பூசணி விதை – இயற்கை தூக்க மாத்திரை

பூசணி விதை உடல்நலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைய‌ கொண்டுள்ளது. இந்த சிறிய விதைக்குள் உள்ள அபரிதமான சத்துக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் நண்பன் கொடுத்து இதனை தின்றிருக்கிறேன். அவனுடைய அம்மா சமையலுக்கு வாங்கிய பூசணிக்காயில் இருந்த விதைகளை, விறகு அடுப்பு சாம்பலில் தோய்த்து உலர வைத்துப் பதப்படுத்தியதாகக் கூறினான். லேசான இனிப்புச் சுவையுடன் அருமையாக இருந்தது.

திருமண விழாவில் செய்யப்படும் இனிப்புகளில் இதனை சேர்ப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதனுடைய அளப்பரிய நன்மைகளை பெற நாம் கட்டாயம் இதனை உணவில் அளவோடு அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் பல நூற்றாண்டுகளாகவே பூசணி விதையானது உணவுப் பொருளாகவும், எண்ணெய் வித்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வணிக ரீதியாக பெரிய எண்ணெய் வித்து பயிராக பூசணிக்காய்கள் அவற்றின் விதைகளுக்காக மட்டுமே பயிரிடப்படுகின்றன.

நல்ல தரமான விதைகளைப் பெறுவதற்காக பூசணிப்பழம் முழுமையாக முதிர்ச்சி அடைந்தபின் அறுவடை செய்யப்படுகிறது.

பூசணி விதை அமைப்பு

ஒவ்வொரு பூசணியின் வெற்று மையக் குழியில் சுமார் ஐந்நூறு மேல்தோலுடன் உள்ள கிரீம் வெள்ளைநிற விதைகள் உள்ளன. இவ்விதைகள் வலைப்பின்னல் போன்ற நார்ப் பகுதியில் பிணைக்கப்பட்டு காணப்படுகின்றன.

 

பூசணியினுள் விதைகள்
பூசணியினுள் விதைகள்

 

இவ்விதைகள் அரை தட்டையாக, நீள்வட்ட வடிவத்தில், கூம்பு முனையைக் கொண்டு நீர்த்துளி போன்ற உருவமைப்பில் காணப்படுகின்றன. இவ்விதையினுள் ஆலிவ் பச்சை நிற இனிப்பான சுவையான சதைப்பகுதி உள்ளது.

 

மேல்தோல் நீக்கப்பட்ட பூசணி விதை
மேல்தோல் நீக்கப்பட்ட பூசணி விதை

பூசணி விதையின் வரலாறு

பூசணிக்காய் மற்றும் அதனுடைய விதைகள் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பூர்வீக அமெரிக்கர்களால் பயன்படுத்தப்பட்டன. எனவே இதனை அவர்கள் பொக்கிஷமாகக் கருதினர்.

பெரும்பாலும் பூசணி விதையானது ஒட்டுண்ணி மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பியர்களால் இவ்விதையானது உலகெங்கும் பரவியது. கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் இவ்விதையானது அன்றாட உணவின் ஒருபகுதியாக மாறியுள்ளது.

இந்தியா உட்பட ஆசியாவின் பிறபகுதிகளிலும் சமையல் மற்றும் மருத்துவ மரபுகளில் இதற்கு முக்கிய இடத்தை அளித்துள்ளனர்.

பூசணி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இவ்விதை மிகஅதிகளவு விட்டமின் இ, அதிகளவு விட்டமின் பி1(தயாமின்), பி3(நியாசின்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்), சி, ஏ ஆகியவையும் உள்ளன.

இவ்விதையானது மிக அதிகளவு மாங்கனீசு, பாஸ்பரஸ், செம்புச் சத்து, மெக்னீசியம், இரும்புச் சத்து, அதிகளவு துத்தநாகச் சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் செலீனியம், கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் இருக்கின்றன.

இவ்விதையானது மிகஅதிகளவு ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், அதிகளவு புரதம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இவ்விதையில் டிரிப்டோபான், குளுட்டமேட் உள்ளிட்ட அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, குறைந்தளவு கார்போஹைட்ரேட் முதலியவை காணப்படுகின்றன.

பூசணி விதையின் மருத்துவப்பண்புகள்

ஆழ்ந்த உறக்கத்திற்கு

இவ்விதையில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமானது செரடோனின் மற்றும் நியாசினாக மாற்றம் அடைகிறது. இந்த செரடோனின் உடல் மற்றும் மனத்திற்கு ஆறுதல் அளித்து ஆரோக்கியமான தூக்கத்தினை உண்டாக்குகிறது.

எனவே இதனை உண்டு ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம். இதனால் பூசணி விதை இயற்கை தூக்க மாத்திரை என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

இதய நலத்திற்கு

பூசணி விதைகளில் இருக்கும் பைட்டோஸ்டெரால்ஸ், ஒமேகா-3, நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.

இந்த சேர்மங்கள் இரத்த உறைவு மற்றும் பெருந்தமனி தடிப்பு அழற்சியைத் தடுக்கின்றன. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இவ்விதை குறைகிறது.

நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க

இவ்விதையில் உள்ள துத்தநாகச் சத்து நோய் தடுப்பாற்றலை அதிகரித்தல், செல் பிரிதல் மற்றும் வளர்ச்சியை சீராக்குதல், நுகர்திறன் மற்றும் சுவைக்கும் திறனை மேம்படுத்துதல், இன்சுலின் சுரப்பினை சீராக்குதல், தோலினை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு காரணமாகிறது.

இச்சத்து குறைபாட்டால் அடிக்கடி சளித் தொந்தரவு, மனஅழுத்தம், முகப்பரு, கற்றலில் குறைபாடு, குறைந்த எடையளவுள்ள குழந்தை பிறப்பு ஆகியவை உண்டாகிறது. எனவே துத்தநாகச் சத்து குறைபாடுள்ளவர்களுக்கும், நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க விரும்புவர்களுக்கும் இவ்விதைகள் அருமருந்தாகும்.

புற்றுநோயைத் தடை செய்ய

பூசணி விதைகள் வயிறு, நுரையீரல், குடல், மார்பு ஆகிய இடங்களில் புற்றுநோய் உண்டாவது மற்றும் பரவுதலை தடைசெய்கிறது. இவ்விதைகளில் உள்ள லிக்னான்கள் புற்றுநோய் தடுப்பாகவும், ஆன்டிஆக்ஸிஜென்டுகளாகவும் செயல்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

ஒட்டுண்ணியைத் தடுத்தல்

இதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸை தடுக்கும் பண்புகள் ஒட்டுண்ணியைத் தடைசெய்கின்றன. இதில் உள்ள மீடியோ ரெசினோல், பினோ ரெசினோல் மற்றும் லாரிசிரெசினோல் ஆகியவை பாக்டீயா மற்றும் வைரஸ்களை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளன. குடலில் உள்ள தட்டைப்புழுக்களை நீக்க இவ்விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆரோக்கியமான மனநிலைக்கு

இவ்விதையில் குளுட்டமேட் என்ற அமினோ அமிலம் அதிகளவு உள்ளது. காமா-அமினோ பியூட்ரிக் அமிலத்தின் தொகுப்புக்கு குளுட்டமேட் மிகவும் அவசியமானது.

காமா-அமினோ பியூட்ரிக் அமிலமானது மூளையில் உள்ள மனஅழுத்தத்தைக் குறைக்கும் வேதிப்பொருளாகும்.

இவ்வேதிப்பொருள் மனஅழுத்தம், பதட்டம், எரிச்சல் உள்ளிட்டவைகளைக் குறைத்து ஆரோக்கியமான மனநிலையை உண்டாக்குகிறது. எனவே பூசணி விதைகளை உண்டு அமைதியான மனநிலையைப் பெறலாம்.

சிறுநீரக கற்கள் உருவாக்கத்தைத் தடுக்க

இவ்விதையில் உள்ள டையூரிட்டிக் மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் காரணமாக இது உடலில் உள்ள யூரிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு நச்சுக்களை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது.

இதனால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் இவ்விதையானது கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகள் மற்றும் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.

சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கு

சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கு அமினோ அமிலங்கள் மிகவும் அவசியமானவை ஆகும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. பூசணி விதையில் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது. வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெறக் காரணமான புரதச்சத்தைப் பெற பூசணி விதை அருமையான தேர்வாகும்.

ஆஸ்டியோபோரோஸிஸைத் தடுக்க

வயது ஏறும் போது எலும்புகளின் அடர்த்தி குறைகிறது. எலும்புகளின் அடர்த்தி குறையும்போது எலும்பு முறிவு எனப்படும் ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் உண்டாகிறது.

பூசணி விதையில் உள்ள துத்தநாகம், கால்சியம், செம்புச்சத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கின்றன.

சீராக அடிக்கடி உணவில் இதனைச் சேர்த்துக் கொள்ளும்போது எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு ஆஸ்டியோபோஸிஸ் ஏற்படுவதைத் தடுக்கிறது.

உடலினை வலுவாக்குதல், உள்காயங்களை ஆற்றுதல், சர்க்கரை நோய் உருவாகும் வாய்ப்பினைக் குறைத்தல், ஆண்களில் விந்தணுக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலனை இவ்விதை மேம்படுத்துகிறது.

பூசணி விதையினை தேர்வு செய்யும் முறை

பூசணி விதையினை கடையில் வாங்கும்போது மேல்தோலுடன் உள்ள விதைகளை வாங்குவது சிறந்தது.

ஒரே சீரான நிறத்துடன், கச்சிதமான, கனமான, சலசல ஒலியை எழுப்பும் விதைகளை தேர்வு செய்யவும். முழுமையான பூசணி விதைகளை ஈரமில்லாத காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து பல மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பூசணி விதையானது அப்படியோ, வறுத்தோ உண்ணப்படுகிறது. இனிப்புகள், சாலட்டுகள், பிஸ்கட்டுகள், ரொட்டிகள், குக்கீஸ்கள், கலவை சாதம், விலங்குகளின் இறைச்சி, கூட்டுகள் ஆகியவற்றின் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.

இவ்விதை அலர்ஜி யாரேனும் ஒருவருக்குத்தான் ஏற்படும். முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா, மாம்பழம் ஆகியவற்றால் அலர்ஜி பாதிப்பு உள்ளானவர்களுக்கு இவ்விதையால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

உடல் நலம் பேணும் பூசணி விதையை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்து வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.