லலிதா நவரத்தின மாலை பாடலும் பொருளும்

லலிதா நவரத்தின மாலை, அகிலத்தின் அன்னையான லலிதா அம்பிகையின் மீது அகத்திய முனிவரால் பாடப்பட்டது.

எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இப்பாடல், அன்னையை வழிபட மிகவும் ஏற்றது.

இப்பாடல் காப்பு, வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம், கோமேதகம், பத்மராகம், வைடூரியம், பாடலின் பலன் மொத்தம் பதினொரு பகுதிகளைக் கொண்டுள்ளது.

இப்பாடல் இயற்றப்பட்ட முறை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் என்னும் தலத்தில் அகத்தியருக்கு ஹயக்ரீவர் லலிதா சஹசர நாமத்தை உபதேசித்தார்.

ஒரு பௌர்ணமி அன்று அகத்தியரும் திருமீயச்சூர் தலத்தின் நாயகியான லலிதாம்பிகையை லலிதா சஹசர நாமத்தை கூறி வழிபட்டார்.

அப்போது மனம்மகிழ்ந்த அம்மை அகத்தியருக்கு நவரத்தினங்களின் வடிவாக காட்சி அளித்தாள்.

அகத்தியர் தான் கண்ட அம்மனின் திருவுருவத்தை லலிதா நவரத்தின மாலையாக எல்லோருக்கும் எளிதில் புரியும்படி பாடினார்.

இதனை தினமும் கூறி வழிபட செல்வ செழிப்புடன் சகல நன்மைகளும் கிடைக்கும்.

லலிதா நவரத்தின மாலை பாடல்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்

பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்

சேர்க்கும் நவரத்தின மாலையினைக்

காக்கும் கணநாயக வாரணமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்

கண்மூடி நெடுங்கன வானதவம்

பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்

பெரும் பிழையேன் பேசத்தகுமோ

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்

பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே

வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

நீலம்

மூலக் கணலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக்கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒளிக்குவையே சரணம்

நீலத்திரு மேனியிலே நினைவாய்

நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக்குமரி வருவாய் வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

முத்து

முத்தே முத்தொழில் ஆற்றிடவே

முன்னிற்று அருளும் முதல்வி சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாசினியே சரணம்

தத்தேறிய தனயன் தாய் நீ

சாகாத வரம் தரவே வருவாய்

மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

பவளம்

அந்தி மயங்கிய வானம் விதானம்

அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர்

தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ

எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள்

மந்திர வேத மயப் பொருள் ஆனாள்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

மாணிக்கம்

காணக் கிடையா கதி ஆனவளே

கருதக் கிடையாக் கலை ஆனவளே

பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே

புனையாக் கிடையாப் புதுமைத்தவளே

நாணித்திரு நாமமும் நின் துதியும்

நவிலாதவரை நாடாத அவளே

மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

மரகதம்

மரகத வடிவவே சரணம் சரணம்

மதுரித பதமே சரணம் சரணம்

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

சுதிஜதி லயமே இசையே சரணம்

அரஅர சிவ என்று அடியவர் குழும

அவர்அருள் பெற அருள்அமுதே சரணம்

வர நவநிதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்

போன்றாது பயன் குன்றா வரமும்

தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்

திடமாய் அடியேன் பொழியும் திறமும்

கோமேதகமே குளிர்வான் நிலவே

குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்

மாமேருவிலே வளர் கோகிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

பதுமராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும

ராக விகாச வியாபனி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணி

சாம்பவி சந்த்ர கலாதரி ராணி

அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி

மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

வைடூர்யம்

வலைஒத்த வினை கலைஒத்த மனம்

மருளப் பறையா ஒலிஒத்த விதால்

நிலையற் எளியன் முடியத் தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும்

அடியார் முடிவாழ் வைடூரியமே

மலையத்துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

பயன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா

நவரத்தின மாலை நவின்றிடுவார்

அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்

சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)

 

பாடலின் பொருள்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே

ஐந்து அறங்களையும் கடைமையாக செய்பவளும், நலத்தினை தன் புன்னகையால் பேணுபவளுமாகிய புவனேஸ்வரி அன்னையின் மீது பாடப்படுவது இந்த நவரத்தின மாலை நூல்.

