தக்காளி சாதம் செய்வது எப்படி?

தக்காளி சாதம் என்பது சுவையான கலவை சாதம் ஆகும். எளிதான முறையில் விரைவாக செய்யக் கூடிய தக்காளி சாதத்தின் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

திடீர் விருந்தினர்களின் வருகையின் போது இதனை வேகமாகவும், சுவையாகவும் செய்து அசத்தலாம். இச்சாதத்தினை எல்லோரும் விரும்பி உண்பர்.

தேவையான பொருட்கள்

சம்பா பிரியாணி அரிசி – 1/4 படி (400 கிராம்)

தக்காளி – 3 எண்ணம் (பெரியது)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள் (பெரியது)

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

உப்பு – தேவையான அளவு

முந்திரிப் பருப்பு – 8 எண்ணம் (முழமையானது)

மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1 1/2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – 2 கொத்து

தண்ணீர் – 2 பங்கு (அரிசியைப் போல்)

தாளிக்க

நல்ல எண்ணெய் – 1 குழிக்கரண்டி அளவு

நெய் – 5 ஸ்பூன்

பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 டேபிள் ஸ்பூன்

கிராம்பு – 2 எண்ணம்

பட்டை – ஆள்காட்டி விரல் அளவு

அன்னாசிப் பூ – 1 எண்ணம்

கல்பாசி – 1 ஸ்பூன்

ஏலக்காய் – 2 எண்ணம்

பிரியாணி இலை – 1 எண்ணம்

 

தக்காளி சாதம் செய்முறை

முதலில் அரிசியை அலசி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

தக்காளியை அலசி, சதுரத்துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

 

லேசாக அரைத்த தக்காளித் துண்டுகள்
லேசாக அரைத்த தக்காளித் துண்டுகள்

 

பச்சை மிளகாயை அலசி கீறிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி, நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

 

நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம்
நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம்

 

இஞ்சி, வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, அன்னாசிப் பூ, கல்பாசி, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

 

பின்னர் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம், மிளகாய் சேர்த்ததும்
வெங்காயம், மிளகாய் சேர்த்ததும்

 

வெங்காயம் கண்ணாடியாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்ததும்
இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்ததும்

 

பச்சை வாசனை நீங்கியதும், அதனுடன் அரைத்த தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

தக்காளி விழுதினைச் சேர்த்ததும்
தக்காளி விழுதினைச் சேர்த்ததும்

 

இரண்டு நிமிடங்கள் கழித்து அதனுடன் தேவையான உப்பு, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி ஆகியவற்றைச் சேர்த்து ,நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

 

கரம் மசாலா சேர்த்ததும்
கரம் மசாலா சேர்த்ததும்

 

எண்ணெய் பிரிந்ததும்
எண்ணெய் பிரிந்ததும்

 

 

பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து, தண்ணீர் கொதித்ததும், அலசிய சம்பா அரிசி, கொத்தமல்லி இலையைச் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போடவும்.

 

குக்கரை மூடும் முன்பு
குக்கரை மூடும் முன்பு

 

குக்கரில் ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்து, அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து ஒருசேரக் கிளறவும்.

சுவையான தக்காளி சாதம் தயார்.

 

சுவையான தக்காளி சாதம்
சுவையான தக்காளி சாதம்

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தேவையான காய்கறிகளைச் சேர்த்து சாதம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.