வெஜ் சால்னா பரோட்டா, சப்பாத்தி, சீரக சாதம், இட்லி, தோசை உள்ளிட்டவைகளுக்கு பொருத்தமான தொட்டுக் கறியாகும்.
ஹோட்டல்களில் கிடைக்கும் வெஜ் சால்னாவைப் போலவே நாம் வீட்டிலும் இதனைச் செய்து அசத்தலாம்.
இனி எளிய வகையில் சுவையான வெஜ் சால்னா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காரட் – 2 எண்ணம்
முருங்கை பீன்ஸ் – 10 எண்ணம்
பட்டாணி – 50 கிராம்
காலிபிளவர் – 4 மொட்டுகள்
உருளைக்கிழங்கு – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
மசாலா பொடி – 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
கொத்த மல்லி இலை – மூன்று கொத்து
புதினா இலை – ஒரு கைபிடி அளவு
மசாலா தயார் செய்ய
சின்ன வெங்காயம் – 8 எண்ணம்
தக்காளி – 1 எண்ணம்
பெருஞ்சீரகம் – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகு – 8 எண்ணம்
பட்டை – 1 இன்ச் அளவு
ஏலக்காய் – 2 எண்ணம்
கிராம்பு – 2 எண்ணம்
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
வெள்ளைப்பூண்டு – 1 பல் (பெரியது)
தேங்காய் மசாலா தயார் செய்ய
தேங்காய் – 1/2 மூடி
கசகசா – 1/2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 4 எண்ணம்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1 எண்ணம்
பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
வெஜ் சால்னா செய்முறை
சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து நேராக நறுக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காய்ந்த பட்டாணியை சுமார் 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
காரட், முருங்கை பீன்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
புதினாவை ஆய்ந்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டினைச் சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம், சீரகம், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.

அதில் நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் ஓரளவு வதங்கியதும் இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி சுருள வதங்கியதும் அடுப்பினை அணைத்து விடவும்.

வதக்கியவற்றை நன்கு ஆறவிடவும்.
பின்னர் மிக்ஸியில் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் கசகசா, முந்தரிப்பருப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இதனை ஆறவிடவும்.
தேங்காய் துருவலுடன் கொதிக்க வைத்த கசகசா, முந்திரி சேர்த்து மிக்ஸியில் விழுதாக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லஎண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சு இலை, பெருஞ்சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் ஓரளவு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை நீங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையில் முக்கால்பாகம் மற்றும் புதினா சேர்த்து ஒருநிமிடம் வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், முருங்கை பீன்ஸ், பட்டாணி சேர்த்து ஒருசேர இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின்னர் அதில் மசாலா பொடி, கரமசாலா பொடி சேர்த்து ஒருசேர கிளறவும்.

அதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.


கலவை கெட்டியானதும் அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒருசேரக் கிளறவும்.


பின்னர் அதனுடன் சுமார் 1/2 லிட்டர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து சுமார் 25 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அவ்வப்போது கலவையைக் கிளறி விடவும்.

எண்ணெய் பிரிந்து வெளியேறியதும் அடுப்பினை அணைத்து விடவும்.

அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.

சுவையான வெஜ் சால்னா தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பீட்ரூட், பச்சை பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து சால்னா தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதிலாக மல்லி பொடி, மிளகாய் வற்றல் பொடி சேர்த்து சால்னா தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!