ஜாதிக்காய் – மருத்துவ பயன்கள்

ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும்.

ஜாதிக்காய் பிரதானமாகக் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம்.

ஜாதிக்காய் எண்ணெயை மேல் பூச்சாகத் தடவ, புண்கள், காயங்கள், பாரிசவாயு முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும், 2 சொட்டு அளவில் உள்ளுக்குள்; கொடுக்க, சீதபேதி, கழிச்சல் போன்றவையும் கட்டுப்படும்.

ஜாதிக்காய் மலேசியா போன்ற நாடுகளில் இயற்கையாக வளர்கின்ற மரம். இலங்கையிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. அடர் தொகுப்பில் இலைகள் கொண்ட பசுமையான சோலைகளில் காணப்படக்கூடியது.

ஜாதிக்காய் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை, பெரியவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. காய், சதைப்பற்றுள்ளது. மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஜாதிக்காய் பழங்கள், மிகவும் மணமுள்ளவை. மேலே பழுப்பு நிறமாகவும், உட்புறம் சதைப்பகுதி நிறைந்ததாகவும் இருக்கும்.

ஜாதிக்காய் தோலை நீக்கி உபயோகிக்கப்படுகின்றது. மேல் தோல் புளிப்பும், துவர்ப்பும் கொண்டது. ஊறுகாய் போடப் பயன்படுகின்றது. சாதிக்காய், குலக்காய் என்கிற பெயர்களும் உண்டு. உலர்ந்த பழங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாக குழந்தைகளுக்கு ½ தேக்கரண்டி அளவு தேனில், ஜாதிக்காய் 20 சுற்றுகள் இழைத்து, தினமும் இருவேளைகள், நாக்கில் தடவ வேண்டும்.
பெரியவர்களுக்கு ஜாதிக்காய் பொடியை ½ கிராம், அளவாக பாலில் கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம் சாப்பிட்டுவர வேண்டும்.

2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை வலியுள்ள இடத்தில் பூச பல்வலி குணமாகும்
ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம், இவற்றை நன்றாகத் தூள் செய்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, உணவுக்கு முன்னர், 2 கிராம் அளவு சாப்பிட்டுவர அஜீரணம் குணமாகும்.

ஜாதிக்காய், சுக்கு ஒவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம், நன்கு தூளாக்கி வைத்துக்கொண்டு, ½ கிராம் தூளுடன், ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து, உணவுக்கு முன்னர் சாப்பிட குடல்வாயு குணமாகும்.

சாதிக்காயை 10 சுற்றுக்கள் தேனில் உரைத்து, பசையாக்கி, கண்ணைச்சுற்றி பற்றுப்போட கண் கருவளையம் மறையும்.

 

ஜாதிபத்திரி

ஜாதிக்காயின் மீது, கிளைத்துப் படர்ந்த தோல் போன்று அடர்த்தியாகப் படர்ந்து மூடியிருக்கும் மெல்லிய கனித்தோல் ஜாதிபத்திரி (சாதிபத்திரி) ஆகும். பச்சையாக இருக்கும்போது சிவப்பாகவும், உலர்ந்த பின்னர் செம்மஞ்சள் நிறமாகவும் காணப்படும்.

ஜாதிபத்திரி காரம் மற்றும துவர்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வாசனை, நறுமணம் மிகுந்தது. விலை உயர்வான இந்த மருந்துப்பொருள், கறி மசாலாப் பொருட்கள், வெற்றிலைப்பாக்கு இவற்றிலும் குறைந்த அளவில் சேர்க்கப்படுகின்றது.

ஜாதிபத்திரி காமம் பெருக்கும் உடல்வெப்பத்தை அதிகமாக்கும் மாத்திரைகளில் சேர்கின்றது. கருப்பையை வலுவாக்கும். ஜாதிபத்திரியிலிருந்து பெறப்படும் எண்ணெய் வாயுத் தொல்லை மற்றும் பேதியைக் குணப்படுத்துகின்றது.