சோற்றுக் கற்றாழை – மருத்துவ பயன்கள்

சோற்றுக் கற்றாழை சதைப் பற்றான சிறுசெடி வகைச் சேர்ந்தது. சோற்றுக் கற்றாழை வெப்பமான பகுதிகளில், வயல் வரப்புகளிலும் சற்றே உயரமான வேலிகளிலும் வளரும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். சோற்றுக் கற்றாழை நீண்டு உயர்ந்து வளர்ந்த தண்டுப் பூங்கொத்து சில நேரங்களில் காணப்படும். பூக்கள் பழுப்பான வெண்மை நிறமானவை.

சோற்றுக் கற்றாழை மடல் வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. சோற்றுக் கற்றாழையைப் பிளந்து நடுவில் பார்க்க நீர்ச்சத்துள்ள கொழ கொழப்பான சதைப்பகுதி காணப்படும். இதனையே சோறு என்பர். சோறு மிகுந்த இந்தக் கற்றாழை, சோற்றுக் கற்றாழை எனப்படுகின்றது.

கத்தளை, கற்றாழை, சிறுகத்தளை, குமாரி, கன்னி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்கள் இந்த தாவரத்திற்கு உள்ளன. சோற்றுக் கற்றாழையை நாம் அனைவரும் வீட்டில், தொட்டிகளில் வளர்க்க முடியும். அழகுச் செடியாகவும் வளர்க்கப்படுகின்றது.

சோற்றுக் கற்றாழைச் சாறு 6 தேக்கரண்டியுடன், ஒரு சிட்டிகை அளவு பொரித்த பெருங்காயமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும், தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ½ கிராம் அளவிற்கு தினமும் இரண்டு வேளைகள், சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.

மூலநோய் தீர, சோற்றுக் கற்றாழை இலைத் தோலை நீக்கி, சதையை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு பிடி முருங்கைப்பூ சேர்த்து, அம்மியில் அரைத்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சம்பழ அளவில் சாப்பிட்டு வர வேண்டும். தினமும் காலையில் மட்டும், ஒரு வாரம் வரை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தக் காலத்தில், உப்பு, காரம் நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.

சோற்றுக் கற்றாழை இலையை நீளமாகக் கீறி அதன் சதை வெளியே தெரியுமாறு செய்ய வேண்டும். கண் இமைகளை மூடி, அவற்றின் மேல், இலையின் கீறிய சதைப்பற்றான பகுதியை வைத்துக் கட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் இவ்வாறு செய்துவர கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு குணமாகும். இந்தக் காலத்தில் காரமான உணவுகளைக் குறைத்து வெயிலில் அலைவதையும் தவிர்க்க வேண்டும்.

சோற்றுக் கற்றாழை இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, காயவைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இரண்டு சிட்டிகை அளவு பொடியை, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால் கோப்பை தண்ணீரில் கலந்து பருக மலச்சிக்கல் தீரும். மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

சோற்றுக் கற்றாழை இலையைக் கீறி சதைப் பகுதியை வெளியே தெரியுமாறு செய்து, அதைக் காயத்தின் மீது வைத்து கட்டுப்போட வேண்டும். காயம் ஆறும் வரை தினமும் இருமுறைகள், இவ்வாறு தொடர்ந்து செய்ய வெட்டுக்காயங்கள் குணமாகும்.

சோற்றுக் கற்றாழை சோற்றை எடுத்துப் புதிதாகத் தினமும் மேலே வெண்படையின் மீது பூசிவர வெண்படை குணமாகும்.

சோற்றுக் கற்றாழைக் குழம்பு இன்றும் பரவலாகக் கிராமங்களில் செய்யப்படுகின்றது. உடல் சூட்டைக் குறைக்க இந்தக் குழம்பைச் சாப்பிடலாம்.