எல்லோரையும் போல

எல்லோரையும் போல நானும் இனிமேல்

இருந்திடல் வேண்டும்; நினைத்துக் கொண்டேன்.

இலக்கினை அடைய வேண்டும் அவ்வளவுதான்;

எந்தப் பாதை என்பது முக்கியமல்ல!

 

சிரித்துப் பேசி வேலை வாங்குவோம்;

காரியம் முடிந்ததும் கழற்றி விடுவோம்.

நம்மால் முடிந்த மட்டும் ஏமாற்றுவோம்;

நம்பிக்கைத் துரோகம் தவறல்ல திறமை!

 

பணம் சேர்க்க வேண்டும் பல தலைமுறைக்கு;

புகழ் வேண்டும் சிலை வைக்குமளவுக்கு;

பாதை சரியா தவறா தேவையில்லை;

பாக்கெட் நிறைகிறதா அதுவே கவலை!

 

நினைத்துக் கொண்டே இருந்தேன்.திடீரென

மனதிலோர் எண்ணம்; இப்படியெல்லாம்

இருப்பதென்றால் நான் இருந்தாலென்ன?

இல்லாவிட்டாலென்ன? என்ன வித்தியாசம்!

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.