அன்பளிப்பு – கவிதை

அதிகாலை சூரியன் உதித்தான்

யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை

மற்றும் ஒருநாள் பிறந்து விட்டது என்று

வியாபிக்கும் மௌனத்தைச் சலனமற்று

காலம் மாற்றிக் கொண்டே இருக்கிறது

முன்பு என்பது புகைப்படத்திலோ

கண்ணாடி பெட்டியிலோ காணக் கிடைக்கிறது

இரவு பகல் என்கிற இவ்வளவு பெரிய வித்தியாசம்

அவன் மனதிற்கு இல்லை

அவன் உடல் வழியே

நேராக இறங்குகிறது ஒரு நாள்

மரத்திற்குத் தெரியும் அதன் கிளைகளைப் பற்றி

கிளைக்குத் தெரியும் அதன் இலைகளைப் பற்றி

முடிவின்மையைத் தொடங்கும் வானம் இறப்பதற்குச் சமம்

நிழலின் மாயம் கூடுகிற உச்சி வெயில்

வழிப்போக்கனுக்கு அளிக்கிறது ஓர் அன்பளிப்பு

புஷ்பால ஜெயக்குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.