சோதி வடிவான ஆதிமூலம் ..!!

ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு

நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!

நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்

வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !

காளத்தியப்பன் காசிநாதனை கண்டிட சுகம்கூடும் – நம்

கோலமும் மாறும் கோடீஸ்வரனின் பேரருள் நமைநாடும் !

ஆதிமூலனை அர்த்தநாரியை அனுதினம் துதிபாடு- நல்

சோதி வடிவான சொக்கநாதனை சொல்லிட பயமேது!

ஆதியண்ணலை ஆடும் நாதனை அடைந்திடும் வழிபாரு – பெரும்

பூதப்படையனை பாகம் பெண்ணனை பாடியே அருள்சேரு!

ஆடல் வல்லனை அடர் சடையனை அணைத்திடு மனதோடு- அந்த

ஓடேந்தியின் ஒளிர்மேனியில் ஒடுங்கிடும் இடம்தேடு!!!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.