சிரிப்பைத் தொலைத்த சிற்றீசல் – கவிதை

புற்றுக்குள் இருந்து நான்

புறப்பட்ட வேளையிலே

என் மரணம் ஒரு நாளில் என்று

எழுதப்பட்ட போதினிலும்

என் காலக் கதவோரம்

நின்றென்னைக் கவ்வக் காத்திருக்கும்

சில காட்டேரிகள்!

எப்படி சிரிக்க நான்?

காட்டேரி கடுவாயில் சிக்காமல்

நிற்காமல் பறந்து நான்

நெடுதூரம் வந்தாலும்

வயிறை நிரப்ப உயிரைக் கொல்லும்

வாழ்க்கைப் போராட்டத்திலே

எப்படி சிரிக்க நான்?

ஏணி எங்கே என்று தேடி

எட்டிப் பிடித்து ஏறுகையில்

பாம்பின் பிடியில் சிக்கிய பகடையாய்

கால் இடறி தடுமாறி

மீண்டும் புறப்பட்ட இடம் வந்து

மீண்டெழ முடியாத தூண்டில் மீனாய்

எப்படி சிரிக்க நான்?

காயங்கள் ஆறும் முன்னே

கத்தியோடு காத்திருக்கும்

காலத்தின் கடுந்தனலில்

கால் வைத்துக் கொண்டிருக்க

எப்படி சிரிக்க நான்?

சிக்கலான முள் நடுவில்

சிக்காமல் சிரிக்கும் செம்பூவாய்

சிணுங்கத் தெரியாமல் சிறகொடிந்த

சிரிப்பைத் தொலைத்த

சிற்றீசல் நான்!

சி.பபினா B.sc

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.