இந்த நூல் நன்கு அமைய கணங்களின் நாயகனாகிய கணபதி காக்க வேண்டும்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

1.வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெரும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

கற்க வேண்டிய நூல்கள் பலவற்றை பிழையில்லாமல் கற்றவர்கள் தெளிவு பெறவில்லை.

உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று கண்மூடி தவத்தினைச் செய்வதே கதி என்று இருந்து தவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லை.

அவர்கள் நிலை இப்படி இருக்கும் போது மிகத்தாழ்ந்த, பிழைகள் புரிந்தவர்கள் ஏதாவது பேச முடியுமா?.

மிகவலிமையான பகைவர்களை அழிக்க வயிரத்தால் செய்த படைவாளினை எமனாக பற்றி எடுத்தவளான அன்னையே!

உன்னை வணங்கும் அடியவர்களுக்கு எல்லாம், வற்றாத சுனையைப் போல அருள்புரியும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

நீலம்

மூலக் கணலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திரு மேனியிலே நினைவாய்
நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

மூலாதாரம் என்னும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி என்னும் சக்தியே உன்னை சரணடைகிறேன்.

முதலும் முடிவும் ஆனவளே உன்னை சரணடைகிறேன். அழகியே கிளி போன்றவளே உன்னைச் சரணடைகிறேன்.

குன்றாத ஒளியின் கூட்டாமாகத் திகழ்பவளே உன்னைச் சரணடைகிறேன்.

உன்னுடைய நீல நிறமான திருமேனியை நினைத்து தியானித்து மற்ற நினைவுகள் இன்றி அடியேன் நின்றேன்.

பாலா திரிபுரா சுந்தரி எனும் வாலை குமரி எனக்கு காட்சி அளிப்பாய். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

முத்து

முத்தே முத்தொழில் ஆற்றிடவே
முன்னிற்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் குறைவறச் செய்யும் வண்ணம் கடவுளர்களுக்கு அருள் செய்த முதலான தெய்வமே, முத்தினைப் போன்றவளே உன்னை சரணடைகிறேன்.

எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் காரணமானவளே உன்னைச் சரணடைகிறேன்.

வேதங்கள், உபநிடதங்கள் என எல்லாவற்றிலும் நிலைத்து வாழ்பவளே உன்னைச் சரணடைகிறேன்.

நீயே தஞ்சம் என்று சரணடைந்த உன் மகனான எனக்கு தாயாகிய நீ என்றும் அழியாத வரத்தைக் கொடு.

மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் அங்கும் இங்கும் அலையும் வாழ்வு இல்லாமல் என்றும் அழியாத வாழ்வை எனக்கு அருள வேண்டும்.

அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

பவளம்

அந்தி மயங்கிய வானம் விதானம்
அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள்
மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

அந்தியாகிய மாலைப்பொழுது வானம் அன்னை நடனஞ் செய்யும் ஆனந்த மேடையாகும்.

சிந்தையாகிய மனம் மகிழும்படி வளம் பொழிந்து இந்த உலகத்தை ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ?.

அன்னையே, என்தந்தையாகிய இறைவனான சிவபெருமானின் இடப்பாகத்திலும், என் மனதிலும் இருக்கின்றாய்.

உன்னை எப்போதும் எண்பவர்களுக்கு என்றும் மிகுதியான அருளைப் பொழிகின்றாய்.

மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளினைக் கொண்டுள்ள அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

மாணிக்கம்

காணக் கிடையா கதி ஆனவளே
கருதக் கிடையாக் கலை ஆனவளே
பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே
புனையாக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாத அவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

எளிதில் காண்பதற்கு கிடைக்காத நற்கதியிiனை உடையவளே. எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலையின் வடிவானவளே.

அணிவற்கு அரிதான அழகு அணியானவளே. கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே.

உன்னுடைய திருநாமத்தையும், துதிகளான பாடல்களையும் பாடமுடியாமல் குறைபடுபவர்களை நீ என்றும் நாடமாட்டாய்.

