இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் பற்றி நாம் அறிந்து கொளவது நம் நாட்டின் சுற்றுச்சூழலைக் காக்க உதவும்.

இந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப சில மரங்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டுள்ளன.

இன்னும் சில, இந்திய தட்பவெப்பத்தை ஒட்டிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு தற்போது இங்கு காணப்படுகின்றன.

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் பற்றிப் பார்ப்போம்.

ஆல், அரசு, மா, முருங்கை, கறிவேப்பிலை, வேப்பிலை, நாவல், இலுப்பை, செம்மரம், நெட்டிலிங்கம் ஆகியவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் ஆகும்.

ஆலமரம், அரசமரம், மாமரம், முருங்கை மரம், கறிவேப்பிலை மரம், வேப்ப மரம், நாவல் மரம், இலுப்பை மரம், செம்மரம், நெட்டிலிங்க மரம் ஆகியவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் ஆகும்.

ஆலமரம்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஆலமரம் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படும் நிழல் தரும் மரம் ஆகும்.

இதனுடைய அறிவியல் பெயர் ஃபிகஸ் பெங்காலென்சிஸ் என்பதாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வளரும் ஆலமரம் இந்தியாவின் தேசிய மரமாகும்.

இம்மரத்தின் கிளைகளில் தோன்றும் விழுதுகள் பூமியைத் தொட்டதும் வேர்விட்டு தாங்கு கிளையாக மாறுவது இதனுடைய சிறப்பு ஆகும். நாளடைவில் தாங்கு கிளைகள் அதிகம் தோன்றி சுற்றளவில் மிகப்பெரிய மரமாக மாறுகிறது.

இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துதல், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துதல், பாக்டீரியாவை அழிக்க போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

அரசமரம்

அரச மரம்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட அரசமரம் பிராண வாயுவான ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் மரம் ஆகும். 30 மீட்டர் உயரம் வளரும் இம்மரம் இந்து, பௌத்த மதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மரமாகக் கருதப்படுகிறது.

இதனுடைய அறிவியல் பெயர் பைக்கஸ் ரிலிஜியோசா என்பதாகும்.

இந்திய அரசால் வழங்கப்படும் மிகஉயரிய விருதான பாரத ரத்னா அரசமர இலை வடிவினைக் கொண்டுள்ளது.

புத்தர் ஞானம் பெற்ற போதிமரம் அரச மரமாகும்.

‘மரங்களில் நான் அரச மரமாவேன்’ என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய மருத்துவத்தில் மருத்துப் பொருட்களாக இம்மரத்தின் பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வடஇந்தியாவில் இம்மரம் பழங்களுக்காக அதிகளவு பயிர் செய்யப்படுகின்றன.

மாமரம்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மாமரம் முந்திரி குடும்பமான அனகார்டியாசியாவிலைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும்.

மாம்பழம் இந்தியாவின் தேசியப் பழமாகும்.

மாமரம் பாகிஸ்தான் மற்றும் பிலிபைன்ஸின் தேசிய மரமாகும். இம்மரத்தின் பாகங்கள் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.

மாங்கிபெஃரா இன்டிகா என்பது இதனுடைய அறிவியல் பெயர் ஆகும். இது வெப்பமண்டலங்களில் அதிகம் பயிர் செய்யப்படும் முக்கியமான பழமரம் ஆகும்.

முருங்கை மரம்

முருங்கை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.

முருங்குவது என்பதற்கு எளிதில் உடையக் கூடியது என்பது பொருள்.

எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டாதால் இதற்கு முருங்கை மரம் என்ற பெயர் ஏற்பட்டது. மோரிங்கா ஒலிஃபெரா என்பது இதனுடைய அறிவியல் பெயர் ஆகும்.

இது வறட்சியைத் தாங்கி வேகமாக வளரும் இயல்புடையது. இம்மரத்தின் காய், பூ, இலை போன்றவை உணவுப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மரப்பட்டை உள்ளிட்ட இம்மரத்தின் பாகங்கள் மருத்துப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கறிவேப்பிலை மரம்

கறிவேப்பிலை

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் தென்னிந்தியர்களின் உணவுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாகும்.

கறியில் பயன்படுத்தப்படும் வேப்பிலை வடிவத்தைக் கொண்ட இது கறி+வேம்பூ+இலை= கறிவேப்பிலை என்றழைக்கப்படுகிறது.

சுமார் 6மீ உயரம் வளரும் இயல்பினையுடைய இதனுடைய அறிவியல் பெயர் முர்ரயா கோனிகி என்பதாகும்.

