அரசுப்பள்ளி ஓர் சமூக நிறுவனம்

அரசுப்பள்ளி ஆசிரியர் என கூறிக் கொள்வதில் ஒவ்வொரு ஆசிரியரும் பெருமிதம் அடைவதைப்போல், ஒவ்வொரு மாணவனும் தான் ஒரு அரசுப்பள்ளி மாணவன் எனக் கூறிக் கொள்வதில் பெருமிதம் மிக அடைய வைப்பதே அரசுப்பள்ளியின் தலையாய நோக்கமாகும்.

‘எல்லாம் இலவச மயம், ஆதரவற்றோர் புகலிடம், பெற்றோர் இருந்தும் முறையான பராமரிப்பு இன்றிப்போன மாணவர்கள் தஞ்சம் புகுமிடம்’ இது போன்ற வார்த்தைகளே அரசுப்பள்ளியைப்பற்றிய பேசுபொருளாக பரவலாக உலவுகின்றன.

எத்தனை ஏளனங்கள் தம்மீது விழுந்திடினும், அவை அனைத்தையும் அழகாக செதுக்கிடும் உளிகளாக மாற்றக்கூடிய வல்லமை தமக்கு உண்டு என்கிற
மமதையும்கூட அரசுப்பள்ளியின் சிறப்பம்சமாகும்,:

தம்மீது கூரிய முட்களே எறியப்பட்டாலும், அவற்றைக்கூட மாணவர்களுக்கு உகந்த மலர்கிரீடங்களாக மாற்றும் மந்திரசக்தி மிக்கோனாக ஆசிரயரை உருமாற்றம் செய்திட்டதும் அரசுப்பள்ளிதான்.

தனியார் பள்ளிகள் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் ‘கட்டுப்பாடுடன் இணைந்த கல்வியை வழங்குகிறோம்’ என்று.

ஆனால் அரசுப் பள்ளியோ பட்டறிவோடு இணைந்த கல்விமுறையை வழங்குகிறோம் நாங்கள் என்று சொல்லவில்லை, மாறாக நிரூபித்துக்கொண்டு வருகிறது.

வாழ்க்கையில் எத்தகு இன்னல்கள் வந்தாலும், துயர் பலத் தொடர்ந்தாலும், அவற்றை தூசியாக கடந்து போகக்கூடிய மனப்பக்குவத்தை கற்றுத்தருவதுதான் அரசுப்பள்ளி.

சமூகத்தில் நல்ல குடிமகனாக மிளிர நல்லொழுக்கமும், தரமான கல்வியும் தேவை.

அத்தேவையை சரியான விகிதத்தில் சமூகத்திற்கு தர பலமான தளத்தை அமைத்துக் கொடுக்கும் முதல் சமூக நிறுவனமாக அமைந்ததுதான் அரசுப்பள்ளி.

ஆனந்தமாய் படிக்க.

ஆடிப்பாடி களிக்க,

அன்னியோன்யமாய்

ஆசானிடம் பழக.

ஆகாயப் பறவையின்

சுதந்திரம் போல்

சுற்றித் திரியும்

மாணவப்பருவத்தின்

முதல் படி நிலைதான்

இன்றைய அரசுப்பள்ளி

அதுவே நாளைய

சமூகத்தின் ஆணிவேர்!

மஞ்சுளா ரமேஷ்

ஆரணி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.