முருங்கை கீரை கூட்டு செய்வது எப்படி?

முருங்கை கீரை கூட்டு ஆரோக்கியமான சத்தான கூட்டு ஆகும்.

முருங்கை கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உணவுப் பொருள்.

இக்கீரையைக் கொண்டு பொரியல், சூப், கேழ்வரகு அடை உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.

பருப்பையும், கீரையையும் கொண்டு இது செய்யப்படுவதால், உடலுக்கு அவசியமான சத்துக்களான புரதம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றைக் கொண்டு ஆரோக்கியத்தை இது வழங்குகிறது.

மேலும் பருப்பு சேர்க்கப்படுவதால் இதனுடைய சுவையும் அபாரம்.

சிறுகுழந்தைகளுக்கு சூடான வெள்ளை சாதத்துடன் நெய் ஊற்றி, இதனைச் சேர்த்து சாப்பிட மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கும்.

இனி சுவையான முருங்கை கீரை கூட்டு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை – ஒரு கட்டு

பாசிப்பருப்பு – 75 கிராம்

தேங்காய் ‍ – 1/4 மூடி (மீடியம் சைஸ்)

சீரகம் ‍ – 1/4 ஸ்பூன்

தக்காளி – 1 எண்ணம்

சின்ன வெங்காயம் – 12 எண்ணம்

மசாலா பொடி – 2 ஸ்பூன்

மஞ்சள் பொடி – ‍ 1/4 ஸ்பூன்

பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு – ‍ 1/2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (பெரியது)

கறிவேப்பிலை – 2 கீற்று

செய்முறை

முதலில் முருங்கை கீரையை உருவி மஞ்சள் கலந்த தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.

(ஒருகட்டு முருங்கைக்கீரை அழுத்திப் பிடித்தால் இரண்டு கைபிடி அளவு இருக்கும்.)

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய், சீரகம், தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

தேங்காய், சீரகம் சேர்த்ததும்
விழுதாக்கியதும்

பாசிப்பருப்புடன் சீரகம், பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

மசித்த பருப்பு

வாணலியை அடுப்பில் வைத்துள அதில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும்போது

பின்னர் அதனுடன் சதுரத் துண்டுகளாக்கியுள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயத்தைச் சேர்த்ததும்

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். நான் நாட்டுத் தக்காளி சேர்த்துள்ளேன்.

தக்காளி சேர்த்ததும்

தக்காளி மசிய வெந்ததும் மசாலாப் பொடி சேர்த்துக் கிளறிவும்.

மசாலாப் பொடி சேர்த்ததும்

அதனுடன் முருங்கைக்கீரையைச் சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.

முருங்கைக்கீரையைச் சேர்த்ததும்

அதில் தேவையான உப்பு, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி போட்டு வேக வைக்கவும்.

தண்ணீர் சேர்க்கும் முன்பு
தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்ததும்

அவ்வப்போது கிளறி விடவும். விரல்களுக்கிடையே கீரையை வைத்து நசுக்கி கீரை வெந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

கீரை வெந்ததும்

பின்னர் அதனுடன் மசித்து வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து கிளறவும்.

பாசிப்பருப்பைச் சேர்த்தும்

1/2 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள தேங்காய், சீரக விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி 2 நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

தேங்காய் விழுது சேர்த்ததும்
தேவையான தண்ணீர் சேர்த்ததும்
தயார் நிலையில் முருங்கை கீரை கூட்டு

சுவையான முருங்கைக்கீரை கூட்டு தயார்.

இது ரசம் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் தொட்டு கொள்ள அற்புதமாக இருக்கும்.

குறிப்பு

மசாலாப் பொடிக்குப் பதிலாக மல்லித்தூள், மஞ்சள் பொடி, சீரகப் பொடி, மிளகாய் வற்றல் பொடி சேர்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் பாசிப்பருப்பிற்குப் பதில் முழுவதும் துவரம் பருப்போ அல்லது பாதிப்பாதி துவரம் பருப்பு, பாசிப் பருப்பு சேர்த்து முருங்கைக்கீரைக் கூட்டு செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.