கண்பார்வைத் தெளிவு, கருமையான கேசம், வயிற்று உபாதைகள் உள்ளிட்டவைகளுக்கு கறிவேப்பிலை அருபெரும் மருந்தாகும்.

வேப்ப மரம்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட வேப்ப மரம் மருத்துவ குணம் மிக்கது. வேப்பின் இலைகள் நோய்கிருமிகளை அழிக்கும் அல்லது தடுக்கும் தன்மை உடையது. வேப்பிலை இயற்கை பூச்சி கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள நிழல் தரும் மரங்களில் இது முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனுடைய அறிவியல் பெயர் அசாடிராக்டா இண்டிகா என்பதாகும். வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணெய் மருத்துவ குணம் மிக்கது.

பண்டைய தமிழகத்தின் மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் அடையாள மாலை வேப்பம்பூ மாலை என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மரத்தின் இலைகள், பூ, விதை, பட்டை, கிளை என எல்லா பாகங்களும் மருத்துவக்குணம் மிக்கதால் இது மூலிகைத் தாவரம் என்றழைக்கப்படுகிறது.

கோடைகாலத்தில் இம்மரக்காற்று வெயிலுக்கு ஆறுதல் அளிப்பதோடு ஆக்ஸிஜனையும் அதிகளவு வெளியிட்டு சுவாசக் கோளாறுகளையும் போக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

நாவல் மரம்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட நாவல் மரம் நம் நாட்டில் குளக்கரைகளிலும், சாலையோரங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. சுமார் 30 மீட்டர் உயரம் வளரும் இம்மரம் நிழல் தரும் மரவகைகளில் ஒன்று.

இதனுடைய அறிவியல் பெயர் ஸைனஸ்கியம் குமினியை என்பதாகும். இது மிர்டேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.

இம்மரத்தின் பழம், வேர், பட்டை, விதை, இலை ஆகியவை மருத்துவக்குணம் மிக்கவை.

இம்மரமானது இதனுடைய பழம், நிழல் மற்றும் காற்று தடுப்பான் என பல்வேறு பயன்களுக்காக வளர்க்கப்படுகிறது.

செம்மரம்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட செம்மரம் விலைமதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இது செஞ்சந்தனம், பிசனம், உதிரசந்தனம், இரத்தசந்தனம், கணி என்ற பெயர்களில் எல்லாம் அழைப்படுகிறது.

இம்மரம் வளர்வதற்கு நல்ல ஒளியும், வெப்பமும் தேவை. வெப்பநிலை மைனஸ் 1-க்கு கீழே செல்லும்போது இம்மரத்தால் உயிர் வாழ இயலாது.

இதனுடைய அறிவியல் பெயர் டெரோகார்பஸ் சாண்டலினஸ் என்பதாகும். இம்மரத்தின் பாகங்கள் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இம்மரத்திலிருந்து தயார் செய்யப்படும் எண்ணெய் நறுமணம் மிக்கது. இம்மரத்திலிருந்து சிலைகள், பொம்மைகள், தேர்ச்சிற்பங்கள், தட்டுகள் தயார் செய்யப்படுகின்றன.

இலுப்பை மரம்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இலுப்பை மரம் சப்போட்டா தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் பாசியா லோங்கிஃபோலியா என்பதாகும்.

சுமார் நூறு அடி உயரம் வளரும் இம்மரம் கோடைகாலத்தில் இலையை உதிர்த்து விடும். இதனுடைய விதைகளிலிருந்து தயார் செய்யப்படும் இலுப்பை எண்ணெய் விளக்கெரிக்கவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இலுப்பை மர விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணைக்காக இம்மரங்கள் பழங்காலத்தில் கோவில்களில் அதிகளவு வளர்க்கப்பட்டன.

நெட்டிலிங்க மரம்

நெட்டிலிங்க மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. படரும் கிளைகளின்றி நீண்டு நெடிதுயர்ந்து கூம்பு வடிவில் வளரும் இயல்புடையது.

இம்மரத்தின் இலைகளுக்காகவே இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன.

நெட்டிலிங்க மரம் பொதுவாக மதிலோரங்களிலும், பாதையின் இருபறமும் வளர்க்கப்படுகின்றது.

இதனுடைய அறிவியல் பெயர் பாலியால்தியா லாங்கிஃபோலியா என்பதாகும். இம்மரமானது மேளவாத்தியங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரங்கள் பெரும்பாலும் நிழல் தருபவைகளாகவும், உணவு மற்றும் மருந்துப்பொருட்களாகவும் திகழ்கின்றன. இம்மரங்களைப் பாதுகாப்போம். எதிர்கால சந்ததியினருக்கு வளத்தினை அளிப்போம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.