சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப்புலவர்களுக்குள் ஏற்பட்ட கலகத்தினை ஊமையான உருத்திர சருமனைக் கொண்டு நீக்கியதைக் குறிப்பிடுகிறது.

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து ஐந்தாவது படலமாக அமைந்துள்ளது.

சங்கப்புலவர்களுக்கிடையேயான கலகம், இறைவனார் ஊமையான உருத்திர சருமனைக் கொண்டு புலவர்களின் பாடல்களில் சிறந்தவற்றை அறிவிக்கச் செய்தது, சங்கப்புலவர்கள் தெளிவடைந்தது ஆகியவற்றை இப்படலம் விளக்கிக் கூறுகிறது.

சங்கப்புலவர்களுக்கு இடையே ஏற்பட்ட கலகம்

அகத்தியரிடம் இலக்கணம் கற்ற நக்கீரரிடம் தமிழின் சந்தேகத்தை தீர்த்துக் கொண்ட சங்கப்புலவர்கள் பல்வேறு வகையான செந்தமிழ்ப் பாடல்களைப் பாடினர்.

நாளடைவில் புலவர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்த பாடல்களே சிறந்தவை என்று எண்ணி மனதில் பெருமிதம் கொண்டனர். இப்பெருமிதத்தால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

தங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை நீக்க வல்லவர் சொக்கநாதர் ஒருவரே என்பதை அவர்கள் தீர்மானித்து திருக்கோவிலை அடைந்தனர்.

சொக்கநாதரை வணங்கி “எம்பெருமானே, எங்கள் பாடல்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவற்றில் சிறந்தவற்றை அடையாளம் காட்டி எங்களின் ஐயத்தை தீர்க்க வேண்டும்” என்று கூறி வழிபட்டனர்.

இறைவனார் சங்கப்புலவர்களின் கலகத்தைத் தீர்க்க அருளுள்ளம் கொண்டார். அதனால் புலவரின் வடிவில் அவர்கள் முன்னர் தோன்றிய இறைவனார் “புலவர்களே, இம்மதுரைமாநகரில் தனபதி என்னும் வணிகர் ஒருவர் உள்ளார். அவருடைய மனைவி பெயர் தரும சாலினி என்பதாகும்.

இத்தம்பதியினருக்கு முருகக்கடவுளை ஒத்த மகன் ஒருவன் உள்ளான். அவனுடைய பெயர் உருத்திர சருமன் என்பதாகும். உங்களின் பாடல்களை சரியானவை எவை என்பதை அவனே அறிவிக்க வல்லவன். ஆனால் அவன் ஊமை.

அவனிடம் சென்று உங்களுடைய பாடல்களைச் சொல்லுங்கள். அவனுடைய புத்திக்கு இசைந்த பாடல் எதுவோ?, அதுவே சிறந்த பாடல்” என்று கூறினார்.

அதற்கு அவர்கள் “புலவரே, ஊமையன் எவ்வாறு எங்களின் பாடலின் தரத்தை அறிந்து, அதனை அறிவிப்பான்?” என்று கேட்டனர்.

அதற்கு புலவரான இறைவனார் “அவன் உங்கள் பாடலின் சொல்லாழத்தையம், பொருளாழத்தையும் உணர்ந்து அதற்கு ஏற்ப தலையசைப்பான். தோளினை உயர்த்தி மனம் மகிழ்வான். இதனைக் கொண்டு சிறந்தவற்றை அறிந்து உங்களுக்குள் உண்டான கலகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

உருத்திர சருமனின் தீர்ப்பு

சங்கப்புலவர்கள் அனைவரும் வணிககுலத்தைச் சார்ந்த ஊமையான உருத்திர சருமனை அவனுடைய வீட்டில் கண்டனர். பின்னர் அவனை அழைத்து வந்து தம் சங்கத்தில் இருத்தினர்.

அவனின் திருமுன்னர் அமர்ந்து தங்களுடைய பாடல்களைப் பாடினர். அதனைக் கேட்ட உருத்திர சருமன் சிலவற்றிற்கு தலையசைத்தான். பலவற்றிற்கு தோள்களை உலுக்கினான்.

நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோரின் பாடல்களைக் கேட்டதும் உடல் பூரித்து மெய்சிலிர்த்து கண்ணீர் பொழிந்து தலையசைத்து பெரும் மகிழ்ச்சி கொண்டான்.

ஊமைச்சிறுவனின் உணர்வினையே தராசாகக் கொண்டு புலவர்கள் அனைவரும் தமக்குள் உண்டான கலகத்தைப் போக்கி நட்புக் கொண்டனர்.

பின்னர் நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோரின் பாடல்கள் உலகில் பரவி சிறந்தோங்கியது. புலவர்கள் குற்றமற்ற நூல்களை ஆராய்ச்சி செய்து சிறப்புடன் விளங்கினர்.

இப்படலம் கூறும் கருத்து

உடல் குறைபாடு உடையோர் அறிவில் சிறந்தவர்களாகவும் இருப்பர் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

-வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

அடுத்த படலம் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.