உறவைத் தேடி – சிறுகதை

நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.

பொறுப்பேற்று சில வருடங்களிலேயே நல்ல பெயரும் மதிப்பும் அவருக்கு பெருகியது.

காரணம் அவர் ஏழை எளியவர்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கும் அனாதை சிறுவர்களுக்கும் என்று அனைத்து தரப்பினருக்கும் அரசு நலத்திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

அவரிடம் வயதுக்கேற்ற வேகமும் படிப்புக்கேற்ற விவேகமும் இருந்தது.

அவர் விடுமுறை நாட்களில் வேளாங்கண்ணி அன்னை தெரசா ஆதரவற்ற சிறுவர் நல காப்பகத்திற்கு சென்று வருவதில் மன நிம்மதி அடைவார்.

அங்கிருந்துதான் அவரின் வாழ்க்கை பாதை ஆரம்பமாயிற்று. அங்கு சிறுவர் காப்பகத்தில் வளர்ந்து அரசு பள்ளியில் பயின்று, சில பெரிய மனம் படைத்தவர்களின் உதவியுடன் படிப்பை தொடர்ந்து இன்று இந்த நிலையை எட்டியுள்ளார்.

அவருக்கு தன்னைப் பெற்ற தாய் தந்தை யார் என்று தெரியாது.
தன்னை வளர்த்து ஆளாக்கிய பெருமை அனைத்தும் சர்ச்சில் உள்ள பாதிரியாரையும், தன்னைப் பேணி பாதுகாத்து வளர்த்த
ஆயா மரியாவையும் தான் சேரும்.

இவர்களை தன் சிறு வயதில் தாய் தந்தையாக நினைத்திருந்த அவருக்கு இப்போது எல்லாம் புரிந்து போயிற்று இவர்கள் தன் தாய் தந்தை இல்லை என்று.

அவ்வப்போது அவருக்கு தன் தாய் தந்தையர் மீது உள்ள ஏக்கம் வந்து வந்து செல்லும்.

ஒரு நாள் மன உளைச்சலுக்கு ஆளாகி துக்கம் தொண்டையை அடைக்க தீர்மானமான ஓர் முடிவுக்கு வந்தார் அருள்தம்பி.

இந்த முறை எப்படியேனும் பாதரிடம் தன் ‘தாய் தந்தை யார்?’ என்ற விபரத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.

அதற்கேற்றார் போல் ஒரு நாள் விடுப்புடன் வாய்ப்பும் கிடைத்தது.

காப்பகத்திற்கு சென்று அங்கு உள்ளவர்கள் அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு பாதிரியாரிடம் பேசிக்கொண்டிருந்தார் அருள்தம்பி.

எல்லாவற்றையும் பேசிவிட்டு பாதிரியாரிடம் மெல்ல ஆரம்பித்தார்.

இதுவரையில் கேட்க தைரியம் இல்லாமல் இருந்த அருள்தம்பிக்கு இப்போதுதான் துணிவு வந்தது .

“ஃபாதர் என்னை வளர்த்து ஆளாக்க நீங்கள் இருவரும் நிறைய கஷ்டப்பட்டு இருக்கீங்க. நான் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். ஆனால் என் மனதில் சின்ன ஒரு வருத்தம் இருக்கிறது.”

“சொல்லுப்பா அருளு என்ன வருத்தம்? நீதான் இப்போ ரொம்ப ரொம்ப பெரிய ஆளா ஆயிட்டியே.”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பாதர். எப்போதும் எனக்கு நீங்கதான் பெரியவங்க.”

” சரிப்பா உனக்கு என்ன மனவருத்தம் சொல்லு. நான் தீர்த்து வைக்கிறேன்.”

“ஃபாதர் அது வந்து எப்படி எங்க இருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரியல. உங்ககிட்ட எப்படி கேக்குறதுன்னு தெரியல” என்று இழுக்க.

பாதர் குறுக்கிட்டு “என்னப்பா புள்ள நீ? இவ்வளவு பெரிய மனிதராகியும் இப்படி இருக்கியே கேளுப்பா கேளு” என்றார்.

