ஏழாம் அறிவு

இயற்கையை பிரிந்து
செயற்கையை மணந்தது ஆறாம் அறிவு
இயற்கையோடு பிணைந்து
இறைவனை தரிசித்தது ஐந்தறிவு

அவித்த உணவை உண்டு
அல்சரை சேர்த்தது ஆறாம் அறிவு
அவியாத உணவை உண்டு
அழகை சேர்த்தது ஐந்தறிவு

தாய் மாமனை மணந்து ஊனமுற்ற
குழந்தையை பெற்றது ஆறாம் அறிவு
எந்த மாமனை மணந்தாலும் உருப்படியான
குழந்தையை பெற்றது ஐந்தறிவு

முறைகேடான உறவால் எய்ட்ஸ்
கொண்டு வந்தது ஆறாம் அறிவு
உறவுமுறை அறியாது உறவுகொண்டு எதை
கொண்டு வந்தது ஐந்தறிவு

ஆள்பாதி (ஆடைபாதி)யாகி அரைநிர்வாணமாய்
அவமானத்தோடு நின்றது ஆறாம் அறிவு
ஆடையே இல்லாமல் தன்மானத்தோடு
தலைநிமிர்ந்து நின்றது ஐந்தறிவு

ஆறாம் அறிவை மனிதனுக்கு தந்து
அநீதி இழைத்துவிட்ட
ஆண்டவனிடம் நீதி கேட்க
நமக்கு தேவை ஏழாம் அறிவு.

– S. சுசிலா

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.