என் குருவி

சிட்டுக்குருவி சிறகை விரிச்சு
பறக்கும் அழகை பார்க்க வந்தேன் – அதை

பட்டுப்போன மரத்தைப் போல
பார்க்க மனம் வருந்தி நின்றேன்

 

எட்டாத இடத்தில் என்குருவி
இருக்கிறதா கனவு கண்டேன் – அது

பட்டுச்சிறகினை இழந்து விட்டு
பாதையில் கிடக்க நானதிர்ந்தேன்

 

வட்டநிலவினை வண்ணச் சிறகினால்
மூடிக் கிடப்பதாய் நான் நெனச்சேன் -அது

வெட்டப்பட்டு தன் சிறகிழக்க
வேதனையில் வெதும்பி நின்றேன்

 

சுட்டும் விழியால் சூரியமலரை
தொடட்டும் என்றே காத்திருந்தேன் – அது

சுட்டுப்பட்டு இங்கே சும்மா கிடக்க
சூனியமாய் நான் உணர்ந்தேன்

 

எப்படி இருந்தும் என்குருவி
ஏகாந்தமாய் இருக்க கண்டேன் – அதை

எண்ணியதாலே வாழ்க்கை தன்னின்
ஏக்கத்தை நான் மறந்திருந்தேன்

– இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.