மாணிக்கத்தின் ஒளிக்கதிரினைப் போன்றவளே. அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

மரகதம்

மரகத வடிவவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஅர சிவ என்று அடியவர் குழும
அவர்அருள் பெற அருள்அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

மரகத பச்சை நிறத்தினை உடையவளே உன்னை சரணடைகிறேன். தேன் பொழியும் உன்னுடைய திருவடிகளைச் சரணடைகிறேன்.

தேவர்களின் தலைவனான இந்திரன் உன்னுடைய பாதங்களை பணிய திகழ்ந்திருக்கும் அம்மையே உன்னை சரணடைகிறேன்.

சுதி, ஜதி, லயம் போன்ற இசையின் உறுப்புகளாகி, இசையின் வடிவாக திகழ்பவளே உன்னை சரணடைகிறேன்.

அரஅர சிவ என்று பாடிக் கொண்டு வரும் அடியவர்களுக்கு இறைவனின் அருள் பெறும்படி அருள்புரியும் அமுதமானவளே உன்னை சரணடைகிறேன்.

ஒன்பது விதமான செல்வங்களுக்கு அதிபதியே உன்னை சரணடைகிறேன். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்
போன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் பொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

இந்த புவியில் நான் புரியும் எல்லாச் செயல்களும், எந்த வித குறைகள் இல்லாமல் எல்லா பயன்கள் குறைவின்றி கிடைக்க வரத்தினை அருளுபவளே.

தீயிலிட்டு என்னைப் பொசுக்கினாலும் ஜெயசக்தி என்று உன்னை அடியேன் சொல்லக்கூடிய வீரத்தை தாயே நீ அருளுவாய்.

கோமேதகமே, வானத்தில் இருக்கும் குளிர்ந்த நிலவே, குழலைப் போன்று இனிய வாய்மொழியினை உடையவளே, மாமேரு மலையில் வாழும் கிளியாகிய அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

பதுமராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாச வியாபனி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

இன்பத்தினை அருளுபவளே, இன்பத்தின் வடிவானவளே, அழகிய கண்களை உடையவளே, பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே அம்மையே.

நிலையில்லாத மனநோய்களை நீக்குபவளே. அனைத்து கலைகளையும் அறிந்தவளே.

சம்புவின் சக்தியான சாம்பவியே. பிறைச்சந்திரனை அணிந்தவளே. தலைவியாக விளங்குபவளே.

கருநிறத் திருமேனியைக் கொண்டவளே. எல்லா விதமான அணிகலன்களும் அணிந்து இருப்பவளே.

மரணமில்லா பெரு வாழ்வின் உருவே. என்றும் மங்கலகரமானவளே.

அழகிய மேருமலையின் சிகரத்தில் நிலைத்து வசிக்கும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

வைடூர்யம்

வலைஒத்த வினை கலைஒத்த மனம்
மருளப் பறையா ஒலிஒத்த விதால்
நிலையற் எளியன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

 

நான் செய்த முன்வினைப் பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது.

அந்த மான் மருளும்படி அறையும் பறை போன்றவை இந்த உலகத்தின் இன்பதுன்பங்கள்.

இப்படி உலகின் இன்ப துன்பங்களால் மானைப் போன்று என் மனம் நிலையற்று அலைகழிக்கப்படுகிறது.

இந்த துன்பத்தால் நான் அழிந்து போகலாமா?. என்னை அலைகழிக்கும் துன்பங்கள் தூளாகப் போகும்படி எனக்கு வரத்தினை அருளுவாய்.

மனஅலைக்கழிப்பு இன்றி அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியவர்களன் திருமுடியில் வாழும் வைடூரியமே.

ம‌லையத்துவச‌ பாண்டியனின் மகளான மீனாட்சியே வருவாய். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

பயன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)

 

எல்லா நாட்களிலும் இந்த நவரத்தின மாலையைப் பாடித் துதிப்பவர்கள் எல்லா நலன்களையும் கிடைக்க பெறுவார். சிவபக்தர்களில் ரத்தினமாகவும் ஜொலிப்பார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.