விடை குறும்படம் விமர்சனம்

விடை குறும்படம் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடூர முகம் எவ்வாறு தாண்டவம் ஆடும்? என்பதை விளக்குகிறது.

அது கை கால்கள் வெட்டப்பட்டு நிர்க்கதியாய், எதை நோக்கிய பாதையிலோ, நீண்ட வலியுடன் செல்லும் நிலையை உடையது.

வேலை இல்லாது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையிலுள்ள ஒருவனின் அல்லது ஒருத்தியின் நிலையே குறும்படத்தின் ஆழமான கதை ஆகும்.

குறும்படத்தின் கதை

ஓய்வூதியப் பணத்தில் அப்பா. அம்மா இல்லை. தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தங்கை. இவர்களுடன் பொறியியல் படிப்பை முடித்து வேலை தேடும் கதாநாயகன். இதுதான் குடும்பம்.

வருமானம் குறைவு என்பதால் ’ஓவர் டைம்’ வேலைக்காகச் செல்லும் தங்கை, தாய் இடத்திலிருந்து சமைத்துப் பிற வேலைகளையும் பார்த்துக் குடும்பத்தை நகர்த்துகிறார்.

வேலை, வேலை என்று தேடித் தேடி அலைகிறான் கதாநாயகன். அவன் காதலி பணக்கார மாப்பிள்ளை கிடைத்தவுடன் இவனைக் கழற்றி விடுகிறாள்.

அந்த வெறுப்பும், வேலை கிடைக்காத வெறுப்பும் ஒன்று சேர, நண்பனிடம் கொட்டித் தீர்க்கின்றான் தன் கோபத்தை. ’இறந்து விடலாம்’ என்று கூடஇருக்கிறது என்கிறான்.

இவனின் மனதை மாற்றுவதற்காக ஒரு யோசனையைக் கூறுகிறான் நண்பன். அதன்படி, பணமும் கொடுத்து விலைமாது உள்ள லாட்ஜில் இறக்கி விடுகின்றான். கதாநாயகனும் அந்த லாட்ஜின் உள்ளே செல்லுகின்றான்.

அறையில் விலைமாதிற்காகக் காத்திருக்கும் பொழுது, விலைமாதாகத் தங்கையே உள்ளே நுழைகிறாள். இருவரும் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது அலறித் துடிக்கின்றனர். குறும்படம் முடிகிறது.

படத்தில் மூவரின் வலிகள்

வயதான தந்தையின் வலி

இயலாமை, மருத்துவச் செலவிற்குக் கூட பணம் போதாமல், ஓய்வூதியப் பணம் கொண்டுத் தன் மற்ற செலவினங்களுக்குத் தன் மகனைத் தேடவேண்டிய நிலை. வீட்டிற்கு எந்த விதத்திலும் பயனாக இல்லையே என்கிற வருத்தம். இவையெல்லாம் இந்தக் கதாபாத்திரத்தின் வலிகளாகக் காட்டப்படுகின்றன.

கதாநாயகனின் வலி

தங்கை சம்பாத்தியத்தில் சாப்பிட்டுக் கொண்டு, வேலை கிடைக்காமல் காதலியும் வேறு கைவிட்டதால் சோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது கதாநாயகனின் வலி. இன்றைய இளைஞர்களின் அடையாளமான வலியாகக் காட்டப்பட்டுள்ளது.

தங்கையின் வலி

வீட்டின் சூழ்நிலையை அறிந்து குடும்பத்தை நகர்த்த வேண்டுமே என்பதற்காக, ’ஓவர் டைம்’ எனும் போர்வையில் விபச்சாரத்திற்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. கொடுமையான வலியின் உச்சத்தில் இக்கதாபாத்திரத்தை இயக்குனர் தடுமாற விட்டுள்ளார்.

