சிறந்த இசை பிறந்தது

தூக்கணாங் குருவி ஒன்று

தூயதாய் ஒரு கூடு கட்ட

மேக்கால காட்டிலிருந்த

மூங்கிலிலை மெல்ல கடிக்க…

யாராடா அது? என் இலையை

கிழிப்பவன் என மூங்கில் குரல் கேட்டு

மெல்ல சிரித்தது குருவி…

உன் வலிமை தெரிந்தே

உன் இலையால் கூடு கட்டிட நினைத்தேன்

தவறா தோழா சொல் நீ என்றது ….

என்னைப் பற்றி என்ன அறிந்தாய்

விரிவாய் சொல்லேன் சின்னக்குருவி

என்றது மூங்கில்…

மண்ணில் நன்றாய் வேரினைப் பாய்ச்சி

மனதால் பலமாய் உணரும் வரையில்

வளராதிருப்பது உன் குணம் என்பது தெரியும்…

பச்சைத் தங்கம் என்றே பலரும் அழைத்த போதும்

பறக்கும் வண்டு துளைத்திட மகிழ்வாய்

மெல்லிய காற்றினைத் தழுவிய பொழுதில்

இசையால் புவியை நிரம்பிடச் செய்வாய்

உன் காதலன் காற்றவன் கோபம் கொண்டால்

உன் தோளினை உரசி காட்டினை எரிப்பாய்

எல்லாம் எனக்குத் தெரியும்

எனவே உன் இலையினைத் தந்து உதவிடு

எனக்கு என்ற தூக்கணாங் குருவியை

மூங்கில் தட்டிக் கொடுத்தைக் கண்டு

சில்லெனக் காற்று வீசிய பொழுது

சிறந்த இசை பிறந்தது கண்டு

எல்லா உயிர்களும் ரசித்திட

நாமும் ரசித்து மகிழ்வோம்…

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.