பாடம் – கவிதை

சில சொற்களோடு
தொலைந்த
பல மௌனங்களும்
காணாமற் போயின!

மனமூலையின்
இண்டு இடுக்குகளில்
தேடியும்
அகப்படவில்லை!

எங்கேனும்
ஒளிந்திருந்து தலை கவிழ்ந்து
ஓர் கணம்
எட்டிப் பார்க்கலாம்!

அவை
பின் விளைவுகளின்
காரணிகளாய் இருந்தமையால்
தொலைந்து போகட்டுமென
விட்டு விடலாம்!

ஆயின்
ஆராய்ச்சிக்கான
வாழ்வின் புரிதலுக்கு
அவை தேவை!

ஒரு சிறப்பில்லாத
பயன்படுத்தக் கூடாத
வகைமையின் கீழ்

அவற்றைக் காட்சிப்படுத்தல்
அவசியம்!

நடப்புகளை விழுங்கி
வீண்
விளைவுகளை விதைக்கும்
பல்வேறு தரப்புகளுக்கும்
இப்பாடம் விளங்குமா
எனத் தெரியவில்லை!

புதைந்து போன
நாகரிகங்களை
அகழ்வாராய்ச்சி செய்கையில்
அநாகரிகங்களும்
ஒளிந்திருத்தல் இயல்பு!

எஸ்.மகேஸ்
சென்னை
கைபேசி: 9841708284

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.