தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்பவை சைவத்தின் தலைவனான சிவபெருமானைப் போற்றி பாடிய பன்னிரெண்டு நூல்களின் தொகுப்பாகும்.

முறை என்றால் நல்ல கருத்துக்களைக் கூறி நமது வாழ்வினை நெறிப்படுத்தக் கூடிய நூல் என்பதாகும். திரு என்பதை ‘தெய்வீகம் பொருந்திய’ எனக் கொள்ளலாம். எனவே திருமுறை என்பதற்கு தெய்வீக நூல் என்பது பொருள் ஆகும்.

பெரும்பாலான சிவாலயங்களில் பன்னிரு திருமுறைகள் ஆடலரசனான நடராஜருக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கபட்டிருக்கும்.

இத்திருமுறைகள் மொத்தம் 27 சிவனடியார்களால் வெவ்வேறு காலகட்டத்தில் சிவபெருமானின் மீது பாடப்பெற்றவை ஆகும். பின் இவை பன்னிரெண்டு புனித நூல்களாக தொகுக்கப்பட்டன.

சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இந்நூல்களில் உள்ளப் பாடல்களைப் பாடி இறைவனைப் போற்றி வழிபாடு செய்கின்றனர்.

இத்தொகுப்பினை பாடியவர்கள் 27 நட்சத்திரங்களாகவும், இந்நூல்கள் 12 சூரியன்கள் எனவும் போற்றப்படுகின்றன.

இந்நூல்கள் பக்தர்களை அஞ்ஞானம் என்ற இருளிலிருந்து ஞானம் என்ற வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. எனவே இவை தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படுகின்றன.

இந்நூல்கள் திருமணமானவர்கள், சிவனடியார்கள், யோகிகள், பக்தர்கள், துறவிகள் என எல்லோருக்கும் பொருந்தும் விதத்தில் அமைந்துள்ளது இதன் சிறப்பு அம்சமாகும்.

 

பன்னிரு திருமுறைகளின் வரலாறு

இராசஇராச சோழன் என்னும் சோழப் பேரரசன் கோவில்களில் வாய்மொழியாகப் பாடப்பெற்ற தேவாரப்பாடல்களைக் கேட்டு இப்பாடல்களைத் தொகுக்க எண்ணினார்.

தேவாரப் பாடல்கள் இருக்கும் இடத்தை விநாயகரின் அருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோவிலின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.

தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவினைத் திறக்க முடியும் என சிதம்பரம் கோவிலில் கூறினார்கள். காலஞ்சென்ற அம்மூவரையும் எவ்வாறு கொண்டு வருவது? என மன்னன் சிந்தித்தார்.

உடனே தேவார மூவரையும் சிலை வடிவில் அங்கு கொண்டு வந்து அறையினை திறக்கச் செய்தார். அங்கு ஓலைசுவடிகள் பல செல்லரித்து இருந்தன.

மீதம் உள்ளவற்றை நம்பியாண்டார் நம்பி கிபி பதினோராம் நூற்றாண்டில் பதினோரு திருமுறைகளாகத் தொகுத்தார்.

 

தேவாரம் பாடிய மூவர் மற்றும் மாணிக்க வாசகர்
தேவாரம் பாடிய மூவர் மற்றும் மாணிக்க வாசகர்

 

பின் அநாபாயச் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி சேக்கிழார் 64 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் பாடல்களைப் பாடினார்.

திருதொண்டர் புராணம் நூலானது 12-வது திருமுறையாக பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.

 

பன்னிரு திருமுறைகள்

1,2,3-ம் திருமுறைகள்

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1,2,3-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தையும், இசையும் மிளரச் செய்கின்றன.

 

4,5,6-ம் திருமுறைகள்

திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 2,3,4-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அப்பரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.

 

7-ம் திருமுறை

சுந்தரர் பாடிய பாடல்கள் 7-ம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் பாடிய பாடல்கள் சுந்தரர் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.

 

8-ம் திருமுறை

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. தேன்ரசம் கொட்டும் இவரின் பாடல்கள் இறைவனைச் சரணடைதல் மற்றும் பக்தி பற்றி விவரிக்கிறது.

 

9-ம் திருமுறை

திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருசோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது.

இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். சேந்தனார் மட்டும் திருப்பல்லாண்டு, திருவிசைப்பா இரண்டையும் பாடியுள்ளார். ஏனையோர் திருவிசைபாவினை மட்டும் பாடியுள்ளனர்.

 

10-ம் திருமுறை

திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பக்தியோடு யோகான முறைகளையும் எடுத்துக் கூறுகிறது.

 

11-ம் திருமுறை

திருஆலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய பதினோரு நபர்களால் பாடிய பாடல்கள் 11-ம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

11-ம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 

12-ம் திருமுறை

64 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12-ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் வேதங்கள்

முதல் திருமுறையின் முதல் பாடல் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ‘ஓ’ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது.

பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் ‘உலகெல்லாம்’ என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ‘ம்’ என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன.

பன்னிரு திருமுறைகள் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் இவை தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

10-ம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

11-ம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

12-ம் திருமுறை பாடல்கள் 64-ம் நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆவணி முதல் ஞாயிறுக்கு முன் 12 நாட்கள் பன்னிரு திருமுறைகள் பற்றிய உரையானது நிகழ்த்தப்படுகிறது. ஆவணி மாதம் முதல் ஞாயிறு அன்று திருமறை காண்டல் என்ற விழா சிவாலயங்களில் நடத்தப்படுகின்றது.

நாமும் வாழ்விற்குத் தேவையான வளங்களை அள்ளித்தரும் பன்னிரு திருமுறைகளால் இறைவனை ஆராதித்து வாழ்வின் நன்னிலை அடைவோம்.

வ.முனீஸ்வரன்

 

63 நாயன்மார் 9 தொகையடியார்

திருநீறு – ஒரு பார்வை

சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி?

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.