ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள சவ் சவ்

சவ் சவ் நம் நாட்டில் பெங்களுரு கத்தரிக்காய் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்காய் பொதுவாக குளிரான பகுதிகளில் விளைகிறது.

நேபாளத்தில் வீட்டுத் தோட்டத்தில் இக்காய் பயிர் செய்யப்படுகிறது. சவ் சவ் பச்சையாகவோ, வேக வைத்தோ, வறுத்தோ உண்ணப்படுகிறது.

சவ் சவ் காயானது குகுர்பிட்டேசியே என்ற வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்தது. வெள்ளரிக்காய், தர்பூசணி, பூசணி ஆகியோர் இதன் உறவினர்கள் ஆவர்.

இக்காயானது வெள்ளரியைப் போன்று நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது. இக்காயின் அறிவியல் பெயர் சீக்கியம் எடுல் என்பதாகும்.

 

சவ் சவ்வின் அமைப்பு மற்றும் வளரியல்பு

சவ் சவ்வானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இக்கொடியானது முறையாக படரவிடப்படும்போது 12 மீட்டர் உயரம் வரை வளரும்.

இத்தாவரக் கொடியை செயற்கையாக பந்தலிட்டோ, மரங்கள், குற்றுச்செடிகள் மீது படரவிட்டோ வளர்க்கலாம்.

இக்கொடியின் தண்டானது மெல்லிதாக கிளைகளுடன் காணப்படுகிறது. இக்கொடியில் அகலமான பச்சை நிற இலைகள் காணப்படுகின்றன.

 

சவ் சவ் கொடி
சவ் சவ் கொடி

 

இக்கொடியின் இலைகள் வெள்ளரியின் இலைகளை ஒத்து காணப்படுகின்றன. இக்கொடியானது சிறிய வெளிர் பச்சைநிற இரு மலர்களைப் பூக்கிறது.

 

சவ் சவ் பூ
சவ் சவ் பூ

 

மகரந்த சேர்க்கை நடைபெற்ற 30 நாட்களில் இக்காய் அறுவடைக்கு தயாராகிறது. ஒவ்வொரு கொடியும் ஒரு சீசனில் 150 காய்களைக் காய்கின்றது.

இக்கொடியானது நல்ல வடிகால் அமைப்புள்ள வளமான ஈரப்பதமிக்க மண்ணில் நன்கு வளர்கிறது. இப்பயிர் வளர குளிர்ந்த காலநிலையும், நல்ல சூரிய ஒளியும், போதுமான மழையும் தேவை.

சவ் சவ் காயானது பேரிக்காய் வடிவில் காணப்படுகிறது. இக்காயானது சற்று தட்டையாக கடினமான மேற்புறத் தோலினைக் கொண்டுள்ளது.

இக்காய் பொதுவாக 10-20 செமீ நீளமும், 7-12 செமீ அகலமும், 100-900 கிராம் எடையிலும் காணப்படுகின்றது.

இக்காயானது வெளிப்புறத்தில் வெளிர் பச்சை, அடர் பச்சை, மஞ்சள் கலந்த பச்சை நிறமான தோலைக் கொண்டிருக்கிறது. இக்காயின் உட்புற சதைப்பகுதி வெள்ளை அல்லது வெளிர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

இக்காயானது தனிப்பட்ட மணத்துடன் இனிப்பு சுவையினைக் கொண்டுள்ளது. இக்காயின் உள் நீள்வட்ட வடிவ வெளிர் பச்சைநிற விதை மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கும்.

சவ் சவ் வெட்டுத் தோற்றம்
சவ் சவ் வெட்டுத் தோற்றம்

 

சவ் சவ்வின் வரலாறு

சவ் சவ்வின் தாயகம் மத்திய அமெரிக்காவில் உள்ள மலைப்பகுதிகள் ஆகும். தெற்கு மெக்ஸிகோ மற்றும் குவாத்த மாலா பகுதிகளில் பராம்பரியமாக இக்காய் பயிர் செய்யப்பட்டு வரப்படுகிறது.

தற்போது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல மலைப்பகுதிகளில் இக்காய் பயிர் செய்யப்படுகிறது. உலகெங்கும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

 

சவ் சவ்வில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சவ் சவ்வில் விட்டமின் சி, பி6 (பைரிடாக்ஸின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன.

மேலும் இதில் பி1(தயாமின்), பி2(ரிஃபோ ப்ளோவின்), பி3(நியாசின்), இ, கே ஆகியவையும் உள்ளன.

இக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம் போன்றவையும் காணப்படுகின்றன.

மேலும் இக்காயில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், நார்ச்சத்து முதலியவைகளும் உள்ளன.

 

சவ் சவ்வின் மருத்துவப் பண்புகள்

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெற

விட்டமின் சி, ஃபோலேட்டுகள், செலீனியம், விட்டமின் இ, மாங்கனீசு, துத்தநாகம், விட்டமின் பி6 ஆகியவை புற்றுநோய் எதிர்ப்பாற்றலை உடலுக்கு வழங்குகின்றன.

விட்டமின் சி, ஃபோலேட்டுகள், விட்டமின் பி6 ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது. விட்டமின் இ குடல் புற்றுநோயினைத் தடைசெய்கிறது.

விட்டமின் சி வயிறு, மார்பகம், வாய், கருப்பை, நுரையீரல், பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய் உண்டாவதை தடைசெய்கிறது.