இப்படி மூன்று பேர்களின் வலிகள்; சமூகத்தில், பெரும் பகுதி மக்கள் இவற்றை அனுபவிக்கின்றனர் என்பதைப் படத்திலுள்ள ஒட்டுமொத்த வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

இசையும் படத்தொகுப்பும் மிக அற்புதமாக அமைந்துள்ளன. உணர்வுகளின் வெளிப்பாட்டை இசையமைப்பாளர் நிஷாந்த் ஸ்ரீதர் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். நீரோடை போல் கதை நகர்தலைப் படத்தொகுப்பு சிறப்பாகச் செய்திருக்கிறது.

வசனங்கள், சில இடங்களில் அனல் பறக்கிறது. சமூகத்தைச் சாடுவதற்கு வார்த்தைகளில் நெருப்புக் கட்டாயம் தேவைதான்.

மூன்று விருதுகளை இப்படம் பெற்றிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சில இடங்களில் தன் முழுத் திறமையையும் காட்டியுள்ளார். உதாரணமாக, லாட்ஜ் அறையில் சிவப்பு வெளிச்சம் முழுவதுமாக வியாபித்திருப்பது, இருட்டிலிருந்து அந்தப் பெண் வருவது மற்றும் ஆட்டோ பயணத்தில் ஒளி வெள்ளம் போன்றவற்றைக் கூறலாம்.

இயக்குனர் கதையின் வலியை அப்படியே பார்வையாளனுக்குக் கடத்தி இருக்கிறார். நெடு நேரம் ஆகிறது அந்த வலியில் இருந்து வெளியே நாம் வருவதற்கு.

இயக்குனரின் முதல் படம், அவரின் திறமையை மிக அற்புதமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

நாட்டின் இன்றைய சூழ்நிலையைக் கவனித்துப் பார்த்தால், இக்குறும்படம் போல் ஆயிரம் ஆயிரம் கதைகள் சமூகத்தில் இருந்து வெளிப்படும்.

இன்றைய பள்ளிகள், கல்லூரிகள் வாழ்க்கைக் கல்வியைப் போதிக்கத் தவறுகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கல்வியாகவே மாணவனை நிர்மூலமாக்கிச் சுயமான சிந்தனை இல்லாது, உலகில் உலாவ விடுகின்றனர்.

இக்குறும்படம் கல்வி கற்று, வெளியே வருகிறவர்களிடம் ஏன் மாற்றுச் சிந்தனையை வழங்கி இருக்கக் கூடாது?

கதையில் இயக்குனர் புரட்சியாக ஏதாவது ஒரு கருத்தைப் புகுத்தி இருந்தால் இளைய சமூகம் திருந்தி இருப்பார்களே? என்றெல்லாம் இக்குறும்படம் பற்றிக் கேள்வி கேட்கலாம்.

சமூகத்தில் நடப்பதை அப்படியே ’எதார்த்தவியல் கோட்பாடு’ (Realistic theory) என்பார்களே, அதை அப்படியே கூறிப் படம் பார்ப்பவர்களைத் திருந்தச் செய்தால் என்ன தவறு?

அப்படித்தான் எடுக்கப்பட்டுள்ளது இக்குறும்படம். ஒரு குடும்பச் சூழலின் வலி, வேதனை, துன்பம் இவற்றைக் கொஞ்சம் கூடக் கூட்டிக் குறைக்காமல் படம் பிடித்துக் காட்டுவது, ’எதார்த்தவியல் கோட்பாடு’எனும் நவீனக் கோட்பாட்டின் முக்கிய வெளிப்பாடு தானே இது?

சாகித்ய எழுத்தாளரான, எழுத்தாளர் இமையம் அவர்கள் எழுதிய ’செல்லாப் பணம்’ புதினம் இவ்வகைக் கோட்பாட்டில் எழுதப்பட்டது தான். அப்புதினத்துடன் இக்குறும்படத்தை இணைத்துப் பார்க்கின்றோம். இரண்டும் சமூகச் சீரழிவையே படம் பிடித்திருக்கின்றன.

மொத்ததில், அரசாங்கத்தை நோக்கி ஈட்டியைப் பாய்ச்சியிருக்கிறது விடை குறும்படம்.

