பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

பாண்டியன் சுரம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்பு நோயாகிய சுரத்தினை திருஞானசம்பந்தரைக் கொண்டு தீர்த்து அருளியதைக் குறிப்பிடுகிறது.

பாண்டியநாட்டில் சமண சமயம் பரவியது, திருஞானசம்பந்தரரின் மதுரையம்பதி வருகை, சமணர்கள் ஏவிய தீ பாண்டியனை வதைத்தது, பாண்டியனுக்கு உண்டான வெப்பு நோயை திருஞானசம்பந்தர் தீர்த்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.

பாண்டியன் சுரம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்து இரண்டாவது படலமாக அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்கு வருதல்

அரிமர்த்த பாண்டியனுக்குப் பின்னர் அவனுடைய வழித்தோன்றலாக நெடுமாறன் என்னும் கூன்பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான்.

கூன்பாண்டியன் போர்த்திறத்திலும், கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்கினான். மூவேந்தர்களிலும் சிறந்தவனாக விளங்கினான். சோழ அரசனின் மகளான மங்கையர்கரசியாரை மணந்திருந்தான்.

இவனுக்கு குலச்சிறையார் என்ற சிவனடியார் நல்ல ஆலோசனைகளைக் கூறும் மந்திரியாக அமைந்திருந்தார்.

கூன்பாண்டியன் காலத்தில் சமண சமயம் மதுரையில் பரவத் தொடங்கியது. அரசனும் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டு மக்களையும் சமண சமயத்தைப் பின்பற்றச் செய்தான்.

இதனால் மங்கையர்கரசியாரும், குலச்சிறையாரும் பெரிதும் வருந்தினர். சொக்கநாதரிடம் சைவம் மீண்டும் தழைக்க அருள்புரிய வேண்டினர்.

அப்போது ஒருநாள் சோழநாட்டில் இருந்து வந்த வேதியர் ஒருவரை மங்கையர்கரசியாரும், குலச்சிறையாரும் சந்தித்தனர். சோழநாட்டில் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தர் பதிகங்கள் பாடி சைவமணத்தை பரவச் செய்த செய்தியை அவ்வேதியரின் மூலம் அறிந்தனர்.

மேலும் அவர் மதுரையம்பதிக்கு வந்து சொக்கநாதரை வழிபட திட்டமிட்டு இருப்பதையும் தெரிந்து கொண்டனர்.

உடனே ஆளுடைய பிள்ளையான திருஞானசம்பந்தரை மதுரைக்கு விரைந்து வருமாறும், சைவசமயத்தை மதுரையில் மீண்டும் தழைக்க செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து ஓலை எழுதி வேதியரிடம் கொடுத்து அனுப்பினர்.

வேதியரும் திருமறைக்காட்டில் திருநாவுக்கரசருடன் தங்கியிருந்த திருஞானசம்பந்தரிடம் அவ்வோலையைக் கொடுத்தார்.

அப்போது திருநாவுக்கரசர் தற்போது கோளும், நாளும் நன்றாக இல்லை. ஆதலால் சிறிது காலம் தாழ்த்தி மதுரையம்பதிக்கு செல்லுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு ஞானசம்பந்தன் நமசிவாய மந்திரத்தை சொல்லும் சிவனடியார்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்னும் பொருளுள்ள கோளறு பதிகத்தைப் பாடி மதுரையம்பதிக்கு விரைந்தார்.

அவர் வாகீச முனிவரின் மடத்தில் தங்கி இருந்தார்.

பாண்டியனை வெப்பு நோய் தாக்குதல்

திருஞானசம்பந்தரின் வரவினை அறிந்த சமணர்கள் அபிசார வேள்வியைத் தொடங்கி கொடிய தீப்பிழம்பினை தோற்றுவித்து திருஞானசம்பந்தரை அழிக்குமாறு ஏவிவிட்டனர்.

அத்தீயானது திருஞானசம்பந்தர் வாட்டியது. உடனே தன்னுடைய இந்நிலைக்கு காரணம் பாண்டியன் சமணர்களை ஆதரித்ததே.

ஆதலால் இத்தீயின் வெப்பமானது பாண்டியனை சென்று அடையுமாறு திருஆலவாய் மேவிய என்னும் பதிகத்தைப் பாடினார்.

உடனே தீயின் வெப்பமானது வெப்பு நோயாக மாறி பாண்டியனைச் சென்றடைந்து அவனை வாட்டியது.

பாண்டியன் மீண்டும் சைவத்தை ஆதரித்தல்

வெப்பு நோயால் வருத்தம் கொண்ட பாண்டியன் சமணர்களை அழைத்து தனக்கு உண்டான இக்கொடிய நோயினை போக்குமாறு வேண்டுகோள் விடுத்தான்.

சமணர்களும் மயிற்பீலிகளைக் கொண்டு விசிறியும், நீரினைத் தெளித்தும் வெப்புநோயை தீர்க்க முற்பட்டனர். ஆனால் பாண்டியனின் வெப்புநோய் மேலும் அதிகரித்தது.

அப்போது மங்கையர்கரசியார் ஆளுடைய பிள்ளை ஒருவரே பாண்டியனின் வெப்புநோயை தீர்க்க வல்லவர் என்று கூன்பாண்டியனிடம் தெரிவித்தார்.

வெப்புநோயால் பாதிப்படைந்த கூன்பாண்டியன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனின் அழைப்பினை ஏற்று அரசனின் இருப்பிடத்திற்கு வந்தார்.

அங்கிருந்த சமணர்கள் பாண்டியனது வலப்புறத்து நோயை ஞானசம்பந்தரும், இடப்புறத்து நோயை தாங்களும் போக்குவதாக அறிவித்தனர்.

உடனே ஆளுடைய பிள்ளை தன்னிடமிருந்த திருநீற்றினை எடுத்தார். அதனைக் கண்டதும் சமணர்கள் இது மாயநீறு என்று கூறினர்.

இதனைக் கேட்டதும் சொக்கநாதரின் திருமடப்பள்ளியிலிருந்து சாம்பலை எடுத்து வரச்சொல்லி திருநீற்றுப்பதிகம் பாடி அச்சாம்பலை திருநீறாகக் கருதி கூன்பாண்டியனின் வலப்புறத்தில் தேய்த்தார்.

பாண்டியனைப் பற்றி இருந்த வலப்பக்க வெப்பு நோய் நீங்கியது. உடனே கூன்பாண்டியன் தன்னுடைய இடப்பக்க நோயை போக்குமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தான்.

திருஞானசம்பந்தரும் இடபுறமும் திருநீற்றினைத் தடவியதும் வெப்பு நோய் நீங்கியதோடு கூனும் நீங்கியது.

பேரழகுடன் திகழ்ந்த அப்பாண்டியன் சௌந்திரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். பின்னர் பாண்டியனும் பாண்டிய நாட்டு மக்களும் சைவசமயத்தைத் தழுவினர்.

பாண்டியன் சுரம் தீர்த்த படலம் கூறும் கருத்து

இறைவனிடம் மாறாத பக்தி கொண்டவர்களின் விருப்பங்களை இறைவன் கட்டாயம் நிறைவேற்றுவார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் மண் சுமந்த படலம்

அடுத்த படலம் சமணரை கழுவேற்றிய படலம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.