பிரண்டை – மருத்துவ பயன்கள்

பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.  மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.

பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.

பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.

நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.

மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும். வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.

அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.

Comments are closed.