இந்த விட்டமின்கள் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடைசெய்கிறது. இதனால் செல்களில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் தடுக்கப்பட்டு புற்றுநோய் உண்டாவது கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சவ் சவ்வினை உண்டு புற்றுநோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

 

உடலுக்குத் தேவையான ஆற்றலினைப் பெற

சவ் சவ்வில் காணப்படும் மாங்கனீசு கொழுப்பு மற்றும் புரதத்தினை உடைத்து உடலுக்குத் தேவையான ஆற்றலினை வழங்குகிறது. எனவே சவ் சவ்வினை காலை உணவில் சேர்த்து நமது உடலுக்குத் தேவையான ஆற்றலினை உடனடியாகப் பெறலாம்.

 

நல்ல செரிமானம் பெற மலச்சிக்கல் தீர

சவ் சவ்வில் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து குடலில் உள்ள கழிவு நச்சினை ஒன்று சேர்த்து மென்மையாக்கி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் வருவது தடுக்கப்படுகிறது.

மேலும் உடல் ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்கவும் நார்ச்சத்து உதவுகிறது. எனவே இக்காயினை உண்டு நல்ல செரிமானத்தையும், மலச்சிக்கல், மூலம் போன்றவை ஏற்படாமலும் தடுக்கலாம்.

 

இதய நலத்திற்கு

சவ் சவ்வில் ஃபோலேட்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய இதய நலத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

ஃபோலேட்டுகள் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீனை அளவினைக் குறைக்கிறது. இதனால் இதய நோய் வருவது தடுக்கப்படுகிறது. ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள உணவினை உட்கொள்ளும்போது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 55 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

மெக்னீசியம் இரத்தம் உறைதலைத் தடைசெய்து இதயத்துடிப்பினை சீராக்கி நல்ல கொலஸ்ட்ராலின் அளவினை அதிகரிக்கிறது. எனவே இதய நலம் பேண இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

கர்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது இரத்தத்தில் ஃபோலேட்டுகளின் அளவானது குறைவாக இருக்கும். ஃபோலேடு பற்றாக்குறையின் காரணமாக குழந்தையின் பிறப்புக் குறைபாடுகள், இதயக்குறைபாடுகள், நரம்புக்குறைபாடுகள் ஆகியவை ஏற்படும்.

குழந்தையானது பிறக்கும்போது எடை குறைவாக இருக்கும். எனவே ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள சவ் சவ்வினை உணவில் சேர்த்துக் கொள்வது நலம் ஆகும்.

 

ஆரோக்கியமான சருமத்தினைப் பெற

சவ் சவ்வில் விட்டமின் இ, ஃபோலேட்டுகள், விட்டமின் சி, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. துத்தநாகம் சருமத்தில் எண்ணெய் சுரப்பினைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் பரு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

விட்டமின் சி சருமம் மூப்படைவதை தள்ளிப்போடுகிறது. ஃபோலேட்டுகள் சருமத்தின் உறுதிப்பாட்டினை அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான சருமத்தினைப் பெற சவ் சவ்வினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

அனீமியாவைத் தடுக்க

இரும்புச்சத்து குறைபாட்டினால் அனீமியா நோய் உண்டாகிறது. சவ் சவ்வில் உள்ள விட்டமின் பி2 மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவுகிறது. இக்காயில் உள்ள ஃபோலேட்டுகள் இரத்த சிவப்பணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடைய உதவுகிறது.

இதில் உள்ள விட்டமின் கே-யானது காயம் உண்டாகும்போது இரத்த உறைதலை உண்டாக்கி இரத்த சிவப்பணுக்களைச் சேமிக்கிறது.

மேலும் இக்காயில் காணப்படும் விட்டமின் சி, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து ஆகியவை இரும்புச்சத்தினை உடல் உட்கிரகிக்க உதவுகின்றன. எனவே சவ் சவ்வானது அனீமியாவிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

 

ஆரோக்கிய உடல்எடை குறைப்பிற்கு

சவ் சவ்வானது அதிகளவு நார்ச்சத்தினையும், குறைந்த எரிசக்தியினையும் கொண்டுள்ளது. சவ் சவ்வினை உண்ணும்போது இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தினால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது.

இதனால் உண்ணும் உணவின் அளவானது குறைகிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இடைவேளை உணவாக சவ் சவ்வினை உண்டு ஆரோக்கியாக உடல்எடை குறைப்பினைப் பெறலாம்.

 

சவ் சவ்வினை வாங்கும் முறை

இக்காயினை வாங்கும்போது மிதமான அளவுடன் புதிதாக ஒரே சீரான பச்சை நிறத்துடன், விறைப்பான காயினை தேர்வு செய்ய வேண்டும். பெரிய கடிமான தோலுடன் கூடியவற்றைத் தவிர்க்க வேண்டும். மேற்பரப்பில் வெட்டுக் காயங்கள், முளைவிட்ட காய்களைத் தவிர்க்க வேண்டும்.

இக்காய் நீர்ச்சத்து மிகுந்ததால் அறையின் வெப்பநிலையில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியில் சரியான வெப்பநிலையில் 2-3 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இக்காயினை தோல் நீக்கும்போது வெளிவரும் பிசுபிசுப்பான திரவம் ஒரு சிலருக்கு கையில் அரிப்பினை உண்டாக்கும். எனவே கைகளில் உறையினை அணிந்து இக்காயின் தோலினைச் சீவலாம்.

இக்காயானது அப்படியே, குழம்பாக, பொரியலாக பயன்படுத்தப்படுகிறது. சட்னி, சாலட்டுகள், சூப்புகள், கேக்குகள், ரொட்டிகள் தயார் செய்யவும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

ஃபோலேட்டுகள், விட்டமின் பி6, நார்ச்சத்து மிக்க சவ் சவ்வினை உணவில் சேர்;த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.