படக்குழு

இயக்குனர் – தேஜோ பரத்வாஜ்

நடிப்பு – பிரேம் ஷ்யாம், செளம்யா ஷெர்லீன், அஷ்ரித் ஈஷ்வர்

உரையாடல்கள் – கவுதம் ரமேஷ்

கலை இயக்குனர் – ஹரிஷ் ஆர்வி

இசை – நிஷாந்த் ஸ்ரீதர்

இயக்குநர் குழு – லெனின் ஸ்ரீகாந்த், ஆதேஷ்

உதவி ஒளிப்பதிவாளர் – சப்யசாச்சி

விமர்சகரின் விமர்சனம் ஒன்று

”கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, எல்லாம் சரியாக உள்ளது. நான் கண்ட சிறந்த குறும்படங்களில் இதுவும் ஒன்று. முற்றிலும் எதிர்பாராத ஒன்றில் கதை விரிகிறது. இது ஒரு சிந்தனையைத் தூண்டும் படம். இது அழகாக தயாரிக்கப்பட்டுள்ளது; அனைவரும் பார்க்க வேண்டிய படம்.” என்று S Bodhi கூறுகிறார்.

விடை குறும்படம் பாருங்கள்

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin

3 Replies to “விடை குறும்படம் விமர்சனம்”

  1. குறும்படம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.

    சமூகத்தில் கேவலமான வேலைவாய்ப்பு இல்லாத அவல நிலை தான் காணப்படுகிறது.

    இதைத் தவிர்க்க எந்த அரசாங்கமும் முயல்வதில்லை.

    காலம் காலமாக படித்தவர்கள் பைத்தியம் பிடித்துப் போய் அலைகிறார்கள்.

    இதை மாற்ற என்ன செய்ய போகிறது இந்த உலகம் என்பதை இந்த குறும்படம் அழகாக வலிகளுடன் விளக்குகிறது.

  2. மழை பெய்கின்ற இந்த மாலையில் உங்கள் விமர்சனத்தையும் அந்தப் படத்தையும் படித்தேன் பார்த்தேன்
    பேசாப் பொருளை பேசத் துணிந்த படம்.

    விபச்சார விடுதியில் தங்கையை பார்த்தவுடன் நடக்கும் அந்த நிகழ்வுகள் நிச்சயமாக விடையற்றவை தான்.

    எல்லாம் இருந்தும் என் நாடு பொருளாதாரத்தில் பின்னடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு பொருளாதார ஆசிரியராக நான் யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக் கொள்கிறேன்…

    ஊழலும், லஞ்சமும், குறிப்பிட்ட மனிதர்கள் மட்டும் பணம் சம்பாதிக்கும் போக்கும், பெருவாழ்வு வாழ்வதும் மாற்றவே முடியாத நிலையாக இருக்கிறது.

    லட்சக்கணக்கில் படித்து விட்டு வெளியில் வரும் எத்தனையோ மாணவர்கள் வேலை இல்லாமலும், வாழ்வு இல்லாமலும் வாழ்கிறார்கள்.

    அவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது, உடலில் உயிர் தாங்கி அவர்கள் இருப்பு இந்த உலகத்தில் தெரிகிறது. உள் வலிகள் ஏராளம்…

    குறும்பட விமர்சகர் ஐயா பாரதிச் சந்திரன் அவர்கள், ஒவ்வொரு வாரமும் நம்மை தூண்டி யோசிக்க வைக்க, இது போல் ஒரு குறும்படத்தைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து விடுகிறார்…

    வாழ்த்துக்களும் அன்பும்…

  3. நடுத்தர வர்க்கத்தில் பல இளைஞர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பட்டதாரியாகி வேலைக்காக சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபட்டு காவல்துறையிடம் பிடி படுவதே பல இடங்களில் பார்க்கிறோம். இது இந்தச் சமூகத்தின் சாபக்கேடு. இது மாற வேண்டும். விமர்சனம் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள் ஐயா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.