தாய்

கரம்பிடித்து நடைபயில விரல் தந்தாயே – நான்
கால்களிலே நிற்பதற்கு துணை வந்தாயே
விரல்பிடித்து எழுதிடஉன் முகம் கொடுத்தாயே – நான்
வெற்றி நடைபயில உன்முகம் மலர்ந்தாயே

மலர்கூட உன்கரம் போல் மணக்கவில்லையே – என்
மனம் என்றும் விரும்பும் மணம்அங்கு கிடைக்கவில்லையே
தளர்வுற்று நான் அயர உயிர்தந்தாயே – நான்
தடைதாண்டி செல்வதற்கு உடன்வந்தாயே

மழை தன்னில் நான் நனைய குடையாய் வந்தாய் – என்
மனச் சோர்வின் மருந்தாக நீதான் நின்றாய்
குழைபெற்ற வாழையென நீதான் நின்றாய் – என்
குணம் உயர குவலயத்தில் உறவாய் வந்தாய்

கவிமகளை கரம்பிடிக்க தமிழாய் வந்தாய் – என்
கவிதைகளில் கருவாக நீயே நின்றாய்
புவியிதனில் உனக்கு நிகர் எவர்தான் அம்மா – உன்
புகழ்பாட பொருள் கூட நீதான் தந்தாய்

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.