கருணை கிழங்கு கோலா செய்வது எப்படி?

கருணை கிழங்கு அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருளாகும். இதில் கோலா செய்து அனைவரையும் அசத்தலாம்.

இனி சுவையான கருணை கிழங்கு கோலா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கருணை கிழங்கு – 250 கிராம்

பொரிகடலை (வறுகடலை) – 25 கிராம்

சின்ன வெங்காயம் – 25 கிராம்

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1½ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 எண்ணம் (சிறியது)

பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

கருணை கிழங்கு கோலா செய்முறை

முதலில் கருணை கிழங்கினை அவித்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

 

மசித்த கருணை கிழங்கு
மசித்த கருணை கிழங்கு

 

பொரிகடலையை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக்கவும்.

பின்னர் இஞ்சி, வெள்ளைப் பூண்டினை மிக்ஸியில்  அரைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் மசித்த கருணை கிழங்கு, தேவையான உப்பு, பொரிகடலைப் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரப் பிசையவும்.

 

மசித்த கருணை கிழங்குடன் பொடிவகைகளைச் சேர்த்ததும்
மசித்த கருணை கிழங்குடன் பொடிவகைகளைச் சேர்த்ததும்

 

பின்னர் கலவையுடன் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், உருவிய கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு சேர பிரட்டி சப்பாத்தி மாவு போல் திரட்டவும்.

 

வெங்காயக் கலவையைச் சேர்த்ததும்
வெங்காயக் கலவையைச் சேர்த்ததும்

 

திரட்டிய மாவினை சிறுஉருண்டைகளாக மாற்றவும்.

 

சிறுஉருண்டைகளாக மாற்றப்பட்ட கருணை கிழங்கு கலவை
சிறுஉருண்டைகளாக மாற்றப்பட்ட கருணை கிழங்கு கலவை

 

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை போடவும்.

 

எண்ணெயில் உருண்டைகளைப் பொரித்தெடுக்கும் போது
எண்ணெயில் உருண்டைகளைப் பொரித்தெடுக்கும் போது

 

ஒரு புறம் வெந்ததும் பிரட்டி எடுக்கவும்.

எண்ணெய் குமிழி அடங்கியதும் உருண்டைகளை எடுத்து விடவும்.

சுவையான கருணை கிழங்கு கோலா தயார்.

 

சுவையான கருணை கிழங்கு கோலா
சுவையான கருணை கிழங்கு கோலா

 

இதனை எல்லா சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

சிறுஉருண்டைகள் திரட்டும் போது அழுத்தி ஒரே சீரான உருண்டைகளாகத் திரட்டவும். இல்லை எனில் எண்ணெயில் பொரித்து எடுக்கும் போது உருண்டை பிரிந்து விடும்.

எண்ணெய் காய்ந்ததும் அடுப்பினை மிதமான தீயில் வைத்து உருண்டைகளைப் பொரித்து எடுக்கவும். இல்லை எனில் உருண்டை கருகி உட்புறம் வேகாமல் இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.