அருள்தம்பி தலையை அசைத்தவாரு ” அது ஒன்னும் இல்ல பாதர்
நான் இந்த காப்பகத்திற்கு வந்த நாளை தான் பிறந்த நாளாக கொண்டாடுகிறேன்.

எனக்கு பிறந்த நாள் எது? என் தாய் தந்தை யார்? என்ற உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

தாய் தந்தை இல்லாமல் எந்த ஒரு குழந்தையும் பிறந்து விடுவதில்லை. இதைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றால் என் உள்மனசு நான் சாகும்வரை ரணமாகவே இருக்கும்.

அதனால்தான் உங்களிடம் எப்படி கேட்பது என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.”

“இதைக் கேட்க ஏன் இவ்வளவு குழப்பம்? இப்பயாவது உனக்கு தைரியம் வந்துச்சே சொல்றேன் …” அவரே தொடர்ந்தார்.

“ஒருநாள் காலையில ஆறு மணி இருக்கும். அப்போது வாசலில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு வந்து பார்த்தேன்.

பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. யாரையும் அருகில் காணோம்.

நான் வெளியில் ஓடி அங்குமிங்கும் தேடி பார்த்தேன். அப்போது தூரத்தில் இரண்டு பெண்கள் நடந்து போவது தெரிந்தது.

விறுவிறு என்று அவர்கள் அருகில் சென்று ‘இந்தாம்மா, என்ன காரியம் பண்ணிட்டு போறீங்க. இங்கே வாங்க’ என்று கூப்பிட்டு வந்து விசாரித்தேன்.

‘யாருமா நீங்க? அந்த குழந்தையை இங்கே வச்சுட்டு போறீங்களே ‘

இருவரும் பேச ஆரம்பித்தார்கள். “ஐயா நாங்க எந்த தவறும் செய்யலங்கையா. இவ பேரு முத்துலட்சுமி என் பேரு பூங்கோதைங்க.

முத்துலட்சுமிக்கு கை கால் முடியாது. நாங்கள் இருவரும் திருவாரூர் பெரிய கோயில் வாசலில் உட்கார்ந்து இருப்போம்.

அங்கு வர்றவங்க, போறவங்க ஏதாச்சும் சாப்பிட கொடுத்தால் சாப்பிடுவோம். இரவு நேரங்களில் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து தங்கி கொள்வோம்.

நேற்று இரவு பஸ் ஸ்டாப்பில் தூங்கிக் கொண்டிருந்தோம். இரவு 11 மணி இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் டிப்டாப்பாக இருந்தார்கள்.

கையில் ஒரு கட்டைபையுடன் ரொம்ப நேரமா எங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அந்த பொண்ணு …’சே.இந்த புள்ள நம்மகிட்ட வந்ததுல இருந்து ஒரே அழுதுட்டே இருக்குது. இது நம்ம கைய விட்டு போறப்ப தான் எனக்கு நிம்மதி.’

அதற்கு அந்த டிப்டாப் ஆசாமி ‘இரு இரு நாளைக்கு காலையில போய்விடும். நம்மளுக்கு பணமும் வந்துரும். நாம நிம்மதியா இருக்கலாம்’ என்று சொல்ல.

அப்போது நைட் டியூட்டி பார்க்கும் இரண்டு கான்ஸ்டேபிள் கையில் லத்தியுடன் வர, இவர்கள் இருவரும் கட்டை பையை கீழே வைத்துவிட்டு நைஸாக அப்படியே நடந்து போனார்கள்.

அப்போது பை அசைந்தது. நானும் இவளும் அந்த பையை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று இருட்டுக்குள் வந்து மறைந்து விட்டோம்.

சிறிது நேரம் போனதும் போலீஸ்காரங்க போய்ட்டாங்க. அந்த டிப்டாப் ஆசாமி இரண்டு பேரும் வந்து தேடி.பார்த்துட்டு ஏதோ பேசிக்கிட்டு போனாங்க .

நாங்கள் இருவரும் இருட்டில் இருந்து வெளியே வந்து கோயில் வாசலுக்கு சென்று பையை பார்த்தோம்.

பையில் ஒரு அழகான ஆண் குழந்தை கை கால்களை உதைத்துக் கொண்டு இருந்தது.

