திருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம்

திருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம் கடல் கடந்து பாடப்படும் பெருமை மிக்கது. இது சைவத்தின் முழுமுதல் கடவுளான சிவபெருமானின் மீது பாடப்பட்ட இருபது பாடல்களின் தொகுப்பு ஆகும்.

திருவெம்பாவை என்பதில் திரு – தெய்வீகம்; எம் – உயிர்த்தன்மை; பாவை – வழிபாட்டிற்கான தெய்வம் எனப் பொருள் கொள்ளலாம்.

இதனுடைய திரண்ட பொருள், தெய்வீகமான திருவருள் எம் உயிர்த்தன்மையுடன் இணைந்து இயங்குகிறது என்பதாகும்.

மார்கழியின் அதிகாலை இறைவழிபாட்டின் போது திருவெம்பாவையின் இருபது பாடல்களும், திருப்பள்ளியெழுச்சியின் பத்து பாடல்களும் சேர்த்து 30 நாட்களுக்குப் பாடப்படுகின்றன.

சுமார் 900 ஆண்டுகள் சைவக் கோயில்களில் பாடப்படும் பெருமை திருவெம்பாவையைச் சாரும்.

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் திருவெம்பாவையை திருவண்ணாமலையிலும், திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை திருப்பெருந்துறையிலும் பாடியுள்ளார்.

திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் தன்னை ஒருபெண்ணாகப் பாவித்து, சிவபெருமானைக் குறித்து பாடியுள்ளார். இதில் பெண்கள் சிவனுக்கு திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கின்றனர்.

பாவை நோன்பிருக்கும் பெண்கள், தூங்கிக் கொண்டிருக்கும் தம்முடைய தோழியரை எழுப்பி, அனைவரும் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளுக்கு கூட்டமாகச் சென்று நீராடி, தங்களின் வாழ்வு வளமாகவும், சிவனின் அடியவர்களே கணவனாக அமைய‌ அருளவும், சிவதொண்டைத் தொடரவும் வேண்டுவதாக திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

இதன் இருபது பாடல்களில் முதல் எட்டுப் பாடல்கள், பாவை நோன்பிருக்கும் பெண்கள் தோழிரை எழுப்பிக் கொண்டு, ஈசனின் புகழினைப் பாடிக் கொண்டு நீராடச் செல்வதாகப் பாடப்பட்டுள்ளன.

ஒன்பதாவது பாடலில், பாவை நோன்பிருக்கும் பெண்கள் தங்களின் பிரார்த்னையை இறைவனிடம் வைப்பதாகவும், பத்தாவது பாடலில், இறைவனின் புகழைப் பாடும் தன்மையைக் கேட்பதாகவும் பாடப்பட்டுள்ளன.

அடுத்து வரும் பத்து பாடல்களும், அனைவரும் சேர்ந்து இறைவனின் புகழினைப் பாடியபடி நீராடுவதாகப் பாடப்பட்டுள்ளன.

திருவெம்பாவையின் பாடல்களில் சில, பெண்களுக்கு இடையே நடைபெறும் உரையாடல்கள் போல அமைந்துள்ளன. ஒத்த வயதுடைய பெண்கள் பேசும் போது, அவர்களுக்கிடையே கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதை இப்பாடல்களில் காணலாம்.

திருவெம்பாவையின் இருபது பாடல்களின் முடிவிலும் எம்பாவாய் என்று நிறைவடைவது சிறப்பாகும்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம் கடல் கடந்து மலேசிய நாட்டிற்குச் சென்றுள்ளது. அங்கு மன்னரின் முடிசூட்டு விழாவின் போதும், சில திருவிழாக்களின் போதும் திருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம் பாடப்படுகிறது.

வ.முனீஸ்வரன்

திருவெம்பாவை பாடல்கள்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

மாலறியா நான்முகனும் காணா மலையினை

மானே நீ நென்னலை நாளை வந்து

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர் 

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

காதார் குழையாடப் பைம்பூண்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்

செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்  

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

கூவின பூங்குயில் கூவின கோழி

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

பப்பற வீட்டிருந்து உணரும் நின்அடியார்

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் 

 

One Reply to “திருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம்”

  1. ஆன்மீக கட்டுரை அருமை. ஐயா..!

    திருவெம்பாவை தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக் கோயில்களில் பாடப்பட்டு வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

    வாழ்த்துக்கள்…!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.