நண்பகல்
மதுரை – பாளையம்பட்டி மைதானம்
கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்தவன், ‘நண்பர்கள் இன்னும் வரவில்லை!’ என்ற கோபத்தில் இருந்தான் வினோத்.
அவனும் வந்து ஒருமணி நேரத்திற்கு மேல் இருக்கும். நண்பர்களுக்கு போன் செய்யலாம் என்றால் தன் போனை வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டான்.
காலையிலே வீட்டை விட்டு வெளியில் வந்தவன் வினோத். ஞாயிறு ஒருநாள் முழுக்க கிரிக்கெட் மட்டும் தான் உலகம் வினோத்திற்கு.
‘சரி இதுக்கு மீறி காத்திருப்பது நமது தவறுதான். வீட்டுக்கு கிளம்புவோம்!’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான். தனது இருசக்கர வாகனத்தை அங்கிருந்து நகர்த்தினான்.
அப்போது நண்பர்களின் குரல் கேட்பதை உணர்ந்து திரும்பி பார்த்தான்.
நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டு இருந்தனர்.
அவர்களை பார்த்ததும் மகிழ்ச்சி என்றாலும், தன் கோபத்தை வெளிக்காட்ட நினைத்து, அவர்களை திட்டினான்.
நண்பர்கள் அனைவரின் முகமும் சோர்வாக இருப்பதை வினோத் பார்த்தான் .
“என்னடா! என்னைய விளையாட வரச்சொல்லிட்டு நீங்க எல்லாம் இவளோ நேரம் கழிச்சு வர்றீங்க! என்னடா எல்லாரும் ரொம்ப சோர்வா இருக்கிற மாதிரி தெரியுது!“ என்று வினோத் விசாரித்தான்.
“அது இல்லடா மாப்பிளை! இன்னைக்கு ரத்த தானம் பண்ண சொல்லி அவசர போன் வந்தது. அதான் எல்லாரும் போய் ரத்த தானம் பண்ணிட்டு வாரோம்.
அதான் இவ்ளோ நேரம் ஆச்சு. இன்னைக்கு விளையாட வேணாம். வீட்டுக்கு கிளம்புவோம்! நீ எங்களுக்காக இங்க இருப்ப அதான் உன்ட சொல்லிட்டு போவோம்னு வந்தோம்!“ என்று நண்பன் முருகன் கூறினான்.
“என்னடா! நீங்க இப்படி பண்றீங்க?
வாரத்தில ஒருநாள் தான் நாம ஜாலியா விளையாடிட்டு பேசிட்டு இருக்கோம்!
இன்னைக்கும் ரத்த தானம் போனோம்! அன்ன தானம் போட்டோம்னு! சொல்லி கடுப்பு ஏத்துறீங்க!“ என்று கோபமாக பேசினான் வினோத்.
“மாப்பிளை சொல்றத கேளு! வீட்டுக்கு போவோம். எங்களால இந்த வெயில்ல விளையாட முடியாது!” என்று முருகன் கூறினான்.
“நான்தான் எத்தனை தடவ சொல்றேன். ரத்த தானம் பண்ணாதீங்கடான்னு! யாரும் கேக்க மாட்றீங்க! நாம கஷ்டப்பட்டு உழச்சு உடம்ப தேத்துறோம்.
ரத்தம் ஊறனும்ன்னு வீட்ல அம்மா, அப்பா சைவம் அசைவம்ன்னு வாங்கி கொடுத்தா, நீங்க ஒருபிஸ்கட் பாக்கெட்டுக்கு கொண்டு போய் ரத்த தானம் பண்றீங்க.
அதெல்லாம் சொன்ன உங்களுக்கு புரிய மாட்டேங்குது. எங்க வீட்ல அப்பாவும் அம்மாவும் உங்கள மாதிரி பேசுவாங்க!
அவங்களையும் திருத்த முடியாது உங்களையும் திருத்த முடியாது!“ என்று வினோத் தன் நண்பர்களை நினைத்து கவலையுடன் கூறினான்.
“மாப்பிள்ளை! ரத்தம் கொடுக்கிறதால நாம நல்லது தான் பண்றோம். ரத்தம் கொடுத்தா நமக்கு மேலும் ரத்தம் ஊறும்.