முத்துலட்சுமி சொன்னாள் ‘அழகான குழந்தை நாமே வளர்க்கலாம்’ என்று.

நான் சொன்னேன் ‘அடி ஏண்டி, நாமளே பிச்சை எடுத்து பொழப்பு நடத்திக்கிட்டு இருக்கோம். இதுல இந்த குழந்தை வேற வளர்ந்து பிச்சை எடுக்கணுமா? யார் பெத்த புள்ளையோ எங்க தேடிட்டு இருக்காங்களோ?”

இந்தப் பிள்ளையை நாம வச்சுக்க வேணாம் ஏதாவது காப்பகத்தில் விட்டு விடுவோம். எனக்கு தெரிஞ்சி வேளாங்கண்ணியில இருக்கிறதா சொன்னாங்க’ன்னு சொன்னேன்.

அதனால்தான் இங்கே வந்தோம். இதுக்கு மேல இந்த குழந்தையை நீங்க பார்த்துக்குங்க.

ஐயா ஏதாவது பிரச்சனை என்றால் எங்கள எங்கேயும் தேட வேண்டாம்; கோயில் வாசலுக்கு வந்தா போதும்’ என்று சொல்லி கொடுத்துவிட்டு சென்று விட்டார்கள். எனக்கு அதுதான்பா தெரியும்” என்றார் பாதர் .

அதுவரையில் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அருள்தம்பி

“ஃபாதர் உங்களிடம் இன்னொரு விஷயமும் சொல்லணும். அதற்கு உண்டான நேரமும் காலமும் நெருங்கி வரும்போது சொல்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே எழுந்து புறப்பட்டார் அருள்தம்பி.

தன் மாளிகையில் இருந்தபடி பாதர் சொன்னதை அனைத்தும் யோசித்து பார்த்தார் அருள்தம்பி.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தார் .

அப்போது அவருடைய சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் தொலைபேசி சினுங்கியது.

அவர் தொலைபேசியை கையிலெடுத்து காதுக்கு இணைப்பைத் தந்து, “ஹலோ … “

மறுமுனையில், “ஹலோ சார் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா … ஆள கையாலயே புடிக்க முடியல. ..ம்… இருக்கட்டும். ஒசந்த பதவி, ஆட்சி அதிகாரம் கையில கிடைச்சிருச்சுல அதுதான் என்னைய கூட மறந்துட்டே”
என்றது ஒரு பெண் குரல்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆயிஷா. பாத்தியா நீகூட இப்படி பேசுற. நானே உனக்கு போன் பண்ணலாம்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள நீயே போன் செஞ்சிட்ட எப்படி இருக்கே? உம்மா வாப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா …”

“அதெல்லாம் எல்லாரும் நல்லா இருக்காங்க. வாப்பாவுக்கு தான் கொஞ்ச நாளா உடம்பு சரியில்லை. கடலுக்கு போகாம வீட்ல இருக்காரு. நாங்க தான் வாப்பாவ பாத்துக்கிட்டு இருக்கோம்.”

“ஆமாம் நீ ஏன் என்னமோ மாதிரி பேசுற எதுவும் பிரச்சனையா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. சும்மா மனசு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.”

“என்ன மறுபடியும் அம்மா அப்பா நினைப்பா. சரி போய் பாதர பாக்கணும் பேசணும்னு சொன்னியே. பார்த்தியா? ஏதாவது திருப்தியான பதில் கிடைத்ததா?”

தம்பி அங்கு நடந்ததை எல்லாம் சொன்னார்.

“ஒன்னும் புண்ணியம் இல்லை. என்ன பண்ண போறேன் எப்படி கண்டுபிடிக்க போறேன்னு தெரியல …”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல உன்னால முடியும். எனக்கு என்னமோ அவங்க கிடைத்து விடுவாங்க என்கிற நம்பிக்கை இருக்கு.

மனசை போட்டு குழப்பிக்காத; அமைதியா ஒக்காந்து யோசி ஏதாவது ஒரு வழி கிடைக்கும்.

உனக்கு நான் இருக்கிறேன். என் அம்மாவும், வாப்பாவும் இருக்கிறார்கள் ஃபாதர் இருக்கிறார். அப்புறம் என்ன?

