வானம்

கவிழ்த்த நீலச் சட்டி போலக்

கண்முன் தோன்றும் வானம்! – ‍ நாம்

கண்முன் தோன்றும் வானம்!

 

காலை மாலை கதிரைக் காட்டி

உலகைக் காக்கும் வானம்! – இந்த‌

உலகைக் காக்கும் வானம்!

 

எட்டி நடந்தால் எட்டிப் போகும்

இருக்க இருக்கும் வானம்! – அருகில்

இருக்க இருக்கும் வானம்!

 

பட்டப் பகலில் கடலைப் போல‌

பரந்து கிடக்கும் வானம்! – கண்முன்

பரந்து கிடக்கும் வானம்!

 

புளியைப் போல நிறத்தைக் காட்டிப்

புதுமை காட்டும் வானம்! – அடிக்கடி

புதுமை காட்டும் வானம்!

 

ஒளியைத் தீயை மழையைக் காற்றை

உலகுக் களிக்கும் வானம்! – இந்த‌

உலகுக் களிக்கும் வானம்!

– கவிஞர் வாணிதாசன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.