ஆரஞ்சு டேடிபேர்

கொசுக்கடிக்கு
புரண்டு படுக்கையில்
மகளின்
இறுக்கம் தளர்ந்ததால்
சினுங்கியது பொம்மை

தன்னைவிட
கைக்கு அடக்கமான
அவள் தம்பியை
கட்டிக் கொண்டதால்
இறுகிப்போனது
அதன் பஞ்சுப் பொதி

அவள்
திரும்பிப் படுக்கும் வரை
நட்சத்திரங்களை
கொசுவலை வழியாக
பார்க்க முயன்றன
டெடிக் கண்கள்

தூக்க மயக்கத்தில் கூட
மறுமுறை பிடியை
விட்டுவிடக்கூடாது என
திறந்தே இருந்தன
அதன் கைகள்

வாகன ஒலிகளுக்கு
மத்தியில் எப்படியாவது
அவளின் கனவு உளறல்களை
கேட்கத் தயாராக இருந்தது
மீதமுள்ள ஒற்றைக் காது

நேரம் வெகுவாக
கரைந்த பின்னர் தான் திரும்பினாள்

வாரிக் கட்டிக்கொண்டு
இதயத்தை ஊடுருவப் பார்த்தது
சென்ற ஞாயிறு மகள்
குப்பையிலிருந்து
எடுத்துவந்த
ஆரஞ்சு கலர் டெடிபேர்

த. கமல் யாழி
மதுரை – 625 122
கைபேசி : 87781 12886
மின்னஞ்சல் : yazhikamal@yahoo.com

23 Replies to “ஆரஞ்சு டேடிபேர்”

  1. பெண் குழந்தைகளுக்கும் டெடி பொம்மைகளுக்கும் மிக நெருக்கமான ரகசியமான வார்த்தைகளற்ற சமிஞ்சைகள் இருக்கவே செய்கின்றன. விஞ்ஞானிகளாலும் உளவியலாளர்களாலும் கூட யூகிக்க முடியாத ஒரு தனி உலகம் அவர்கள் பொம்மையோடு இருப்பது. அதை அழகாய் வரிகளில் வர்ணித்து உள்ளீர்கள். சிறப்பு தோழர். வாழ்த்துக்கள்.

    ஜெயஸ்ரீ பாலாஜி

  2. அருமையான கவிதை தோழர்
    வாழ்த்துகள் 💐💐💐💐
    சாலையோர மக்களின் வாழ்விடத்தையும் அக்குழந்தைகளின் ஏற்றுக்கொள்ளும் தன்மையும்,கிடைத்ததை தனதாக்கிக் கொள்ளும் பாங்கையும் தங்கள் கவிதை வெளிப்படுத்துகிறது.

    சிறப்பான முயற்சி தோழர்👌👌👌

  3. அருமை. நல்ல கவிதை. இனிய வாழ்த்தும் அன்பும் பாராட்டும்.

    சிணுங்கியது என்று வர வேண்டும்.

    எஸ் வி வேணுகோபாலன்

  4. சிறப்பு, மகள் குப்பையிலிருந்து எடுத்து வந்த ஆரஞ்சு டெடி கவிதை ஆகிவிட்டது…
    டெடி வழி மகள் பற்றி சிந்தித்த சிந்தனை மிகவும் அருமை தோழர்.

  5. ///நட்சத்திரங்களை கொசுவலையின் வழியாக பார்க்க முயன்றன டெடி கண்கள்/// உள்ளீடு கொண்ட‌ அருமையான கற்பனை வரிகள்

  6. அருமையான கவிதை வரிகள், ஏழை மக்களின் வாழ்வு, குப்பையில் கிடைத்த டெட்டி பொம்மைக்கும பெண் குழந்தைக்கும் உள்ள உள‌ பூர்வமான பினைப்புகளை கடத்தும் அருமையான வரிகள். நடைபாதை வாழ்க்கை நன்றாக தெரிகிறது.

  7. அழகு,ஆனந்தம்,ஆச்சர்யம்.
    எதற்கு?
    இதற்குத்தான்.
    அதாகப்பட்டது உயிரில்லாத பொருள்தானே என ஒதுக்காமல் அதற்குள்ளும் இருதயம் இருந்து ஏக்கங்கள் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? என எண்ணிப் பார்த்து எழுதியதையும், அது இவ்வளவு தூரம் நம் மனசைக் கொள்ளை கொண்டு விட்டதே என்பதிலும் மகிழ்ச்சி நினைக்கும்போதே.

    ஆசிரியரின் மென்மனம் ரசிக்கும்படி உள்ளது.

    டெடிபேர் உடன் நாமும்தான் காத்திருக்கிறோம் அவள் திரும்புவதற்காக!!!!!!!💕👸

  8. ஜெ.பழனி

    ஒருவருடைய அன்புக்காக ஏங்குவதும், காத்திருப்பதும்
    வலிமிகுந்தது.

    ஒரு பொம்மையின் உணர்வுகள்,
    அன்புக்கு ஏங்கும் அதன் எதிர்பார்ப்புகள், உணர்வுகளின்
    நுட்பமும், ஆழமும், கொண்ட கவிதையாக உருப்பெற்று இருக்கிறது.

    அனைவரின் பார்வையும், கவனமும், தன்மீதே குவிய நினைக்கும் ஒரு குழந்தையின்
    எதிர்பார்ப்பு மனநிலையை,
    ஒரு (உயிரற்ற)பொம்மையின் மீது ஏற்றிப் பார்ப்பதனாலேயே,
    கூடுதல் பரிமாணம் பெறுகிறது,
    கவிதை.

    மென்மையாக, இதயத்தை ஊடுருவும் வார்த்தைகளால்,
    காத்திருப்பின் வலியைச் சொல்லும், (உருவாகக்) கவிதை,
    ஆரஞ்ச் டேடிபேர்.
    கவிஞர், கமல்யாழிக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்.

    ஜெ.பழனி.

  9. மிக அருமையான உருக்கமான வரிகளில் சிறார்களின் தூக்கமும் அவர்களின் இனிய நண்பனின் கனவு வெளிப்பாடும் அருமை.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.