உள்ளத்தனையது உயர்வு என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
கனவுகளின் கதாநாயகன் மறைந்த முன்னாள் பாரதக் குடியரசுத் தலைவர் மேதகு A.P.J.அப்துல் கலாம் அவர்கள், கனவு காணவேண்டும் என்றார்.
தூங்கும் போது காணும் கனவினை அவர் சொல்லவில்லை.
மாறாக, அதனை நாம் சாதிக்கும் வரை நம்மை கண் துஞ்ச விடாமல் ‘கருமமே கண்ணாயினார் இவர்’ என செயல்பட வைக்கும் கனவு காண வேண்டும் என்றார் அப்பெருந்தகை.
இதனை இன்றைய தினம் பள்ளி மாணவ மாணவியர் மனதில் விதைத்துச் சென்ற கலாம் அவர்கள் கண்ட கனவு வல்லரசு இந்தியா.
ஆம்! கலாம் அவர்கள் சிறுவயது முதலே தான் கண்டு பலித்த கனவுகள் குறித்து தனது நூல்களில் எழுதியுள்ளார்.
தான் கண்ட வல்லரசுக் கனவும் சாத்தியமாக நல்ல களம், இளம் பிஞ்சு நெஞ்சங்களின் உள்ளம் தான் என தேர்ந்தெடுத்தார்; நல்ல எண்ணங்களை அங்கே விதைத்தார்.
2002ல் குடியரசுத் தலைவராக ஆனது முதல் தனது இறுதி மூச்சு வரை தினந்தோறும் மாணவர்களைச் சந்தித்தார்.
கலாம் கண்ட கனவுகளை நனவாக்க நம் மாணவர் சமுதாயம், இளைஞர் சமுதாயம் உயர வேண்டும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம்
ஒரு கிராமத்துல, ஒரு தந்தையும் அவரது 12 வயது மகனும் நடந்து போய்கொண்டு இருந்தாங்க. அப்போ அந்த பாதை ஒரு குளத்தங்கரை ஓரமாக வந்தது.
அந்தக் குளத்துல தண்ணீர் நிரம்பி இருந்தது. அதுல அழகழகா தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கி இருந்தன.
அப்பா பையனிடம் ”தம்பி தாமரையை பார்த்தியா?” எனக் கேட்டார்.
அதற்குப் பையன் “அப்பா தாமரை அழகு. அதுல ரீங்காரமிடுகிற வண்டுகளின் சத்தம் அதைவிட அழகு. அதனை விடவும் அலையடிக்கிற தண்ணீர். தாமரை இலை மேல ஒட்டியும் ஓட்டாமலும் நீர் விளையாடுறது இன்னும் அழகு” என்று அவன் கண்ட காட்சியை சொன்னான்.
அப்பா திரும்ப ஒரு கேள்வி கேட்டார்.
“தம்பி இந்தத் தாமரை பூவு தண்ணீருக்கு மேலே இருக்குது. அதனைத் தாங்கி நிற்கின்ற தண்டின் உயரத்தை உன்னால சொல்ல முடியுமா?”.
பையனும் “அப்பா 2 அடி, இல்ல 3 அடி, இல்லப்பா 5 அடி இருக்கும்” என்றான்.
அதற்கு அப்பா “தம்பி நீ சொல்லுற பதில் சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம்” என்று சொன்னார்.
பையன் “எப்படிப்பா? ஏதாவது ஒரு பதில்தானே சரியாக இருக்கும். நானோ 3 பதில்கள் சொல்லி இருக்கிறேன். அது சரியாகவும் இருக்கலாம்; இல்ல தப்பாகவும் இருக்கலாம் என்று ஏன் புதிர் போடுறீங்க? கொஞ்சம் புரியும் படியாகத்தான் சொல்லுங்கப்பா” என்றான்.
அதற்கு அப்பா, “தம்பி இந்த குளத்துடைய நீர் மட்டம் எவ்வளவோ, அதுதான் தண்டின் உயரம். அதாவது குளத்து நீர் மட்டம் 2 அடியாக இருந்தால், நீ சொன்ன 2 அடி பதில் சரியாகும்.
அது 3 அடியாக இருந்தால் நீ சொன்ன இரண்டாவது பதில் சரியாகும்.
அதுவே 5 அடி இருந்தால் நீ சொன்ன மூன்றாவது பதில் சரியானதாக இருக்கும். அதுவே 5 அடிக்கு மேலாக இருந்துச்சுனா நீ சொன்ன எல்லாப் பதில்களும் தப்பாக போகும்.”
பையனும் “அப்பா, நல்லா சொன்னீங்க! இந்த விஷயம் எனக்குத் தெரியாமப் போச்சே.” என அப்பாவைப் பாராட்டினான்.