இது எல்லாத்துக்கும் மேல நம்மள படைத்த கடவுள் இருக்கிறார். தைரியமா இரு.

உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எனக்கு போன் பண்ணு. அப்புறமா நான் பேசுறேன்.”

நிம்மதி பெருமூச்சுடன் போனை வைக்க ஏதோ பாரம் குறைந்து
தெளிவு பிறந்ததைப் போல் உணர தூக்கம் வந்தது உறங்கச் சென்றார்.

மறுநாள் காலையில் ஆபீசுக்கு வந்தவர், அதிகாரிகளை அழைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில் குளங்களில் மற்றும் பஸ் ஸ்டாண்ட், கடைத்தெருவில் ஆங்காங்கே இருக்கும் பிச்சைக்காரர்களை அழைத்து வரும்படியும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் இலவச மனைப்பட்டாகளும் தன் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேறு ஏதும் உதவி கோரினால் அதையும் வழங்கப்படும்’ என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

உதவி கேட்டு வருபவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து அவரிடம் கொடுக்கும்படி கூறினார்.

இரண்டு தினங்களில் பெயர், விபரங்கள் சேகரிக்கப்பட்ட நகல் அவர் மேசையில் வைக்கப்பட்டது.

அருள்தம்பி நகல்களை புரட்டிப் புரட்டிப் பார்க்க பூங்கோதை என்ற பெயர் கண்ணில் பட்டது.

நகலின் விவரப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் தினம் அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பூங்கோதை என்ற வயது முதிர்ந்த பாட்டியை மட்டும் தன் இருப்பிடத்திற்கு அழைத்து சென்று, தன் உதவியாளர்களிடம் பாட்டியை குளிக்க வைத்து உணவளித்து தன்னிடம் அழைத்துவரும்படி சொன்னார். அதன்படி அழைத்து வந்தனர்.

அருள்தம்பி பாட்டியிடம் விஷயத்தை புரியும்படி சொல்லி விவரத்தை கேட்க, “பாட்டி இது நடந்தப்போ எனக்கு 32 வயசு இருக்கும்.

இப்போ எனக்கு வயசு 60 ஆயிடுச்சு. என் கூட இருந்த முத்துலட்சுமியும் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டாள்.

நானும் முத்துலட்சுமியும் தான் அந்த காப்பகத்தில் குழந்தையை விட்டு வந்தோம். இப்போ அந்த குழந்தை எப்படி இருக்கோ தெரியல.

இருந்தாலும் அது நினைவா என்னிடம் ஒரு பொருள் இருக்குது. அந்தக் கோயில் வாசலில் வைத்து குழந்தையை பார்க்கும் போது குழந்தையின் கழுத்தில் ஒரு தாயத்து இருந்தது.

அந்த தாயத்தில் ஒரு மரமும் இரண்டு வாள் சின்னமும் அப்புறம் ஏதோ புரியாத மொழியில் எழுதி இருந்தது.

அந்தக் குழந்தையின் நினைப்பா என் சுருக்குப் பையில் இன்னமும் அது இருக்குது.” அதை எடுத்து இந்தாங்க என்று கொடுக்க.

அருள்தம்பி அதை கையில் வாங்கி பார்த்துவிட்டு, இதுக்கப்புறம் நீங்கள் எங்கேயும் போகக்கூடாது என்கூடவே இருக்கணும் என்று சொல்லிவிட்டு வெளியில் புறப்பட்டார்.

இரண்டு நாட்கள் சென்றது நாளிதழ் ஒன்றில் காயத்துடன் கூடிய புகைப்படத்துடன் ஓர் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதில் ’28 வருடங்களுக்கு முன்பு காயத்துடன் காணாமல் போன குழந்தை. சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாரேனும் இருந்தால்
இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும்’ என்று அச்சிடப்பட்டிருந்தது.

இரண்டு மாதங்கள் சென்றிருக்கும்.

அந்த முகவரியைத் தேடி ஓர் இஸ்லாமிய வயதான தம்பதியினரும். பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறியபெண்ணும் வந்திருந்தனர்.

முதியவரின் கையில் அந்த பேப்பர் இருந்தது.

