குமரன்

மயில் மீது புவி தன்னை வலம் வந்த பெருமானே
மறவாதே உனையே மனம் – நான்
துயில் கொண்ட நிலைதனிலும் துயர் கொண்ட பொழுதினிலும்
துணையாக வருவாய் தினம்

வெயில் கால நிழல் போல வெளிர் வான மழைபோல
வினை தீர்க்க நீயே துணை – இனி
பயிர் நிறைந்த மண்போல பழம் நிறைந்த மரம்போல
பலம் பெறவே செய்வாய் எனை

குயில் கீதம் இசைத்தாலும் குழல் ஓசை எழுந்தாலும்
குமரா உன் அருளே துணை – இன்று
உயிர் தமிழின் வழியாக உணர்வெல்லாம் நீயாக
உருவாக செய்வாய் கவி

வயிற்றுக்கே பிழைப்பென்ற வழிதன்னில் செல்லாத
வரம் தன்னை தருவாய் நீயே – முருகா
தயிருள்ளே நெய்போல எனக்குள்ளே நீயிருந்து
தருவாயே அருளின் ஒளி

– செந்தூர்க்கவி

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.