வெஜிடபிள் கோஃப்தா சுவையான தொட்டுக்கறி ஆகும். காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் கூட இதனை விரும்பி உண்பர்.
இது சப்பாத்தி, பூரி, சீரக சாதம் மற்றும் பிரியாணி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.
விருந்து உபசரிப்பின் போதும் விழா நாட்களிலும் இதனைச் செய்து அசத்தலாம்.
இனி சுவையான வெஜிடபிள் கோஃப்தா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோப்தா செய்ய
உருளைக்கிழங்கு – 2 எண்ணம் (மசித்தால் 2 கப் அளவு)
காலிபிளவர் – 1 எண்ணம் (துருவினால் 1 கப் அளவு)
காரட் – 2 எண்ணம் (துருவினால் 1ஃ2 கப் அளவு)
பீன்ஸ் – 8 எண்ணம் (பொடியாக நறுக்கினால் 1ஃ2 கப் அளவு)
குடைமிளகாய் – 1 எண்ணம் (துருவினால் 1ஃ4 கப் அளவு)
இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 எண்ணம் (பெரியது)
மிளகு பொடி – 1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/2 ஸ்பூன்
கடலை மாவு – 4 ஸ்பூன்
சோள மாவு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறி தயார் செய்ய
பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (பெரியது)
தக்காளி – 6 எண்ணம் (மீடியம் சைஸ்)
மசாலா பொடி – 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 4 எண்ணம்
முந்திரிப் பருப்பு – 6 எண்ணம் (முழுமையானது)
கசகசா 1 & 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
ப்ரெஷ் கிரீம் – 5 ஸ்பூன்
வெள்ளை சர்க்கரை – 1 ஸ்பூன்
கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
கறி தயார் செய்ய தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 4 கீற்று
பட்டை – ஆட்காட்டி விரல் அளவு
ஏலக்காய் – 3 எண்ணம்
பிரிஞ்சி இலை – ஒரு எண்ணம் (பெரியது)
கிராம்பு – 5 எண்ணம்
வெஜிடபிள் கோஃப்தா செய்முறை
உருளைக்கிழங்கை அவித்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
பீன்ஸை கழுவி நார் நீக்கி மிகவும் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
கேரட்டை தோல் நீக்கி துருவியில் துருவிக் கொள்ளவும்.
குடைமிளகாயை அலசி துருவிக் கொள்ளவும்.
காலிபிளவரை சிறுசிறு இதழ்களாகப் பிரித்து கொதித்த உப்பு சேர்த்த வெந்நீரில் 10 நிமிடங்கள் மூழ்க வைத்து, பின் தண்ணீரை ஒட்ட வடித்து விடவும். பின்னர் அதனை துருவியில் துருவிக் கொள்ளவும்.
இஞ்சி வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பு மற்றும் கசகசாவை ஒரு கிண்ணத்தில் போட்டு 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆற விடவும்.
ஆறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, வேக வைத்த கசகசா மற்றும் முந்தரிப் பருப்பினை மிக்ஸியில் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.
தக்காளியை அலசி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.
மல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கிரேவி தயாரித்தல்
வாணலியில் நல்ல எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடிப்பதம் வந்ததும், அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

அதனுடன் மசாலா பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து முந்திரிபருப்பு மற்றும் கசகசா விழுதினைச் சேர்க்கவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட்டு கெட்டியானதும் எடுத்து ஆற விடவும்.

வெங்காய தக்காளி வதக்கல் ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்கு மைய விழுதாக்கிக் கொள்ளவும்.
கோஃப்தா தயாரித்தல்
வாயகன்ற பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய காரட், குடைமிளகாய், காலிபிளவர் மற்றும் நறுக்கிய பீன்ஸைச் சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகு பொடி, கரம் மசாலா பொடி, கடலை மாவு, சோள மாவு மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.


பிசைந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.
உருண்டையில் தண்ணீர் பதம் அதிகமாக இருந்தால் கடலை மாவு மற்றும் சோள மாவு சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

உருண்டைகளை கடலை மாவில் பிரட்டி எடுத்து, கையால் தட்டி அதிகம் ஒட்டி இருக்கும் மாவினை உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு உருண்டையைப் போடவும். உருண்டை பிரியாமல் இருந்தால் அடுத்த உருண்டையைச் சேர்க்கவும்.
1/2 நிமிட இடைவெளியில் உருண்டைகளைச் சேர்த்து, அடுப்பினை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

கிரேவியைத் தாளித்தல்
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயத் தக்காளி விழுதினைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அடுப்பினை சிம்மில் வைத்து அதில் வெள்ளைச் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

பின்னர் அதனுடன் ப்ரஷ் கிரீமில் பாதியைச் சேர்த்துக் கிளறவும்.

அதனுடன் நறுக்கிய கொத்த மல்லி இலையைத் தூவி கிளறவும்.

பொரித்து வைத்துள்ள கோஃப்தா உருண்டைகளை கறியில் சேர்த்து மீதமுள்ள ப்ரஷ் கிரீமைச் சேர்க்கவும்.


சுவையான வெஜிடபிள் கோஃப்தா தயார்.
பால் காய்ச்சி ஆறியதும் மேலே படரும் பாலாடையை மட்டும் தனியே எடுத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து அதனை தேவைப்படும்போது வெளியே எடுத்து ஒரே சீராகக் கிண்டினால் ப்ரெஷ் கிரீம் தயார்.
குறிப்பு
மசாலா பொடிக்குப் பதிலாக கொத்தமல்லிப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, சீரகப் பொடி பயன்படுத்தி கோப்தா தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் காஷ்மீரி மிளகாய் பொடியைச் சேர்த்து கறி தயார் செய்யலாம்.