இன்பம் எப்படிப்பட்டது?

இன்பம் எப்படிப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்பமாக வாழவே எல்லோரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்தில் மட்டுமே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.

எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையில் இன்பமும் இருக்கும். இரவு பகல், மேடு பள்ளம், உயர்வு தாழ்வு, மேல் கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.

ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு இனிக்கிறது.

ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லோருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா?

விளையாட்டுப் பொம்மை குழந்தை பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா?

இன்று மகிழ்ச்சியளிக்கும் மனைவியோ மகனோ மற்ற பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருட்களில் இல்லை.

சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பும் பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது.

உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.

வணிகத்தில் தோல்வி, வாங்கிய கடனைத் திரும்பத் தரமுடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

‘துன்பப்படுவதற்கு என்றே என்னை இறைவன் படைத்து விட்டானோ’ என்று புலம்புகின்றனர்.

நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம்.

ஆனால் துன்பத்திற்கு எதிரே இருப்பவர்தான் காரணம் என்று கருதுகிறோம்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றார் சங்க கால புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பங்களுக்கு பிறர் காரணம் அல்லர். நாமேதான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவேதான் பாரதியார் ‘துன்பம் நெருங்கி வந்த போதும் – நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா’ என்று எச்சரிக்கை செய்கிறார்.

பிரச்சினைகள்தான் இன்ப துன்பத்திற்குக் காரணம். பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவார்.

பிரச்சினை யாருக்குத்தான் இல்லை?

சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.

‘எந்த பிரச்சினைக்கும் தீர்வு உண்டு’ என அமைதி அடைய வேண்டும். ‘அடுத்தடுத்து வரும் அலைகள்’ போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும்.

சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும்.

‘புயலுக்குப் பின் அமைதி’ என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.

ஒருமனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன். பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு – இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் சுவைக்காது.

இறந்துவிட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை. நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன.

மூங்கில் காட்டுக்குள் ஒருவன் சென்று அங்கிருந்த மூங்கிலை எடுத்தான். பின்னர் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் துளையிட்டான். துன்பத்தைப் பொறுத்துக் கொண்ட மூங்கில்தான் புல்லாங்குழலாகிப் புவியோர்க்கு இசையின் மூலம் மகிழ்ச்சி அளிக்கிறது. ‘குழலினிது’ என்று வள்ளுவர் வாயாலும் வாழ்த்துப் பெற முடிந்தது.

சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கருங்கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய் பரிணமிக்கிறது.

எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப்பட்ட வைரமாய்-பக்குவமாய் பதப்படுகின்றான்.

உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது. இரண்டினும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும்.

உலகியல் வாழ்வில், பொது நல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம்.

இன்பத்தில் சிரிக்கும்போது மனம் மலருகிறது. உடல் உறுப்புகள் எழுச்சி பெறுகின்றன. சுரப்பிகள் சுறுசுறுப்பாய் பணிபுரிகின்றன. உயிர் ஆற்றல் உத்வேகம் பெறுகிறது. நோய் நொடிகள் தாக்க அஞ்சுகின்றன.

எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.