நாங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள …தேத்தி… என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். என் பெயர் முகமது யூசுப். என் மனைவியின் பெயர் நசீமா பேகம்.

என் மனைவியை 28 வருஷத்துக்கு முன்பு நாகப்பட்டினம் தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்து பிரசவம் ஆனது.

அழகான ஆண் குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காணாமல் போயிற்று. குழந்தையின் பெயர் முஹம்மது அலி.

பர்த் சர்டிபிகேட்டும் அன்றைய தினத்தில் போலீசில் கம்ப்ளைன்ட் பண்ண ஆதாரமும் என்னிடம் உள்ளது.

குழந்தையின் கழுத்தில் பேரீச்சம் மரமும் இரண்டுவாளும் பிஸ்மில்லாஹி என்ற வசனம் பதித்த தாயத்தும் போட்டு இருந்தோம்.

இந்த பேப்பரில் புகைப்படத்துடன் கூடிய விளம்பரத்தை பார்த்து இங்கே வந்தோம். இதோ எங்களிடம் உள்ள ஆதாரங்கள்” என்று கொடுக்க.

அருள்தம்பிக்கு கண்களில் கண்ணீர் சுரக்க தொடங்கியது.

தன் தந்தையை இறுகக் கட்டித் தழுவிக் கொண்டு “நான்தான் அப்பா அந்த குழந்தை” என்று தாயத்தை கையில் கொடுத்து விபரங்களை எல்லாம் சொல்ல, முகமது யூசப் திகைத்து நின்றார்.

என்ன செய்வது என்ன சொல்வது என்று புரியவில்லை.

தன் மகனின் கையை இழுத்து தன் மனைவியின் கையில் கொடுத்து இருவர் கைகளையும் சேர்த்து பற்றினார்.

தன் மகனை நினைத்து அழுது அழுது வறண்ட தாயின் கண்களில் நீர் பிறப்பெடுத்து கைகளை நனைத்தது.

தந்தை முகமதுயூசுப்க்கு வார்த்தைகள் எழவில்லை.

தன் மகளை சைகையால் அழைத்து “இவள்தான் உன் தங்கை. நீ காணாமல் போனதுக்கு அப்புறம் நீண்ட வருடத்திற்கு பிறகு இவள் பிறந்தாள். இவள் பெயர் தில்ஷாத்” என்றும் அறிமுகம் செய்ய உறவுகள் எல்லாம் சேர்ந்து ஒரே குடும்பமாக ஆகினர்.

ஒருநாள் அருள்தம்பி என்ற முகமது அலியை பாதர் பார்க்க வந்தார்.

பாதரை உட்கார வைத்து உபசரித்து விட்டு தன் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் முஹம்மது அலி.

எல்லாம் முடிந்த பின்பு ஃபாதர் “ஆமாம் அருளு அன்னைக்கு என்ன பார்த்துட்டு வர்றப்போ. இன்னொரு விசயம் இருக்கு; நேரமும் காலமும் கூடி வர்றப்போ சொல்றேன் என்று சொன்னியே. என்ன ஆச்சு?” என்றார்.

முகமது அலி “அடப்போங்க பாதர் எனக்கு வெட்கமா இருக்கு.” என்று தலையை குனிய.

“என்னப்பா வெட்கப்படறியா?” என்று பாதர் கேட்க.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பாதர். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கும் என் கூட படித்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நண்பர்களாகத்தான் பழகினோம். அந்தப் பெண்ணிற்கு அம்மாபட்டினம். ஒரு இஸ்லாமிய மீனவ குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கும் அந்தப் பெண் என்றால் இஷ்டம்” என்று சொல்ல.

பாதர் “எல்லாம் உன் மனசு போலவே நல்லதாக நடக்கும்.” என்றார்.

அடுத்த ஒரு சில தினங்களில் ஃபாதர், ஆயா மரியா
முஹம்மது யூசுப் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரும் அந்தப் பெண்ணின் தாய் தந்தையிடம் பேசி புரிய வைத்தார்கள்.

பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் ஒரு நல்ல நாளில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடிந்தது. அனைத்து உறவுகளும் ஒன்று திரண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.