிறுதுண்டுகளாக வெட்டவும்.
மிக்ஸியில் மிளகு, சீரகத்தை (1 ஸ்பூன்) ஒரு சேர பொடியாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் அதனுடன் அலசிய முடக்கத்தான் கீரை மற்றும் தண்டுகள், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், சீரகம், (1¼ ஸ்பூன்) வெள்ளைப்பூண்டு சேர்த்து கொதிக்க விடவும்.

பாத்திரத்தை மூடியால் மூடவும்.
தண்ணீரானது பாதியாக அதாவது நான்கு டம்ளர் அளவுக்கு வற்றியதும் அடுப்பினை அணைத்து கலவையை ஆற விடவும்.


பின்னர் கலவையை வடிகட்டி லேசாக சூடுபடுத்தி தேவையான உப்பு மற்றும் மிளகு, சீரகப் பொடியை கலந்து மல்லி இலையை மேலாகத் தூவி பரிமாறவும்.



சுவையான முடக்கத்தான் சூப் தயார்.

குறிப்பு
முடக்கத்தான் இலையைவிட அதனுடைய கொடியே சூப் வைக்கச் சிறந்தது. எனவே முடக்கத்தான் கொடியை சூப்பிற்கு தராளமாகப் பயன்படுத்தலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!