நல்வேளை – மருத்துவ பயன்கள்

நல்வேளை முழுத் தாவரமும் காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இலை, சளி, நீர்கோவை ஆகியவற்றைப் போக்கும். இலைச் சாறு தாது பலம் தரும். பூ கோழை அகற்றும். பசி உண்டாக்கும். தாவரப் பட்டை, தோலில் எரிச்சலூட்டும். காயத்தை உண்டாக்கும்.

விதை, குடல் வாயுவைப் போக்கும். குடல் புழுக்களை வெளியாக்கும். இசிவு நோயைக் கட்டுப் படுத்தும். வியர்வையை அதிகமாக்கும். விதை எண்ணெய், சொறி, சிரங்கு, புண் ஆகியவற்றின் மீது தடவ குணம் தரும். வாத சம்பந்தமான நோய்களையும் கட்டுப் படுத்தும்.

உதிரச் சிக்கல்களையும், பசியின்மையையும் குணப்படுத்தும். நல்வேளைச் செடியைப் பற்றி அகத்தியர் குணபாடம் குறிப்பிடும்போது “சிரநோய் வலி குடைச்சல் தீராச் சயித்தியம், உரநோயிவைக ளொழியும் உரமேவும் ….. பசி கொடுக்கும் நல்வேளை தன்னை நவில்” என்கின்றது.

ஓராண்டு வாழும் சிறுசெடிகள். நிமிர்ந்த வளரியல்பு கொண்டவை. தண்டில் நீண்ட வெண்மையான உரோமங்கள் காணப்படும். இவை இலேசாக ஒட்டும் தன்மை கொண்டவை. இலைகள் முட்டை வடிவமாகவும், ஐந்தாகக் கிளைத்தவை.

மலர்கள் வெண்மையானவை. காய்கள் நீண்டவை. விதைகள் சிறியவை. பழுப்பு நிறமானவை. இந்தியா முழுவதும் பாழடைந்த தரிசு நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் வேலிகளை ஒட்டி பொதுவாக பரவி காணப்படுகின்றன.

முதல் பருவ மழைக்குப் பின்னர் இந்தத் தாவரத்தை அதிகமாகக் காணலாம். தைவேளை என்கிற மாற்றுப் பெயரும் இந்த தாவரத்திற்கு உண்டு.முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

தாவரம் முழுவதும் ஒரு வித முக்கிய எண்ணெய் பரவிக் காணப்படுவதால் ஒரு விதமான மணமுள்ளதாகவும் பிசுபிசுப்பானதாகவும் இந்தச் செடி காணப்படும்.

காது வலி தீர இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 3 துளிகள் அளவு காதில் விட வேண்டும்.

இருமல் தீர ஒரு பிடி நல்வேளை இலைகளை, தேவையான அளவு உப்புடன் சேர்த்து அரைத்து பசையாக்கி சாப்பிட வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்த நல்வேளைச் பூச்சாறு பத்து துளிகள் தாய்ப்பாலுடன் கலந்து முதலுதவி சிகிச்சையாக உள்ளுக் கொடுக்கலாம்.

சீழ் கட்டிகள் உடைவதற்கு நல்வேளை இலையை அரைத்தோ அல்லது வதக்கியோ சீழ் கட்டிகள் மீது பற்றுப் போட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், மார்பு சளி குணமாக நல்வேளைப் பூக்களை சேகரித்து, கசக்கி, சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

குடல் தட்டைப் புழுக்களைக் கொல்ல நல்வேளை விதைகளை நெய் சேர்த்து வறுத்து, அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறுவர்களுக்கு ½ கிராம் பெரியவர்களுக்கு 4 கிராம் என்கிற அளவில் காலை மாலை மூன்று நாள்கள் உள்ளுக்கு கொடுக்க வேண்டும். சிறிதளவு வெந்நீர் குடிக்கலாம். நான்காம் நாள் விளக்கெண்ணெய் ½ தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க பேதியாகி குடலின் தட்டைப் புழுக்கள் வெளியாகும்.

நாய்வேளை

சிறு செடி இலைகள் கூட்டிலை அமைப்பானவை. ஒட்டும் உரோமங்கள் தாவரம் முழுவதும் காணப்படும். வயல் வெளிகளில் அறுவடைக்குப் பின்னர் அபரிதமாக வளர்ந்திருக்கும். காட்டுக் கடுகு, நாய்க்கடுகு, பெருவேளை ஆகிய பெயர்களும் உண்டு. இலை, விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

இலை, கட்டியை உடைக்கும் மருந்தாகவும், உடல் தளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படும். விதை குடல் வாயுவைக் குணப்படுத்தவும், குடல் புழுக்களை வெளியேற்றவும், இசிவு நோயை கட்டுப்படுத்தவும் பயன்படும்.

காது வலி குணமாக இலையை கசக்கிப் பிழிந்து சாறு 2 துளிகள் காதில் விட வேண்டும்.
புண்கள் குணமாக 10 கிராம் இலைகளை 100 மிலி நெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அதனைப் புண்களின் மீது பூச வேண்டும்.