கோதுமை பாதுஷா செய்வது எப்படி?

கோதுமை பாதுஷா என்பது பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய இனிப்பு வகை ஆகும்.

இதனை தயார் செய்ய வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதன் சுவை அதிகரிப்பதோடு உடல்நலமும் சிறக்கிறது.

இனி சுவையான கோதுமை பாதுஷா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

கோதுமை மாவு – 200 கிராம் (1 பங்கு)

தயிர் – 4 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 1 ஸ்பூன்

சோடா உப்பு – ½ ஸ்பூன்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் – 3 எண்ணம்

மண்டை வெல்லம் – 200 கிராம் (1 பங்கு)

தண்ணீர் – 1 பங்கு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

கோதுமை பாதுஷா செய்முறை

கோதுமை மாவினை அளந்து 1 பங்காகவும், தட்டிய வெல்லத்தை 1 பங்காகவும், தண்ணீரை ஒரு பங்காகவும் எடுத்துக் கொள்ளவும்.

முதலில் கோதுமை மாவினை வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

ஏலக்காயை நசுக்கிக் கொள்ளவும்.

ஆறிய கோதுமை மாவினை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதில் சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து ஒரு சேர கலந்து கொள்ளவும்.

 

கோதுமை மாவுடன் சோடா உப்பு, சர்க்கரை சேர்த்ததும்
கோதுமை மாவுடன் சோடா உப்பு, சர்க்கரை சேர்த்ததும்

 

இதில் தயிர் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கலந்து மெதுவாக பிசைந்து கொள்ளவும்.

 

தயிர், நெய் சேர்த்ததும்
தயிர், நெய் சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக தெளிந்து மெதுவாக ஒரு சேர பிசைந்து கொள்ளவும்.

 

திரட்டிய மாவு
திரட்டிய மாவு

 

திட்டிய‌ மாவினை ஒரு பாத்திரத்தில் போட்டு ஈரதுணியை வைத்து மூடி ½ மணி நேரம் வைக்கவும்.

பின்னர் மாவினை  சிறுஉருண்டைகளாகத் திரட்டவும்.

சிறுஉருண்டையை உள்ள கையில் வைத்து லேசாக அழுத்தி நடுவில் துளையிடவும்.

 

திரட்டிய பாதுஷா
திரட்டிய பாதுஷா

 

இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்யவும்.

 

திரட்டிய பாதுஷாக்கள்
திரட்டிய பாதுஷாக்கள்

 

மண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.

அதனை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.

வெல்லம் முழுவதும் கரைந்ததும் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

 

வடிகட்டப்பட்ட வெல்லக்கரைசல்
வடிகட்டப்பட்ட வெல்லக்கரைசல்

 

பின்னர் வெல்லக் கரைசலுடன் தட்டிய ஏலக்காயைச் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

கரைசல் கெட்டியானதும் ஆனால் பாகு பதத்திற்கு முன்னால் அடுப்பினை அணைத்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெதுவெதுப்பானதும், தட்டிய உருண்டைகளை போட்டு ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

உடனே சர்க்கரை கரைசலில் ஊற விடவும்.

மூன்று மணி நேரம் கழித்து சர்க்கரைப்பாகில் இருந்து எடுத்துவிடவும்.

 

கோதுமை பாதுஷாகளை சர்க்கரைப்பாகில் சேர்த்ததும்
கோதுமை பாதுஷாகளை சர்க்கரைப்பாகில் சேர்த்ததும்

 

சுவையான கோதுமை பாதுஷா தயார்.

 

சுவையான கோதுமை பாதுஷா
சுவையான கோதுமை பாதுஷா

குறிப்பு

பாதுஷாக்களை பொரித்து எடுக்கும்போது அடுப்பினை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.

சார்க்கரை பாகு சூடாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.