அதற்கு அப்பா “தம்பி, இதனை நான் சொல்லவில்லை; திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார்” என்றார்.
உள்ளத்தனையது உயர்வு
“என்னப்பா எனக்குத் தெரிஞ்சி திருவள்ளுவர் தமிழ் புலவர்தானே! அவரு எப்போ கணக்கு வாத்தியாராக மாறினார்” அப்படின்னு பையன் கேட்டான்.
அதற்கு அப்பா, “தம்பி திருவள்ளுவர் சொல்லாத விஷயங்களே கிடையாது. ஒரு குறளில் அவர்,
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு” (திருக்குறள் -595)
அப்படின்னு சொல்லி இருக்கின்றார்.
அதாவது, தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரையை தாங்கி நிற்கும் தண்டின் அளவாகும். தண்ணீர் உயர உயர தண்டின் நீளமும் அதிகரிக்கும்.
அது போல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு, அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே (உள்ளத்தனையது உயர்வு) இருக்கும்.
நமது உள்ளத்தில் ஊக்கமெனும் நீர் உயர உயர, நமது உயர்வு அழகான தாமரை மலர் போல உலகத்தார் கண்ணில் படும்; நமக்குப் பெருமையும் கிடைக்கும்.
இதைத்தான் வள்ளுவரும் இந்தக் குறளில் சொல்லி இருக்கின்றார்” என்றார்.
உடனே பையன், “அப்பா இதைத்தானே, மேதகு கலாம் அய்யா அவர்களும் சொல்லி இருக்கிறார்” என்றான்.
“ஆமாம் தம்பி! வள்ளுவர் ‘குளத்து தண்ணீர்’ என்று சொன்னதைத்தான் அப்துல்கலாம் அய்யா ‘கனவு’ன்னு சொல்லி இருக்கிறார். அதாவது உள்ளத்தால் நீ காணுகின்ற கனவின் உயரம்தான் உனது உயர்வாக மாறுகிறது.”
இதற்கு உற்ற உதாரண புருஷர் நம்ம கலாம் அய்யாதான்.
அவர் பிறந்தது பாரதத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கடற்கரை கிராமம்; பள்ளிப் படிப்பை படித்தது தமிழ் வழிக் கல்வி.
ஆனால் அவர் பாரத்தின் முதல் குடிமகனாக உயர்ந்து நம்ம தேசத்தின் புகழைத் தரணியெங்கும் தலை நிமிரச் செய்தாரே! எனவே திரும்பவும் சொல்கிறேன்.
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு”
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294
சிறந்த கதை சிறப்பு உதாரணம் ஆழ்ந்த கருத்து முழுமையான ஒரு காட்சி படைப்பு.
மிக அருமையான பதிவு. மிக எளிய நடை மற்றும் எதார்த்தமான எடுத்துக்காட்டு. நன்றி பேராசிரியர் சாமி. தொடர்ந்து எழுதுங்கள்.
அருமை அருமை..
Continue your writing… useful to young people
Congratulations ❤️❤️❤️❤️
அருமை சார்👍🏼
படிப்பதற்கு எளிமையாக உள்ளது சார்.உங்களது படைப்புகள் பாமர மக்களுக்கு எளிதாக இருக்கும்.நன்றி தொடர்ந்து எழுத வேண்டும்
I congratulate you for this excellent article as it’s so thought provoking. My wishes for your future endeavours.
ஐயா முனைவர் சாமி அவர்களுக்கு வணக்கம்.
இந்த பதிவை படித்தவுடன் ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது…
நான் இளநிலை முதலாம் ஆண்டு தாவரவியல் படிக்கும் போது முதல் நாள் வேதியியல் ஆய்வக கூடதிற்க்கு சென்றேன். அப்போது ஐயா தான் பேராசிரியர்.
எல்லா மாணவ மாணவிகளிடம் பிளஸ் டூவில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு என்று கேட்டார். அப்போது எனக்கு சொல்ல மிகவும் தயக்கமாக இருந்தது. ஏன் என்று கேட்டால் நான் தான் கடைசி மார்க். என்னிடம் கேட்டார் நீ எங்கு படித்தாய் என்று; அரசு பள்ளியில் என்றேன். அப்போது சொன்னார் நீ டிகிரி படிப்பது கடினம் இல்லை ரொம்ப சுலபம் என்றார்.
“எதுவும் கடினம் இல்லை” என்று ஐயா சொன்ன வார்த்தைதான் இன்றுவரைக்கும் என்மனதில் இருக்கிறது.
ஐயா இன்னும் பல படைப்புகள் எழுதுங்கள்.
நன்றி கலந்த வணக்கம்.
மிகவும் மிகவும் அருமை