உளுந்து தக்காளி சட்னி செய்வது எப்படி?

உளுந்து தக்காளி சட்னி அருமையான சட்னி ஆகும். அசத்தலான சுவையில் இருக்கும் இதனை எளிதில் செய்யலாம்.

உளுந்து பயன்படுத்தி செய்யப்படுவதால் இது ஆரோக்கியமானது. உளுந்தினைப் பொடி செய்து இச்சட்டினியில் பயன்படுத்தப்படுகிறது.

இதனைத் தயார் செய்ய வெங்காயம், தேங்காய் சேர்க்கப்படாததால் பயணங்களின் போதும் இதனைத் தயார் செய்து பயன்படுத்தலாம்.

இச்சட்னி தயார் செய்ய நன்கு பழுத்த சதைப்பற்றான தக்காளி பயன்படுத்த இதனுடைய சுவை அதிகரிக்கும்.

இனி சுவையான உளுந்து தக்காளி சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

மல்லி விதை – 1 ஸ்பூன்

சீரகம் ‍ – 1/2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 3 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

கறிவேப்பிலை – 2 கீற்று

தக்காளி – 3 எண்ணம் (நடுத்தரமானது)

புளி – கொட்டைப்பாக்கு அளவு

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கீற்று

கடுகு – ‍ 1/2 டீஸ்பூன்

வெந்தயம் – 5 எண்ணம்

மிளகாய் வற்றல் – 1 எண்ணம்

பெருங்காயப் பொடி – மிகவும் சிறிதளவு

செய்முறை

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வாணலியில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு சேர்த்து ஒருசேர வறுக்கவும்.

உளுந்தினைச் சேர்த்ததும்

பருப்பு சிவக்க ஆரம்பித்ததும் அதில் சீரகம், மல்லி விதைகளைச் சேர்த்து வறுக்கவும்.

சீரகம் சேர்த்ததும்
மல்லி விதைகளைச் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கவும்.

மிளகாய் வற்றல் சேர்த்ததும்
கறிவேப்பிலை சேர்த்ததும்
வெள்ளைப்பூண்டு சேர்த்ததும்

இரண்டு நிமிடங்களில் அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி அதில் உள்ள பொருட்களை தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.

அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியைச் சேர்த்துக் கிளறவும்.

தக்காளி சேர்த்ததும்

அதனுடன் தேவையான உப்பு மற்றும் மஞ்ச‌ள் பொடி சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் பொடி சேர்த்ததும்
உப்பு சேர்த்ததும்

தக்காளி ஓரளவு வதங்கியதும் அதனுடன் புளி சேர்த்து வதக்கவும்.

புளி சேர்த்ததும்

தக்காளி மசிய வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.

தக்காளி மசிய வெந்ததும்

ஏற்கனவே வறுத்த உளுந்தம் பருப்பு பொருட்களை தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

பருப்பு கலவையை பொடியாக்கியதும்

வதக்கிய தக்காளியை இப்பொடியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி விழுதினைச் சேர்த்ததும்

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி சேர்த்து தாளிதம் செய்து அரைத்த கலவையில் கொட்டவும்.

தாளிதம் செய்யும்போது

சுவையான உளுந்து தக்காளி சட்னி தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வெள்ளைப்பூண்டினை இடித்து எண்ணெயில் தாளித்து சட்டினியில் சேர்க்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

One Reply to “உளுந்து தக்காளி சட்னி செய்வது எப்படி?”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.