உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை

வெள்ளம் போல விரிந்து பரவும்

வினையின் தொற்று வாராமல்

மெள்ள அறிவை மிகவே கூட்டி

மனதும் உடலும் மாசுநீக்கிக்

கிள்ளிக் களையும் காலம் வரவேக்

காத்தி ருப்போம் களையெடுக்க

உள்ள நோய்கள் உடனே விலக

உள்ளத் தூய்மை உடன்செய்வோம்.!

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பாடுபொருள்

கடந்த ஆண்டுகளில் தீநுண்மி காரணமாக பலவித இன்னல்களுக்கு ஆளானோம். விதவிதமாக வடிவெடுக்கும் இந்தத் தொற்றிலிருந்து, இன்னும் முழுவதுமாக, பூரணமாக மீளமுடியவில்லை. மனதளவில் அனைவருமே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

காலம் ஒருநாள் மாறும், நிச்சயமாக இந்த நோயிலிருந்து நாம் மீள்வோம். இப்போதைக்கு மருந்தும், தடுப்பூசியும் வெகுவாகப் பலனளித்தாலும், மெய்யைத் தூய்மையாகவும், மனத்தைச் செம்மையாகவும் வைத்துக் கொள்ள முயற்சிப்போம்.

தொற்றை அகற்றுவோம்; நோயை விரட்டுவோம்.

தகவல்

ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி கடைசி நாளன்று, “உலக அரிதான நோய்கள் தினம்” என அறிவிக்கப்பட்டு, நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.

அன்பின்
பெருவை கி. பார்த்தசாரதி
9884284108

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.