அரத்தை – மருத்துவ பயன்கள்

அரத்தை பல நூற்றாண்டுகளாக இந்திய மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. குடும்ப வைத்திய முறையிலும் அரத்தை மிக உயர்ந்த இடத்தை வகிக்கின்றது. வேர்க்கிழங்குகளே அதிகமாக மருத்துவத்தில் பயன்படுபவை.

அரத்தை வேர்கிழங்குள் காரச் சுவையும், வெப்பத் தன்மையும், கொண்டவை. முடக்குவாதம், சிறுவர்களுக்கான சுவாச நோய்கள், வாத நோய்கள், குடல் வாயு, தொண்டை நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகமாகின்றது. மேலும், வயிற்று நோய்களுக்கு மருந்தாகவும், கிருமிநாசினியாகவும், குடல் புழுக்களை வெளியேற்றுதற்கும் பயன்படுகின்றது.

அரத்தை செடி வகையைச் சார்ந்தது; 2மீ வரை உயரமாக வளரக்கூடியது. அரத்தை இலைகள் நீளமானவை, அகலத்தில் குறுகியவை, மேல்பக்கம் அடர்த்தியான பச்சையாகவும், கீழ்ப்பக்கம் சாம்பல் பச்சையாகவும், ஓரங்கள் வெண்மையாகவும் காணப்படும். இலையின் நடுநரம்பு வலிமையானது.

அரத்தை மலர்கள் 3 செ.மீ. வரை நீளமானவை. பச்சை கலந்த வெண்மை நிறமானவை, தொகுப்பானவை. பழங்கள் சிறியவை, ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறமானவை. பூ இதழ் வெண்மையாக, சிவந்த கீற்றுகளுடன் காணப்படும். அரத்தை வேர்க்கிழங்குகள் மணமுள்ளவை.

அரத்தை இயற்கையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலையின் கிழக்குச் சரிவுகளில் விளைகின்றது. இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகின்றது. அரத்தை பேரரத்தை, காலங்கல் மற்றும் தும்ரஷ்டகம் ஆகிய பெயர்களிலும் வழங்கப்படுகிறது. அரத்தை வேர்க்கிழங்குகள் காய்ந்த நிலையில் நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும்.

தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாக அரத்தையை வெயிலில் நன்கு காயவைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். ¼ தேக்கரண்டி தூளை, 1 தேக்கரண்டி அளவு தேனுடன் கலந்து, தினமும் காலை, மாலை வேகைளில் சாப்பிட்டு வரவேண்டும்.

அல்லது ஒரு சிறு துண்டு அரத்தையை வாயிலிட்டு நன்கு மென்று சுவைக்க காரமும் விறுவிறுப்பும் உண்டாகி உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்க வேண்டும்.

அடிபட்ட வீக்கம், வலி குறைய அரத்தையை வெந்நீர் விட்டு அரைத்து பசைபோல செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

பல்வலி, ஈறுவீக்கம் குணமாக அரத்தைத் தூளை சம அளவு பற்பொடியுடன் கலந்து காலை, மாலை வேளைகளில் பல் துலக்கி வர வேண்டும்.

சித்தரத்தை என்கிற வகையும் அரத்தையில் உண்டு. சிற்றரத்தை என்றும் கூறப்படும். இதன் வேர்க்கிழங்கும் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும். இது சீனாவில் பெருமளவு வளர்க்கப்படுகின்றது.

இதற்கு அரத்தையைவிட அதிக மணமும் காரச்சுவையும் உண்டு. இதனுடைய மருத்துவப் பயன்களுக்காக வங்காள தேசத்திலும், வட இந்தியாவிலும் பெருமளவு வாணிக ரீதியாக பயிர் செய்யப்படுகின்றது.

சித்தரத்தை காய்ந்த வேர்க்கிழங்குகள், மார்புச்சளி, இருமல், பல்நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மையையும், பசி அதிகரிக்கும் பண்பினையும் கொண்டவை.