அதோட மட்டும் இல்லாம உயிருக்கு போரடிட்டு இருக்கிறவங்களுக்கு திடீர்னு ரத்தம் தேவைப்படும் போது, நம்மலோட ரத்தம் யாருக்காவது உதவும். அவங்க உயிரை காப்பத முடியும்.
நாம கொடுக்க போற கொஞ்சம் ரத்தத்தினால் இவ்ளோ பெரிய நன்மை நடக்கும்னா அது பெரிய விஷயம் தானே!” என்று நண்பன் முருகன் வாதாடினான்.
“அட போங்கடா! நான் இதுவரை ரத்த தானம் பண்ணது இல்லை. அது ஒன்னும் கட்டாயமில்லை! சொன்ன கேக்க மாட்டீங்க! நம்ம ரத்தத்தை வீணா கொடுத்துட்டு வாறீங்க!“ என்று வினோத் பதிலடி கொடுத்தான்.
“யாரோ ஒருவர்க்கு நாம கொடுக்கிற ரத்தம் உதவ போகுதுன்னு சொல்றதுக்கு பதிலா நம்ம குடும்பத்தில் ஒருவருக்கு உதவியா இருந்தா என்ன சொல்லுவ?“ என்று முருகன் கேட்டான்.
“நம்ம குடும்பத்தில் யாருக்கு உதவியா இருக்க போகுது! எல்லாரும் நல்லா தானே இருக்கோம். ஏதோ சொல்லனும்னு சொல்ல கூடாது! “ என்று பேசினான் வினோத்.
“ ஆமா வினோத்! இன்னைக்கு காலைல ஒருஆக்சிடென்ட் நம்ம குடும்பத்தாளு ஒருத்தர் தான் அதுல அதிகமா அடிபட்டு அவர காப்பாத்த தான் ரத்தம் தேவைப்படுதுன்னு போன் வந்தது.
அங்க போய் ரத்தம் கொடுத்து, அவர காப்பாத்திட்டு இப்போ அவர் நார்மல் நிலைக்கு வந்துட்டார்ன்னு சொன்னதுக்கு பிறகு தான் கிளம்பி வந்தோம்!“ என்று நண்பன் முருகன் கூறினான்.
“பார்ரா! நீங்க ரத்தம் கொடுத்து ஒருத்தர் உசுர காப்பதிருக்கீங்க! அந்த அதிர்ஷ்டசாலி மனுஷன் யாரு? நான் பார்க்கணுமே! “ என்று நக்கலாக பேசினான் வினோத்.
“ஆமா மாப்பிள்ளை! அந்த அதிர்ஷ்டசாலி வேற யாரும் இல்ல உன் அப்பா மீனாட்சி சுந்தரம். காலைல பைபாஸ் ரோட்ல நடந்த ஆக்சிடெண்ட்ல பலமா அடி; ரத்தம் நெறைய போயிருச்சு.
நீ தான் கிரிக்கெட் விளையாட போறப்போ போனை வீட்ல வச்சிட்டு வந்திருவ.
இன்னைக்கு ஒருநாள் நீ எங்க இருப்ப என்று தெரியாது; கைல போனும் இருக்காது. அதான் உங்க அம்மா எங்களுக்கு போன் பண்ணாங்க.
நாங்க எல்லாரும் போயிட்டு இப்போ வாரோம். பயப்படாத!, உங்க அப்பா நல்லா இருக்கார்.
கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேர்த்து இருக்காங்க. கண்ணு முழிச்சிட்டார்!“ நண்பன் முருகன் கூறியதும் அதிர்ந்து போனவனாய் வினோத்.
ரத்த தானம் பற்றிய வினோத்தின் தவறான எண்ணத்தை இந்த நிகழ்வு மாற்றி கொண்டு இருந்தது.
கண்களில் கண்ணீருடன் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியை நோக்கி நகர்ந்தான் வினோத் நண்பர்களுக்கு நன்றி கூறியபடி.
ரத்த தானம் செய்வோம்! உயிர்களை காப்போம்!
நாம உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அடுத்தவன் செய்யும் உதவியை கொச்சைப் படுத்த வேண்டாம்.
இதனால் உதவி தேவைப்படுவோருக்கு உதவி கிடைக்காமல் போக வாய்ப்புகள் உண்டு.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!