சரஸ்வதி காதல்

[ராகம் – சரஸ்வதி மனோஹரி] [தாளம் – திஸ்ர ஏகம்]

 

பிள்ளைப் பிராயத்திலே — அவள்

பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்

பள்ளிப் படிப்பினிலே — மதி

பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட

வெள்ளை மலரணைமேல் — அவள்

வீணையுங் கையும் விரிந்த முகமலர்

விள்ளும் பொருளமுதும் — கண்டேன்

வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா!

 

 

ஆடிவரு கையிலே — அவள்

அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்

ஏடு தரித்திருப்பாள், — அதில்

இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை

நாடி யருகணைந்தால், — பல

ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று

கூடி மகிழ்வ? மென்றால், — விழிக்

கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!

 

 

ஆற்றங் கரைதனிலே — தனி்

யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்

காற்றை நுகர்ந்திருந்தேன், — அங்குக்

கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை

ஏற்று மனமகிழ்ந்தே ?அடி

என்னோ டிணங்கி மணம்புரிவாய்? என்று

போற்றிய போதினிலே, — இளம்

புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா!

 

 

சித்தந் தளர்ந்ததுண்டோ? — கலைத்

தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு

பித்துப் பிடித்ததுபோல் — பகற்

பேச்சும் இரவிற் கனவும் அவளிடை

வைத்த நினைவை யல்லால் — பிற

வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு

பத்திரண் டாமளவும் — வெள்ளைப்

பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா!

– பாரதியார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.