குதிரைவாலி தக்காளி புலாவ் செய்வது எப்படி?

குதிரைவாலி தக்காளி புலாவ் என்பது அருமையான கலவை சாதம் ஆகும்.

குதிரைவாலி அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சிறுதானியம் ஆகும்.

சுவையான குதிரைவாலி தக்காளி புலாவ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

குதிரைவாலி அரிசி – 400 கிராம் (1 பங்கு)

பச்சை பட்டாணி – 100 கிராம் (¼ பங்கு)

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – ஒரு கைபிடி அளவு

தண்ணீர் – 2 பங்கு

அரைக்க

தக்காளி – 5 எண்ணம் (நடுத்தர அளவு)

சின்ன வெங்காயம் – 12 எண்ணம் (நடுத்தர அளவு)

பெருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 6 எண்ணம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 எண்ணம் (பெரியது)

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

பட்டை – சுண்டுவிரல் அளவு

ஏலக்காய் – 3 எண்ணம்

கிராம்பு – 3 எண்ணம்

குதிரைவாலி தக்காளி புலாவ் செய்முறை

முதலில் குதிரைவாலி அரிசியைக் களைந்து பின்னர் அரை மணி நேரம் தேவையான தண்ணீரில் (2 பங்கு) ஊற வைக்கவும்.

 

ஊற வைத்த குதிரைவாலி அரிசி
ஊற வைத்த குதிரைவாலி அரிசி

 

பச்சை பட்டாணியை தோலுரித்துக் கொள்ளவும்.

 

பச்சைப் பட்டாணி
பச்சைப் பட்டாணி

 

சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.

இஞ்சி, வெள்ளைப் பூண்டினைத் தோலுரித்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகாய் வற்றல், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பெருஞ்சீரகம், சின்ன வெங்காயம், தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

 

சின்ன வெங்காயக் கலவை
சின்ன வெங்காயக் கலவை

 

தக்காளியை மையாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வதக்கவும்.

 

பட்டாணியைச் சேர்த்து வதக்கும் போது
பட்டாணியைச் சேர்த்து வதக்கும் போது

 

மூன்று நிமிடங்கள் கழித்து அரைத்த சின்ன வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.

 

அரைத்த கலவையைச் சேர்த்ததும்
அரைத்த கலவையைச் சேர்த்ததும்

 

இரண்டு நிமிடங்கள் கழித்து தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கும் போது
தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கும் போது

 

இரண்டு நிமிடங்கள் கழித்து அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து குக்கரில் சேர்த்து கொதிக்க விடவும்.

 

தண்ணீர் கொதிக்கும் போது
தண்ணீர் கொதிக்கும் போது

தண்ணீர் கொதித்ததும் அரிசி, தேவையான உப்பினைச் சேர்த்து கலவையைக் கிளறி குக்கரினை மூடி விசில் போட்டு அடுப்பினை சிம்மில் வைத்து ஏழு நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும். விசில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

குக்கரின் ஆவி அடங்கியதும் மூடியினை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி விடவும்.

 

கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்
கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

 

சுவையான குதிரைவாலி தக்காளி புலாவ் தயார்.

 

சுவையான‌ குதிரைவாலி அரிசி புலாவ்
சுவையான‌ குதிரைவாலி அரிசி புலாவ்

 

குறிப்பு

சிறுதானியம் எளிதில் அடிப்பிடித்து விடுவதால் குக்கரின் கைபிடியை பிடித்துப் பார்த்து கொதிப்பது நிற்பதை அறிந்து குக்கரினை அணைத்து விடலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.