அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில், மருதூர், காரமடை

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.

மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தந்தாலும், இத்தலம் வந்து சேவித்த பக்தர்களின் வாழ்வில், எடுத்த காரியங்கள் எல்லாம் ஜெயமானதால் இவருக்கு ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும். 

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை (29-09-2018) சிறப்பு பூஜையையொட்டி அனுமந்தராயசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அலங்கார பூஜை முடிந்து திருமண் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் அபயம் அளித்தார். 

முன்னதாக புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவும், முத்துக்கல்லூர் மற்றும் சுற்று வட்டார பஜனைக் குழுவினரின் சிறப்பு பஜனையும் நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, புஜங்னூர், வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கு ஸ்ரீஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

– S.V.P. சங்கத்தமிழன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.